சனி, 13 மார்ச், 2010

துயரம் தீர்த்த துணைவி

அது ஒரு சிறிய அழகிய தமிழ் கிராமம். அந்தக் கிராமத்தில் கோபாலசாமி எனும் ஒரு நபர் தனது மனைவியுடனும் மூன்று பிள்ளைகளுடனும் வசித்து வந்தார். பிள்ளைகளுள் இருவர் ஆண்பிள்ளைகள். மூத்தவன் ஆனந்தன். இளையவன் கோபிநாதன். அவனை ‘கோபி’ என்றே அழைப்பார்கள்.

ரதி கடைக்குட்டி; வீட்டுக்கு செல்லப்பிள்ளை. இவர்கள் தாயும், தந்தையும், பிள்ளைகளுமாக சந்தோஷம் ததும்ப வாழ்ந்து வந்தார்கள்.

கோபாலசாமி சிறிய தொழில் செய்து, அதில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து, பிள்ளைகளை படிக்க வைத்து வாழ்ந்து வருகின்ற காலத்தில் ஒருநாள் மனைவி கேட்கின்றாள், “என்னங்க நீங்க உழைக்கின்ற உழைப்பு பிள்ளைகளுக்கும் நமக்கும் சாப்பாட்டுக்கே போதியதாக இல்லை.

அப்போ பிள்ளைகள் படிக்கும் செலவை எப்படி நாம் கட்டுவது” அப்போது கணவன் கோபாலசாமி சொல்கிறார், “என்ன செய்வது? பார்ப்போம். மேலே ஒருவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான்”.

காலம் நமக்கு வராமலா போய்விடும் என்று கணவன் சொல்ல, அதற்கு மனைவி “என்னங்க உங்களிடம் நான் ஒன்று சொல்வேன் அதற்கு கோபிக்காம பதில் சொல்லுங்க” “கோபாலசாமியும் சரி சொல்லேன் என்ன வென்றுதான் கேட்போம்” என்று சொல்ல அதற்கு மனைவி சொல்கிறாள் “என் தோழி என்னிடம் ஒரு விஷயம் சொன்னாள்.

‘ஏண்டி உன் கணவன் உழைப்பே உன் குடும்பத்துக்கே போதாத நிலையில் உன் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு அப்போ பிள்ளைகளின் படிப்புக்கு பணத்துக்கு எங்கடி போவ பேசாம எங்கூட வெளிநாடு வந்திரு குடும்ப செலவையும் பார்த்துக்கலாம்.

பிள்ளைகளின் செலவையும் பார்த்துக்கலாம்’ என்று சொன்னாங்க. நீங்க என்னங்க சொல்aங்க நான் வெளிநாடு போகட்டுமா? என்று மனைவி கணவனிடம் கேட்டாள். அதனை கேட்ட கோபாலசாமி “உழைத்து குடும்பத்தை காப்பாற்றுவது நல்ல விஷயந்தான்.

ஆனால், கணவனையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு நீ கண்ணுக்கு தெரியாத தூரம் போறது எனக்கு ஏதோ நல்லதென்று தெரியல்ல. ஆனால் நீ உன் மனசில ஏதோ ஒரு அற்ப ஆசைய வளர்க்கிற தென்பது மட்டும் தெரியுது?

என்று ஆதங்கத்துடன் சொல்ல, அதற்கு மனைவி “ஆசை இல்லேங்க நம்ம குடும்ப நிலவரத்தையும் பற்றித்தான் சொல்றன்” என்று நாசூக்காகக் கூறுகிறாள். அதற்கு கணவன் கோபாலசாமி சொல்கிறான் “எது எது எப்படி நடக்கனும் என்று இருக்கோ அது அப்படியேதான் நடக்கும்.

ஊம் சரி, உன் விருப்பம் எப்படியோ அதன் படியே நடக்கட்டும்” என்று கணவன் கோபாலசாமி சொல்கிறார். அதற்கு மனைவி சொல்கிறாள் “இல்லீங்க உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா நான் வெளிநாடு போக இல்ல என்று கூறுகிறார். அதற்கு கோபாலசாமி சொல்கிறார் “போகணும் என்று முடிவெடுத்தப்போ நான் என்ன குறுக்க நிற்கிறது? சந்தோஷம் போய்வா.

நான் எப்படியாவது யார் காலில விழுந்தாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணுறன். இங்க இருந்து நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்றன். இனி ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். முதல்ல பாஸ்போட்டுக்கு உண்டான வேலையைக் கவனிப்போம். மீதிய அப்புறம் பார்ப்போம். இப்போ படுத்து உறங்குவோம். மீதிய விடியக் காலையில கதைப்போம்.

மறுநாள் காலை உதயமானது. மனைவி வெளிநாடு போவதற்கான வேலைகள் யாவும் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. இப்படியே சில காலம் சென்று மனைவியும் வெளிநாடு போய்விட்டாள்.

மனைவி வெளிநாடு போனபின் கோபாலசாமி, அவர் தொழிலையும் பார்த்துக் கொண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தார். மனைவியும் பணம் அனுப்புவதுண்டு.

அந்தப் பணத்தை மனைவி வெளிநாடு செல்வதற்காக வேண்டியவர்களிடம் வட்டியும் பணமுமாக சிறுக சிறுக கொடுத்து, அவர்களின் கடன்கள் முடிந்தும் முடியாமலும் இருந்தன. இப்படியே மனைவி வெளிநாடு சென்று ஒரு ஆண்டு உருண்டோடியது.

ஒரு நாள் கோபாலசாமி பஸ்ஸில் பிரயாணம் செய்து கொணடு இருக்கும் போது கோபாலசாமிக்கு நெருக்கமான நபர் ஒருவர் சந்தித்தார். உடனே “கோபாலசாமி” என்று கோபாலசாமியின் முதுகில் தட்டினார். கோபாலசாமி திரும்பிப் பார்த்தார். ஆ!சந்திரன்!! எப்படி இருக்கீங்க? சந்திச்சி ரொம்ப நாளாச்சி.

சந்திரன் கோபா லசாமியைப் பார்த்து “கோபால் என் மனசில ஒரு ஆசை. நானும் நீயுமாக சேர்ந்து ஒரு தொழில் செய்தால் என்னா? ஆ... பணம் எல்லாம் நான் போடுறன் தொழிலை நீங்க கவனிச்சிக்கனும்” என்று கோபாலசாமியிடம் சந்திரன் கூறினார். “அதற்கென்ன முன்பணம் நீங்க போடும் போது நான் மறுப்பு தெரிவிக்கவா போகப்போறன் ஆரம்பிப்போம்” என்று கோபாலசாமி கூறினார்.

உடனே சந்திரனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. சந்திரன் சொல்கிறார், “கோபால் நான் நாளை காலையில உங்க வீட்டுக்கு பணத்தோட வாறன். அங்க வந்து மீதியைக் கதைப்போம். சரி நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது நான் போய்ட்டு காலையில வாறன்”.

சந்திரன் இறங்கியதும் கோபால் வீடு வந்து சேர்ந்தார். மறுநாள் காலை சந்திரன் கோபாலசாமியின் வீட்டுக்கு, அவர்கள் இருவரும் தாம் செய்யப்போகும் தொழிலைப்பற்றி கலந்து ஆலோசித்து, தொழிலை ஆரம்பித்தனர். தொழிலும் பரவாயில்ல. ஆஹா ஓகோ வென்று இருந்தது.

இப்படி இவர்கள் செய்கிற தொழிலில் சிறு தொகையை கோபாலசாமிக்கும் கொடுத்து வருகிறவேளை திடீர் என சந்திரனுக்கு வீட்டில் இருந்து போன் அழைப்பு வந்தது. சந்திரன் கோபாலசாமியை கூப்பிட்டு “கோபால் நான் வீட்டுக்கு அவசரமாக போகவேண்டி இருக்கு.

அதனால என்னுடைய தொழிலை நீ எடுத்து உன்னுடைய தொழில்போல நடத்து. நான் வந்ததும் பிறகு கணக்கு வழக்கைப் பார்ப்போம்” என்றார்.

அதற்கு கோபாலசாமி சரி என்று தலையாட்டினார். சந்திரனும் ஊர்போய் விட்டார். கோபாலசாமி தொழில் ஆரம்பித்த நாளிலிருந்து கோபாலுக்கு தொழில் கைகொடுக்கவில்லை. எல்லாம் நஷ்டமாகவே போய்க் கொண்டிருந்தது.

பிறகு கோபால் தன் வீடு, காணிகளை விற்றும் தன் கடனை ஈடு செய்ய முடியவில்லை. இதனால் கடன் அவர் மனதை உருக்கிக்கொண்டிருந்தது. இப்படி கோபாலசாமி கவலையும் துயரமுமாய் இருக்கும் வேளையில் ஒரு சந்தோஷமான செய்தி கோபாலசாமிக்கு வந்தது.

கோபாலசாமியின் மனைவி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவதாக உள்ள செய்தி கடிதமூலமாக வந்தது.

அந்தக் கடிதத்தைப் பார்த்த கோபாலசாமி மிகவும் சந்தோஷம் அடைந்தார். அந்தக் கடிதத்தில் அவனை மகிழ்வித்த செய்தி “நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களின் துயரங்களை போக்க நான் பணமும் நகையுமாய் கொண்டு வருவேன்.

அதை வைத்து நம் கடனை அடைத்து நாம் சந்தோஷமாக வாழலாம்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாகும். அதைப்பார்த்த கோபாலசாமி மிக மிக சந்தோஷமடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மனைவியும் வீடு வந்து சேர்ந்தார். மனைவியைப் பார்த்த கோபாலசாமிக்கு எல்லை தாங்க முடியாத சந்தோஷம். மனைவியைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.

பிள்ளைகளையும் கட்டித் தழுவி முத்தமிட்டார். பிறகு கணவன் பட்ட கடனை அடைத்து இழந்த வீட்டையும் மீட்டு இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

க. மகாதேவன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல