வெள்ளி, 7 ஜனவரி, 2011

நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அமரர்.வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே இரகசியமாக 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும், ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகரகம் இலங்கை அரசிடம் இருந்து அக்கடிதத்தினை மறைக்குமாறு கேட்டுகொண்டதாகவும் விக்கிலீக்‌ஸ் மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த கடிதத்தினை ஓகஸ்ட 15 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டு லண்டனில் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பீட்டர்சன், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சந்தித்த வேளையில் அன்ரன் பாலசிங்கத்திடம் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிராட்ஸ்கர் கடிதம் குறித்து இலங்கை அரசுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என ஐக்கிய அமெரிக்காவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வருமாறு -

வெளிவிவகார அமைச்சு, ஒஸ்லோ 16 ஓகஸ்ட் 2005

திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன், தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.

அன்புடன் பிரபாகரனுக்கு,

அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.

விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது. இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.

எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என இலங்கையிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.

தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும். இந்தப் புறநிலையில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.

01. இரண்டு தரப்பினரும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.

02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.

04. வடக்குக் கிழக்கில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.

05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.

தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள, ஜான் பீற்றசன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல