இந்த பீடாசனமும் உட்கட்டாசனத்தை ஒத்ததோர் ஆசனமாகும்.
செய்முறை: 1. இரண்டு காற்பாதங்களும் சேர்ந்த நிலையில் நேராக நிமிர்ந்து தடாசன ஸ்திதி நிலையில் நிற்கவும்.
2. இடுப்பின் இரண்டு பக்கத்திலும் கைகளை ஊன்றிக் கொள்ளவும்.
3. பின்னர் முழங்கால்களை இலேசாக மடித்து ஒரு இருக்கையில் அமருவது போன்ற நிலைக்கு வரல் வேண்டும்.
4. அதாவது நாற்காலி ஒன்றின் மேலமர்ந்தால் எப்படி காட்சி தருவோமோ அந்த நிலையில் இருக்க வேண்டும்.
5. முழங்கால்களை மட்டும் மடித்து அமரும் நிலையில் இருக்க வேண்டுமேயொழிய உடலின் மற்றைய உறுப்புகள் விறைப்பாகவே இருத்தல் வேண்டும்.
6. இப்படியே ஒரு சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின் முழங்கால்களை நேராக்கி நின்ற நிலைக்கு வந்து சிதிள தடாசனத்தில் ஆறுதலாக நிற்கவும்.
நேர அளவு
குறைந்தது ஒரு நிமிடமாவது நிற்க முயல வேண்டும்
சுவாசம்
ஆழமான சுவாசத்தை இழுத்து விடவும்
குறிப்பு
ஆசனத்தின் இறுதி நிலையில் (நிலை 5) தொடைகள் இரண்டும் சமமாக, ஒட்டிய நிலையில் இருக்க வேண்டும். இந்நிலையில் நாம் இடுப்பில் வைத்திருக்கும் கைகளை எடுத்தல் கூடாது.
இறுதி நிலையில் நாம் அமர்ந்திருப்பது போன்ற பாவனையில் நம்முடைய முழங்கால்களை மட்டுமே மடிந்து காணப்படல் வேண்டுமேயொழிய நமதுடல் விறைப்பாகவே இருக்க வேண்டும். அதை மடித்தோ அல்லது கூன் விழும்படியோ வைக்கக் கூடாது.
மனோ நிலை
கழுத்து மற்றும் முதுகு முடியுமானளவு நேராக இருக்கட்டும். கால்தொடை பூமிக்கு சமாந்தரமாக வரட்டும், கால்பாதங்கள் ஆடாமல் இருக்கட்டும் போன்ற எண்ணங்களோடு சுவாசத்தை நன்கு அவதானிக்கவும்.
பலன்கள் 1. இடுப்பிலே எந்த வியாதியும் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
2. இடுப்பை வலுவூட்டக் கூடிய ஆசனமாக இவ்வாசனம் அமைந்திருக்கின்றது. 3. ""தொள தொள'' வென்று தொங்கிக் கொண்டிருக்கும் தொடைகளையும் பிருஷ்டத்தையும் இறுகச் செய்கிறது.
4. இவ்வாசனம் தொடைப்பகுதிக்கு அளவில்லா வல்லமையையும் ஆற்றலையும் தருகிறது. 5. தொடைக்கால் தசைகளுக்கு நல்ல உறுதியை தருகிறது.
6. முழங்கால்களை உறுதியுடன் விளங்கச் செய்ய இவ்வாசனமானது பெரிதும் துணை புரிவதனால் ""வல்லமையுடைய ஆசனம்'' என அழைக்கப்படுகின்றது.
7. கணுக்கால்கள் உறுதியடைகின்ற காரணத்தினால் இந்த ஆசனம் கணுக்கால் வலி, பாதங்களில் வலியுடையவர்களுக்கு மிகவும் பிரயோசனமானதாகும்.
எச்சரிக்கை
முழங்கால் வலி உள்ளவர்கள் கால் தொடை 45 பாகை வருமளவிற்கு மேல் முழங்காலை மடிக்கக் கூடாது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக