வியாழன், 4 நவம்பர், 2010

ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா றபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருணைமனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார்.


கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாயைச் சந்தித்துப் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரபுமொழியில் எழுதப்பட்ட அந்தக் கருணை மனுவை இறந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக தூதுவரிடம் கையளித்தார்.குழந்தையின் தந்தை தாயிப் ஜிஸ்மான் கலப் அல் உதைபி,தாய் காயித் ஜிஸ்யான் அல் உதைபி ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட அந்தக் கருணை மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவதுஇலங்கை முஸ்லிம்களின் சார்பாகவும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சகோதரி ரிஸானா நபீக் மற்றும் அவரது பெற்றோர், உறவினர் சார்பாகவும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கருணை கோரும் இந்த மனுவைச் சமர்ப்பிக்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரியத் சட்டம்,இஸ்லாமிய பாரம்பரியம்,பண்பாடு என்பவை குறித்தும் சவூதி அரேபிய நீதித்துறையும் காவல்துறையும் உள்நாட்டவர்,பிறநாட்டவர் என்ற பாகுபாடுகளின்றி அனைவரது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உத்தரவாதப்படுத்துகின்றமை குறித்தும் நன்கறிந்துள்ளோம்.வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இலட்சக்கணக்கான இலங்கை வாழ் முஸ்லிம் குடும்பங்களின் சிறுவர்,சிறுமியரில் ஒருவராகவே தனது இளம் வயதில் தனது குடும்பத்தின் துன்ப,துயரங்களையும் எதிர்காலம் பற்றிய கனவுகளையும் சுமந்துகொண்டு உறவுகளைப் பிரிந்து கடல் கடந்து ரிஸானா நபீக் உங்கள் இல்லம் தேடி வந்து சேர நிர்ப்பந்திக்கப்பட்டாள்.

அல்லாஹ்வால் முழு மனித சமுதாயத்திற்கும் அருளப்பட்ட திருக்குர்ஆனையும் மற்றும் காருண்ய தூதுவராக அனுப்பப்பட்ட முஹம்மது நபியையும் சுமந்த புனித தேசத்தில் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடிவு தேடிவந்த ரிஸானாவின் நிலைமை குறித்தும் உங்கள் பாசமிகு குழந்தையின் இழப்புக் குறித்தும் நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். உங்களையும் எங்களையும் சகோதரத்துவத்தால் இறுகப் பிணைக்கின்ற அல்குர்ஆன் குறிப்பிடும் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையிலிருந்து பெருந்தன்மையோடு கருணை காட்டி பாத்திமா ரிஸானாவை மன்னிக்கின்ற உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை எதிர்பார்த்தவர்களாக தாங்கள் ரிஸானா மீது கருணைகாட்டி மன்னிப்பு வழங்குவீர்கள் என்ற ஆழமான நம்பிக்கையுடன் இந்தப் பணிவான வேண்டுகோளை நாம் விடுக்கிறோம்.தங்களை விட்டுப் பிரிந்து சென்ற பச்சிளம் பாலகன் தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவதுபோன்று இலங்கை முஸ்லிம்களாகிய நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தங்களுக்காகவும் தங்கள் வாரிசுகளுக்காகவும் மன்றாடிப் பிரார்த்திக்கின்றோம்.சூழ்நிலைகளின் கைதியாக தங்கள் வாழ்வின் துயரமான ஒரு நிகழ்வுடன் தொடர்புபட்டுவிட்ட ரிஸானா நபீக் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள்,சட்டரீதியான இழுபறிகள்,சிக்கல்கள், தங்களை அசௌகரியப்படுத்துகின்ற சம்பவங்கள் அனைத்திற்காகவும் ரிஸானா சார்பாகவும் அவரது குடும்பம் சார்பாகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகின்றோம்.

இதேவேளை, இக்கருணை மனுவைப் பெற்றுக்கொண்ட தூதுவர் குழந்தையின் பெற்றோரிடம் கையளிப்பதற்காக உடனடியாகவே இராஜதந்திர தபால்மூலமாக சவூதி அரேபிய அரசுக்கு அனுப்பிவைத்தார்.இது இவ்விதமிருக்க இவ்விடயம் தொடர்பாக தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் கருத்துத் தெரிக்கையில் கூறியதாவதுரிஸானாவின் வயதை இருபத்து மூன்றாக அதிகரித்து கடவுச்சீட்டுச் செய்தவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய சட்டநடவடிக்கையெடுத்து அந்தத் தீர்ப்பை உரிய காலத்தில் வழக்கை விசாரணை செய்து சவூதி அரேபிய நீதிமன்றங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கலாகியிருக்கமாட்டாது எனவும் பதினேழு வயதுச் சிறுமிக்கு அங்கு மரணதண்டனை வழங்கப்படுவதில்லை எனவும் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல