நடிகை ரம்பாவுக்கும் பெரும் தொழிலதிபர் இந்திரனுக்கும் நாளை திருப்பதியில் திருமணம் நடக்கிறது.
இந்த நேரம் பார்த்து ரம்பாவின் தாயார் மீது செக் மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.
மதுரை, கீழ அனுமந்தராயன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரன் (வயது 50). இவர் மதுரை 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நான் சினிமா வினியோக நிறுவனத்தில் மேலாளராக உள்ளேன். பிரபல திரைப்பட நடிகை ரம்பாவின் தாயாரான உஷாராணி, தனது மகன் வாசுவை திரைப்படங்களை வினியோகம் செய்யும் துறையில் ஈடுபடுத்த விரும்பினார்.
இதற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்பட்டதால் என்னிடம் கடந்த 10.10.2004 அன்று ரூ.5 லட்சம் கடன் கேட்டார். சினிமா துறையில் வரும் வருமானத்தில் இருந்து அந்த பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறியதால் நானும் பணத்தை கொடுத்தேன்.
இதற்காக சென்னையில் உள்ள அவரது வங்கி கணக்கில் இருந்து 17.2.2005 தேதியிட்ட ரூ.5 லட்சத்துக்கான செக் கொடுத்தார். ஆனால் அவரது வங்கி கணக்கு அந்த தேதிக்கு முன்பாக முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறி நான் செலுத்திய செக் திரும்பி வந்தது.
எனவே அவர் மீது மாற்று ஆவண முறை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்...," என்று சங்கரன் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த சில விசாரணைகளுக்கு உஷாராணி நேரில் ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து உஷாராணிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்த மாஜிஸ்திரேட்டு ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக