செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

''வேப்ப மரம் கர்ப்பமா இருக்கு டோய்!''

பிள்ளையார் பால் குடிக்கிறார்; அம்மன் படத்தில் இருந்து குங்குமம் கொட்டுகிறது; வேப்ப மரத்தில் பால் வடிகிறது... என்று எத்தனையோ எபிசோடுகளை பார்த்துவிட்ட நம் தமிழக மகாசனங்களுக்கு அடுத்த எபிசோட் தயார். இந்த முறை திரைக்கதை சாதாரணம் இல்லை; ரொம்பவே ஓவர். வேப்ப மரம் கர்ப்பமாக இருக்கிறது என்பதுதான் நாகை மாவட்டப் பரபரப்பு!

கருவுற்று இருக்கும் வேப்பமரத்தைப் பார்க்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வண்டிகளில் வந்து குவிகிறார்கள் மக்கள்.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கிறது மங்கைநல்லூர். அங்கு இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அனந்தநல்லூர். ஊருக்கு ஒதுக்குபுறமாக பண்ணை வயல்காட்டில் இருக்கிற களத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது ஓர் அரசமரம். அதோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து இருக்கிறது வேப்ப மரம் ஒன்று. அதுதான் கருவுற்ற வேப்ப மரமாம். வேரின் மேற்பகுதி சற்று உப்பலாக, பார்ப்பதற்கு மேடிட்ட வயிறு போலத் தெரிகிறது.



அந்த மரத்தைச் சுற்றிலும் சவுக்கு மரத் தடுப்புக் கட்டப்பட்டு இருக்கிறது. மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் ஏகப்பட்ட திடீர்க் கடைகள். பூஜை சாமான்கள், மஞ்சள் கயிறு, வளையல், கருகமணி, எலுமிச்சை, மரத் தொட்டில்கள் என்று எல்லாமும் கிடைக்கிறது. குளிர் பானம், டீ, வடை, பஜ்ஜி என்று இன்னொரு பக்கம் பரபர விற்பனை. மரத்தின் தடுப்பைச் சுற்றிலும் ஏராளமான பெண்கள் காத்திருக்கிறார்கள். தடுப்பின் உள்ளே சில பெண்கள் உட்கார்ந்திருக்க... அவர்களில் ஒருவருக்குத் தலையில் கைவைத்து ஆசி வழங்கி, அவர் கொண்டுவந்திருந்த வளையல்களை அவருக்கே அணிவித்து, 'உனக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. கவலைப்படாமல் போ’ என்கிறார் கோயிலின் இன்ஸ்டன்ட் பூசாரி கல்யாணி.



அடிமரத்தில் சிறிய மரத் தொட்டில்களும் வளையல்களும் தாலிக்கயிறுகளும் கட்டப்பட்டு, மஞ்சள் குங்குமம் பூசப்பட்டு, சிவப்பு மஞ்சள் துணிகளும் சுற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு அருகே ஒரு சூலம். தேங்காய், பழம், அர்ச்சனை தட்டோடு வருகிறவர்களுக்குத் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி, விபூதி, குங்குமம் தருகிறார் கல்யாணியின் கணவர் சரவணன். கல்யாணிக்கு உதவி செய்துகொண்டு இருக்கிறார் சரவணனின் தாய். எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருக்கிறார் சரவணனின் தந்தை. இப்படிக் குடும்பமே ஓடியாடி சாமியாடுகிறது.

இதோ பூசாரி கல்யாணி பேட்டிக்கும் தயாராகி விட்டார். ஸ்டார் கேமரா... ''நாலு மாசத்துக்கு முன்னாடி என் கனவுல வயசான அம்மா ஒருத்தர் வந்தாங்க. 'எனக்கு வயிறு வலிக்குது... பால் வேணும்’னு கேட்டாங்க. ஆனா, அந்தம்மாவின் உருவம் முழுசா என் கண்ணுக்குத் தெரியலை. நானும் விரதம் இருந்து, கவனிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் அது என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. புள்ளதாச்சிப் பொம்பளையா இருந்துச்சு. 'எனக்குக் குழந்தை பொறக்கப் போவுது. வயிறு எல்லாம் வலிக்குது’னு அழுதுச்சு. 'எனக்கு யாரும் பால் தரலை. அதனால பால்காரன் ஒருத்தனைப் பலி வாங்கப்போறேன்’னு சொன்னுச்சு. நான் பால் கொடுக்கலாம்னு நினைச்சா, அந்தக் காட்சி மறைஞ்சிடுச்சு.

அது சொன்ன மாதிரியே மூணு நாள்ல எங்க ஊர் பால்காரர் ஒருத்தர் விபத்துல செத்துட்டார். எதிர்காலத்துல நடக்க இருந்த விபரீதங்களைத் தடுக்க முடிவு செஞ்சேன். உலகத்தை காக்கிறது நம்ம கடமை இல்லைங்களா... கடும் தவம் இருந்தேன். சோறு, தண்ணி பார்க்கலை. மூடின கண்ணைத் தொறக்கலை. என்னை சுத்தி இயங்குற இந்த உலகமே எனக்கு மறந்து போச்சு. நான் வேற ஒரு உலகத்துக்குப் போயிட்டேன். அங்கே போய் பார்த்தா ஆதி பராசக்தியில இருந்து கருமாரி அம்மா வரைக்கும் ஏகப்பட்ட அம்மன்கள் உலாவினாங்க. அவங்க எல்லார்கிட்டயும் காலில் விழுந்து ஆசி வாங்கினேன். சில அம்மன்கள் என்னை அப்படியே வாரி எடுத்து அணைச்சிக்கிட்டாங்க.

தவத்துல இருந்து வெளியே வந்தேன். அன்னிக்கு ராத்திரி திரும்பவும் கனவில அவங்க இருக்கிற இடத்தைக் காண்பிச்சாங்க. அந்த இடத்தைப் பார்த்தா அரசும் வேம்பும் பின்னி இருந்துச்சு. இங்கே தினமும் வந்து பூஜை செய்ய ஆரம்பிச்சேன். நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு எங்க ஊர் மக்கள் இங்கே வர ஆரம்பிச்சாங்க. சாமியாக் கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க'' மரத்தில் சாமி தோன்றிய கதையைச் சொல்லி முடித்தார் கல்யாணி.

''கருவுற்ற வேம்பு எப்படி இருக்கிறது?'' என்று ஆர்வத்தோடு நான் கேட்க... ''ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கு'' என்று வேப்ப மரத்தில் புதிதாக முளைத்து இருக்கும் இரண்டு சிறிய கிளைகளைக் காண்பித்தார். பிள்ளைகள் பிறந்தும் வேப்ப மரத்தின் வயிறு அப்படியேதான் இருக்கிறது. ''பிள்ளை இல்லாதவர்கள் இங்கே வந்து வழிபட்டு வளையல் போட்டுக்கொண்டு போனால், நிச்சயம் குழந்தை பிறக்கும். கல்யாணம் ஆகாதவர்கள் வந்து வழிபட்டால், உடனே கல்யாணம் ஆகும்'' என்று சிறப்புகளையும் பட்டியலிட்டார்.

ஆட்டோ, வேன் என்று மங்கைநல்லூரில் இருந்து சிறப்பு போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. நாகப்பட்டினத்தில் இருந்து வளர்மதி, சிதம்பரத்தில் இருந்து சாந்தி, திருவாரூரில் இருந்து கவிதா என வெளியூர் பக்தர்களிடம் பேசினால், ''இங்கே வேம்பு கருவுற்று இருக்குது. வந்து கும்பிட்டா நல்லதுனு ஒருத்தங்க சொன்னாங்க. அதான் வந்தோம்'' என்கிறார்கள்.

''எங்க தாத்தா, அப்பா காலத்துல இருந்தே இந்த மரம் இப்படித்தான் இருக்கு. ஆனா, இப்பதான் இவங்க இங்க சாமி இருக்கிறதாச் சொல்லி கும்பிட ஆரம்பிச்சு இருக்காங்க. மக்களும் வர்றாங்க. இதைச் சாக்கா வெச்சு இதுவரை எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த ஊருக்கு ஏதாவது நல்லது நடந்தா சரிதான்'' என்கிறார் ஊரைச் சேர்ந்த இளைஞர் கலையரசன்.

மரத்தை கர்ப்பிணி ஆக்கி, அதைச் சாமியாகவும் மாற்றி வசூலை ஆரம்பித்து இருக்கிறார்கள். அதையும் நம்பி கூட்டம் வருகிறது. உஸ்... முடியலை!

- கரு.முத்து

vikatan
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல