வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

புலிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் ஈழக் கொடி பறந்திருக்கும்!

ஒற்றுமை இல்லாததாலேயே ஈழப் போராளிகளுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். “ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு´ மாநாடு சென்னையில் ஒகஸ்ட் 12-ம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கருணாநிதி பேசியது:

ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்பதற்காக டெசோ மாநாட்டை திமுக நடத்தியபோது சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

ஓர் இனத்தின் இழிவைத் துடைப்பதற்கான பணியில் ஈடுபடும்போது இதுபோன்ற கண்டனங்களைச் சந்திப்பது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் தமிழீழத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்து படித்தேன்.

ஈழத் தமிழர்களுக்காக நான் குரல் எழுப்பிய போதெல்லாம் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து குரல் கொடுத்த ஒரு சிலர் இப்போது எதிர்த்துக் குரல் எழுப்புகின்றனர்.

நாகசுர கச்சேரி நடைபெறுகிறது. அப்போது ஒரு வித்வான் ஒரு வகையிலும், மற்றொரு வித்வான் வேறு வகையிலும் இசையை வழங்கினால் அது இசையாக இருக்காது. கேட்க சகிக்காது.

வீரம், ஆற்றல் உள்பட அனைத்திலும் யாருக்கும் சளைக்காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப் போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தளபதிகள் பலரும் மடிந்தனர்.

இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான்.

டெசோ மாநாடு மதுரையில் நடைபெற்றபோது ஈழப் போராளிகளை எல்லாம் என் கை மீது அவர்கள் கைகளை வைத்து அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று சத்தியம் செய்ய வைத்தேன். டெலோ, விடுதலைப் புலிகள் உள்பட எல்லா அமைப்புகளும் சத்தியம் செய்தன.

அந்த சத்தியத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்போது ஈழம் கிடைத்திருக்கும். வெற்றி பெற்றதற்கான ஈழக் கொடி அங்கு பறந்துகொண்டிருக்கும்.

சுள்ளிகளைக் கொட்டி அதனை உடைக்க முடியுமா என்று ஒருவனை பாட்டி ஒருத்தி கேட்டாள். உடைக்க முடியும் என்றவன் ஒவ்வொரு சுள்ளிகளாய் எடுத்து உடைத்துக் காட்டினான். பிறகு 5 சுள்ளிகளை ஒன்றாக வைத்து உடைக்கச் சொன்னாள். ஆனால் அந்த சுள்ளிகளை உடைக்க முடியவில்லை. எனவே ஒற்றுமையாக இருந்தால் ஈழம் கிடைத்திருக்கும்.

இந்தக் கருத்து ஈழத்துக்கு மட்டுமில்லை. திமுகவினருக்கும் பொருந்தும்.

பெரியார் ஒரு முறை பேசும்போது, “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று திமுகவினர் முழங்குகின்றனர். இதில் கட்டுப்பாட்டை திமுகவினர் உறுதியாகக் கடைப்பிடித்தால் அவர்களை எவரும் நெருங்க முடியாது´ என்றார். அதனால் திமுகவினர் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

ஐ.நா.வில் தீர்மானம்: டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் இன்னும் 20 நாள்களில் ஐ.நா. சபைக்கு நேரில் சென்று கொடுக்க உள்ளனர் என்றார் கருணாநிதி.

திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, மத்திய இணைய மைச்சர் ஜெகத்ரட்சகன், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ப.ரங்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல