ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நடிகை வின்சி நிவேதா வாக்குமூலம்

 

சென்னை மாநகர காவல்துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நடிகை வின்சி நிவேதா (வயது 26) என்பவர், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், தாமும் நடிகை அஞ்சு கிருஷ்ணா (வயது 30) என்பவரும் இணைந்து சினிமா துறையைச் சேர்ந்த நபர்களுக்குப் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேற்கண்ட வழக்கில், முன்னதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், விசாரணையில் சினிமா பிரபலங்களுக்குப் போதைப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில், நடிகைகள் அஞ்சு கிருஷ்ணா, வின்சி நிவேதா உள்ளிட்ட மொத்தம் ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வின்சி நிவேதா அளித்த வாக்குமூலத்தின் விவரம் பின்வருமாறு:

தமது சொந்த ஊர் தர்மபுரி என்றும், எம்.சி.ஏ. (கணினி அறிவியல்) பட்டம் பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். சினிமா துறையில் நடிகை மற்றும் இயக்குநராகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்குடன், 2021ஆம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில், ஒரு குறும்பட இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தபோது, அவர்மூலம் ‘மெத் ஆம்பெட்டமைன்’, ‘கோகைன்’ உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் அறிமுகமானதாகவும், அதன்பின் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி போதைப் பொருட்களுக்கு அடிமையாகியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறும்பட இயக்குநர்மூலம் பல இயக்குநர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டு, துணை நடிகையாகச் சில திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும், போதைப் பொருட்களின் தேவையினால் அவற்றை விற்பனை செய்யும் நபர்களைத் தேடியபோது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின்ஷா (வயது 27) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விபின்ஷா, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்தி சென்னைக்கு கொண்டு வந்து வழங்கி வந்ததாகவும், காலப்போக்கில் தாமும் விபின்ஷாவும் சேர்ந்து போதைப் பொருள் விற்பனையில் கூட்டாளிகளாகச் செயல்பட்டதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் இரவு விருந்தின்போது நடிகை அஞ்சு கிருஷ்ணாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் இருவரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி, அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அஞ்சு கிருஷ்ணாவுக்கு சினிமா பிரபலங்களுடன் பரந்த அறிமுகம் இருந்ததால், அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி போதைப் பொருட்களை விற்பனை செய்வதில் அவரையும் ஈடுபடுத்தியதாக வின்சி நிவேதா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக, சென்னை வடபழனியில் ஒரு வாடகை குடியிருப்பு வீடு எடுத்துத் தங்கியிருந்ததாகவும், அங்குப் படுக்கை அறையில் உள்ள மெத்தையின் கீழ் மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், விபின்ஷாவுக்கு சென்னையில் இருந்த நண்பர்களின் உதவியுடன் கூடப் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட வாக்குமூலம் அடிப்படையில், சட்டப்படி மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல