செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அரசியல் கைதிகளின் நாக்கை புலிகள் அறுத்து எறிந்த கொடூரம் அம்பலம்!

உண்மைகள் எப்போதும் உறங்கிக் கொண்டு இருக்க மாட்டா. என்றோ ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். உண்மைகளை மூடி மறைக்க முயல்கின்றமை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்றமை போலதான் இருக்கும்.

இவ்வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் போன்றன கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாத நடுப் பகுதிக்கு பின்னர் முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றன. இவை பேரதிர்ச்சியை தருகின்றனவாகவும் உள்ளன.

மாற்று இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள், புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பொதுமக்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற பல தரப்பினரும் இவ்வுண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் அடைக்கப்பட்ட தோழர் மணியம் அங்கு அனுபவிக்க நேர்ந்த சித்திரவதைகள், கொடூரங்கள் ஆகியவற்றை கற்பனைக் கலப்பு எதுவும் இன்றி தொடராக எழுதி வருகின்றார் என்பது உதாரணத்துக்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அரச படையினரிடம் சிக்கிய முன்னாள் புலிகள் பலரும் புலிகளின் சித்திரவதைகள் தொடர்பாக ஏராளமான உண்மைகளை கக்கி வருகின்றார்கள்.



இதே போலதான் புலம்பெயர் நாடுகளுக்கு புகலிடம் கோரிச் சென்று இருக்கின்ற புலிகள் இயக்க முன்னாள் பிரமுகர்களும் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக இவ்வுண்மைகளை அண்மைய நாட்களில் அப்பட்டமாகவே வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்று தெரிகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைமை இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிற்பாடு புலிகள் இயக்கச் செயல்பாட்டுக் குழுக்களுக்குள் அதிகாரப் போட்டி, பிடுங்குப்பாடு, காட்டிக் கொடுப்பு ஆகியன பூதாகரமாக தலை தூக்கி விட்டன.

புலம்பெயர் தமிழ் புலிகளின் கோட்டை என்று சொல்லப்படக் கூடிய பிரித்தானியாவில் புலிச் செயல்பாட்டுக் குழுக்கள் இரண்டு பெரிய கன்னைகளாக பிரிந்து பிளவுபட்டு உள்ளன.

இவற்றுள் ஒன்று நெடியவன் தலைமையிலான அனைத்துலக செயலகம். சங்கீதன் தலைமையிலான தலைமைச் செயலகம் மற்றது.

சங்கீதன் குழுவைச் சேர்ந்த சீர்மாறன் என்கிற புலிப் பிரமுகர் பிரித்தானிய பொலிஸாருக்கு புலிகளின் உள்வீட்டு இரகசியங்கள் பலவற்றை வெளிப்ப்டுத்தி இருக்கின்றார்.

புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவில் சித்திரவதைகளுக்கு பொறுப்பானவராக இருந்து உள்ளார் என்றும் புலிகளால் எதிரிகள், துரோகிகள் என்று சிறைப் பிடிக்கப்பட்ட ஆட்களின் நாக்கு, கைகள், கால்கள் போன்றவற்றை வெட்டி இருக்கின்றார் என்றும் குறிப்பாக சுய ஒப்புதல் கொடுத்து உள்ளார். இந்த உண்மைகளை வெளிப்படுத்தியமை மூலம் இவர் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கெம்பி எழுந்து உள்ளது நெடியவனின் அனைத்துலக செயலகம். பிரிட்டனில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக இவர் இக்காட்டிக் கொடுப்பை மெற்கொண்டு விட்டார் என்று சாடி உள்ளது.

இதே நேரம் இவ்வாறான சித்திரவதைச் செயல்பாடுகளை மேற்கொண்டு இருக்கக் கூடிய புலிப் பிரமுகர்கள் மன உறுத்தல்களால் மனச் சம நிலை பாதிக்கப்பட்டு உள்ளார்கள். புலம்பெயர் புலிகளில் குறிப்பிடத் தக்க தொகையினர் புகலிட நாடுகளில் மன நல சிகிச்சைகள் பெற்று வருகின்றார்கள் என்று தெரிகின்றது.


சுவிற்சலாந்துக்கு சென்று அரசியல் தஞ்சம் கோரி உள்ள முன்னாள் புலிப் பிரமுகர் ஒருவர் சூரிச் பொலிஸாருக்கு சுய ஒப்புதல் வழங்கி உள்ளார்.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் புலிகள் இயக்கத்துக்கு எதிரானவர்களை தேடித் தேடிச் சென்று சுட்டுக் கொன்று ஒழித்தார் என்றும் ஒரு முறை வடமராட்சி கரவெட்டிப் பிரதேசத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாற்று இயக்க போராளி ஒருவரை சுட்டார் என்றும் மூன்று பிள்ளைக்காரன், உயிர்ப் பிச்சை தாருங்கள், காப்பாற்றுங்கள் என்று இம்மாற்றுப் போராளி கெஞ்சியமையையும் பொருட்படுத்தாமல் வேட்டுக்களை தீர்த்து கொன்று ஒழித்தார் என்றும் சொல்லி உள்ளார். இச்சம்பவங்கள் இன்று மனதை பெரிதும் உறுத்துகின்றன என்றும் இதனால் மதுவுக்கு அடிமையாகியமையுடன் மனச் சம நிலை கெட்டும் போய் உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதே நேரம் புகலிட நாடுகளில் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொள்கின்றமைக்காக இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கின்ற புலிப் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கொன்று ஒழித்தமை, இளைஞர்கள், சிறுவர்கள் போன்றவர்களை பலவந்தமாக இயக்கத்தில் சேர்த்தமை உட்பட பயங்கரவாத செயல்பாடுகளுக்காக தனிப்பட்ட நபர்களால்கூட நாட்டில் பழி வாங்கப்படலாம் என்பது இவர்களின் பொதுவான அச்சமாக உள்ளது. இந்த அச்சத்தில் நியாயம் உள்ளது என்கிற நிலைப்பாட்டில்தான் புகலிட நாடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல