வெள்ளி, 9 ஜூலை, 2010

மொழி எப்படிப் பிறந்திருக்கும்?

மொழியின் தோற்றம் என்று சொன்னதும் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தைப் பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைப்போம். ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும்.

ஆனால் இங்கு நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றிய மூலத்தை அறியப்போவதில்லை. மனிதர்களின் மொழி மனிதன் தனது இனத்தோடு தொடர்புகொள்ள பயன்படுத்திய மொழியின் உருவாக்கம் பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்.

அறிவியலாளர்களின் கூற்றின் படியும், பகுப்பின் படியும் மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் ஒரு இனமே. ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவு கொண்டவன் என்பதே ஒரு சிறப்புத் தகுதியாகக் கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டவன் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மேம்பட்டவர்கள், பண்பட்டவர்கள் என்று நமக்கு நாமே அடைமொழிகளை தந்திருக்கிறோம். சமூக அவலங்களை பார்க்கும்போது மற்ற விலங்குகளிலிருந்து எந்த வகையில் மனிதன் வேறுபட்டான் என்ற கேள்வி பலமுறை எழத்தான் செய்கிறது.

விலங்குகளில் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் கொண்டவை என்று சொல்லப்படுபவை சிம்பன்சி போனோபோ ஆகிய குரங்கினங்களாகும். சிம்பன்சியை நாம் அறிந்திருப்போம் பார்த்திருப்போம். ஆனால் போனோபோவை அவ்வளவாக நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக மனிதர்களிடையே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும்தான் பரிமாறிக்கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன.

ஆண் சிம்பன்சி மற்றும் போனோபோக்கள் தங்களுக்கு பசிக்கிறது உணவு கொஞ்சம் தா என்று சக இனத்தவரிடம் கேட்கும்போதும் சரி, பெண் குரங்குகளை காதல் இச்சைக்கு இணங்க அழைக்கும் போதும் சரி அல்லது மற்ற ஆண் குரங்கினத்தோடு சண்டையிட்டு ஓய்ந்து சரி நாம் அமைதியாகப் பிரிந்து சொல்வோம் நண்பர்களாவோம் என்று சொல்ல விரும்பினாலும் சரி திறந்த கைகளை நீட்டுகின்றனவாம்.

அதாவது ஒரே ஒரு அசைவுதான். ஆனால் இடத்திற்கு ஏற்றாற்போல் அது வெவ்வேறு பொருள்கொள்ளப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா முக பாவங்களைக் காட்டிலும் குரல் எழுப்பி தொடர்புகொள்வதைக் காட்டிலும் இவை சைகைகளை அங்க அசைவுகளின் மூலமான மொழியையே அதிகமாக பயன்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்கள் இயல்பாகவே அதிகம் அங்க அசைவுகளும் சைகைகளும் மூலம் தொடர்புகொள்ளக் கூடியவர்கள். அனேகமாக மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியிருக்கும். பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்தபின் பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் குரங்குகள் உள்ளிட்ட முலையூட்டிகளின் உயர்நிலை இனங்கள் தொடர்பான முதனியிய லாளராக உள்ள பிரான்ஸ் தேவால் இந்த ஆய்வுக்காக சான்டியாகோவிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 13 போனோபோக்களையும், யெர்கெஸிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 34 சிம்பன்சிகளையும் கூர்ந்து கவனித்து ஒளிப்பதிவு செய்தார் தேவால்.

அவரது உதவியாளர் ஏமி பொல்லாக்கும் அவருமாக மொத்தம் 31 கை மற்றும் கால் சைகைகளையும் 18 முக முகபாவ உணர்ச்சி வெளிப்பாடுகளையும். குரலெழுப்பலையும் பதிவு அவதானித்தனர். இதில் இரண்டு வகை குரங்கினங்களுமே முகபாவங்கள் குரலெழுப்பல்கள் இவற்றை ஒரே வகையானசூழலில் நம்மால் கணிக்கக்கூடியதாக பயன்படுத்தியதையும் குறிப்பாக வலி மற்றும் பயம் ஏற்பட்டால் சத்தமாக கத்தின என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டனர்.

ஆனால் சைகைகளை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட அங்க அசைவு வேறுபட்ட இடங்களில் சூழலில் வெவ்வேறு பொருள் கொள்ளப்பட்டதை அவர்கள் கண்டனர். உயர் நிலை முலையூட்டி இனங்கள் எல்லமே முக பாவங்கள், குரலெழுப்பல்கள் மூலம் தொடர்புகொள்கின்றன. தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன.

ஆனால் மனிதர்கள், சிம்பன்சிகள், போனோபோக்கள், உராங்குட்டான்கள், கெரில்லாக்கள் ஆகியவை மட்டுமே இவ்வாறு சைகைகளை வெவ்வேறு பொருள் கொண்டவையாக பயன்பாட்டில் வைத்துள்ளன. இந்த குரங்கினங்களின் உயர் நிலை இனங்கள் கிட்டத்தட்ட 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்துள்ளன என்பதால் இத்தகைய சைகைகளும் நீண்டகாலமாக இருந்துள்ளன என புரிகிறது.

மேலும் பொதுவாக இந்த குரங்கினங்கள் சைகை செய்ய விரும்பும்போது வலது கையையே பயன்படுத்துகின்றனவாம் வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மூளையில் மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்கத்தில்தான் என்பது கூடுதல் தகவல். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லப்படும்போது வருத்தப்படத் தேவையில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல