வெள்ளி, 2 ஜூலை, 2010

சபையில் உறங்கிய உறுப்பினர்கள் சிரிப்பொலி; சுவாரஸ்யமான விவாதம் : சபையில் மெய் மறந்து தூங்கிய சம்பந்தன்

பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தூங்குவது தொடர்பில் சுவாரஸ்யமான விவாதமொன்று ஏற்பட்டதால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அரச, எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்கள் பலர் தமது ஆசனங்களில் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதியமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றிக் கொண்டிருந்த போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க திடீரென எழுந்து அங்குமிங்கும் பார்த்து விட்டு ஏதோ சொல்வதற்கு எழுந்தார். அப்போது டிலான் பெரேரா நீங்கள் இப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளீர்கள். எனது பேச்சை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டீர்கள். அதனால் ஒன்றையும் கூறாதீர்கள் என்றார்.

அப்போது சற்றுத்தள்ளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை அரச தரப்பினர் சுட்டிக்காட்டி பெரிதாக சப்தமிட்டு சிரித்த போதும் சம்பந்தன் தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. அப்போது டிலான் பெரேராவும் ஏனைய சில அமைச்சர்களும் நித்திரைக் குளிசை கொடுத்தால் கூட தூங்கவைக்க முடியாதவர்கள் இங்கு வந்ததும் நன்றாகத் தூங்குகின்றனர் எனக்கூறினார்.

அதற்கு எதிர்க்கட்சியினர் அரச தரப்பினரின் பேச்சைக் கேட்கும் போது தூக்கம் தான் வருகிறது. அதனால் தான் உறுப்பினர்கள் தூங்குகின்றனர் என்றனர். அப்போது ஐ.தே.க.எம்.பி.சந்திராணி பண்டார "உங்கள் பக்கத்தில் மட்டும் என்னவாம்%27 என்று கூறி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தனவை சுட்டிக்காட்டிய போது சிரிப்புச் சத்தத்தால் சபையே அதிர்ந்தது.

இதனால் சம்பந்தன் எம்.பி.திடுக்கிட்டு எழுந்து கொண்டபோதும் மகிந்த யாப்பா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து பிரதியமைச்சர் மகிந்தானந்தா அளுத்கமகே புத்தகமொன்றைத் தூக்கி அமைச்சர் மீது வீசியபோது அது பட்டு அமைச்சர் துள்ளி விழுந்து எழுந்தபோது மீண்டும் பெரும் சிரிப்பொலி எழுந்தது. இதையடுத்து தூங்கிக் கொண்டிருந்த ஏனைய உறுப்பினர்களும் எழுந்துகொண்டனர்.

இவ்வாறு தூங்கி எழுந்த சிலர் சிரித்தவாறே சபையை விட்டு வெளியேறிச் சென்றனர். சபை நடவடிக்கைகள் இடம்பெறும் போது இவ்வாறு தூங்குவது சபையை அவமதிக்கும் செயலென சில உறுப்பினர்கள் சபைக்குத் தலைமை தாங்கியவருக்கு சுட்டிக்காட்டினர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல