ஞாயிறு, 25 நவம்பர், 2012

'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 1)

 
மீண்டு(ம்) வருவீரோ.......? (பாகம் 1)
 
பிறப்பு, இறப்பு உயிரினங்களுக்கு பொதுவானது. பிறப்பு இருந்தால் இறப்பு நியதியானது. தமது பிறப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் உயிரினங்கள் இறப்பை சில வேளைகளில் அவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இது ஆறு அறிவு பொருந்திய மனித உயிரினத்திற்கும் பொருந்தும். இதற்கான முக்கிய காரணம் மனித வாழ்வின் இடையில் ஏற்படும் தான் வாழும் சூழலிலிருந்து காணமல் போதல் என்ற நிகழ்வுகளே காரணம் ஆகும். மனிதர்; காணமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. இயற்கையினால் எற்படும் அழிவுகள் இதனைத் தொடர்ந்த இடம்பெயர்வுகள், யுத்தம், இயற்கை அழிவுகளின் போது தாய், தந்தையரை உள்ளிட்ட உறவுகளை இழங்கும் குழந்தைகள், புத்தி சுவாதீனம் அற்ற நிலையில் இடம் பெயர்ந்து தன்னையாரேன்ற அறியாது இருத்தல் என்று பலவற்றை அடிக்கிக்கொண்டே போகலாம்.

மாவீரர் நாள் ஒரு நாள் கொண்டாட்டமாக 1990 களில் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் முதலில் பிரேமதாஸ வழங்கிய வானூர்தியை பாவித்து பாலசிங்கமும், புலிகளின் இன்னொரு முக்கியஸ்தரும் மட்டக்களப்பு பயணம் செய்து முதலில் ஆரம்பிக்கப்பட்டதே இந்த மாவீரர் கொண்டாட்டம் ஆகும். பிற்காலத்தில் புலம் பெயர் தேசங்களில் இது ஒரு பெரும் பணம் வசூல் செய்யும் கேளிக்கை நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. ஒரு நாள் கலக்சனில் திருப்தி அடையாத மாவீரர் நடத்துனர் கூட்டங்கள் ஓரு நாள் கொண்டாட்டத்தை ஒரு வாரக் கொண்டாட்டம் ஆக்கி மாவீரர் கிழமை என்பதை அங்குரார்பணம் செய்து வைத்தனர். 2009ம் ஆண்டு மே மாத்தின் பின்பு இந்த கிழமைக் கொண்டாட்டம் ஒரு மாதக் கொண்டாட்டம் என்றாகி விட்டது.

ஆரம்ப காலங்களில் புலம் பெயர் தேசங்களில் சரியோ பிழையோ ஈழத் தமிழர்களின் ஒரு பிரிவினர் மாவீரர் தினத்தை மாவீரர் நினைவு நாட்களாக கொண்டாடினர் என்பதே உண்மை நிலை. கூடவே பணமும் சேகரித்தனர், பிரச்சாரமும் பண்ணிணர். தற்போது மாவீரர் நிகழ்வு ஈழத் தமிழர் வசம் இருந்து தமிழ் நாட்டுத் தமிழின் சீமான் வசம் கை மாறிவிட்டது. இவர்தான் இந்த மாவீரர் மாதம் என்றும், மே மாதம் என்றும் பிரகடப்படுத்தி இவ்விரு மாதங்களிலும் பண்டிகைகளை நடத்த விடாமல் தடுத்து வருகின்றார். இந்த பண்டிகைத் தடையெல்லாம் புலம் பெயர் தேசங்களில் மட்டுமே அமுல்படுத்த கட்டாயப்படுதப்படுகின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இந்த பாட்சா எல்லாம் பலிக்கவில்லை, பலிக்காது. இவ்வருடம் நவம்பர் மாதம் 'துப்பாக்கி' வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையில் கேட்கவே வேண்டாம். கூடவே விநாயம் என்றும் நெடியவன் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழம் என்றும் தேசியப் பேரவை என்றும் பல பிரிவுகள் தலைவர் மாவீரர் உரை இல்லாத மாவீரர் தினக் கொண்டாட்டங்களை போட்டிபோட்டு நடாத்த முண்டியடிக்கின்றன. கூடவே கொலைகளையும் செய்கின்றன தங்களுக்குள்ளேயே. ஏன் எனில் 'தலைவர் வருவார் ஆனால் வரமாட்டார்' என்ற நிலை நிலவுவதே காரணம். தலைவர் வரமாட்டார் என்பதை பகிரங்கப் படுத்த தலைவரை தேசியத் தலைவராக அங்கீகரித்த யாருக்கும் துணிச்சல் இதுவரை வரவில்லை.

வரலாற்றில் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பாசிச ஹிட்லர் நாடுகளுக்கு எதிரான தனது போரின் தோல்விக் காலகட்டத்தில் காணாமல் போனார். இன்று வரை இவரின் காணாமல் போதல் பற்றி எந்த உறுதியான தகவல்களும் இல்லை. யுத்தத்தின் தோல்விக் கட்டத்தில் தனது காதலியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதில் ஆரம்பித்து ஆஜன்ரீனாவிற்கு விஷேட நீர்மூழ்கி கப்பலில் தப்பி சென்று அங்கு தலை மறைவாக வாழ்ந்து பின்னாளில் இயற்கை மரணம் அடைந்தார் என்ற அண்மை செய்திகள் வரை இருந்தாலும் எச் செய்திகளையும் உறுதிப் படுத்த முடியவில்லை. அவருடன் கடைசிவரை கூட இருந்த யாராவது வாயை திறந்தால் ஒழிய உண்மையை உறுதிப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் அதற்குரிய சாத்தியப்பாடுகள் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. காரணம் காலம் போய்விட்டதால் வயோதிபத்தின் காரணமாக இவருடன் கூட இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போது மிகக் குறைவு. ஆனால் இவரையும் பலர் விரும்பியோ விரும்பாமலோ மீண்டு(ம்) வருவீரோ....? என்ற எண்ண அலையுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் ஒரு பாசிச கொலைஞன் மீண்டும் வரக் கூடாது என்பதே மனித நேயமிக்க மனிதர்களின் பிரார்த்தனையாகும்.

இதேபோல் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை தனது வழிமுறையாக கொண்ட சுபாஸ் சந்திரபோஸ் உம் தனது படையணி ஒன்றுடன் கடைசியாக சிங்கப்பூரில் காணப்பட்டார் என்பதே செய்திகள், நம்பிக்கைகள். இதன் பின்பு இவர் பற்றிய தகவல் ஏதும் இதுவரை இல்லை. இவரையும் பல கோடி இந்திய மக்கள் மீண்டு(ம்) வருவீரோ.....? என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இன்று வரை எந்த உறுதியான தகவல்களும் இன்றி மீண்டும் வரமாட்டார் என்ற சோகமான விடையை தாக்கியே இவரின் வரலாறு நகர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழத்திலிருந்து இந்தியா நோக்கி வள்ளத்தில் பயணம் செய்த இடதுசாரித் போராளி விசுவானந்ததேவன் காணாமல் போய்விட்டார். இவர் கடலில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகின்றது. அதுவும் புலிகளினால். ஆனால் கொலை செய்தவர்கள் வாய் திறந்தால் ஒழிய இவர் வழி வந்தவர்களின் மீண்டு(ம்) வருவீரோ.....? என்ற கேள்வி குறி பதிலின்றி தொக்கு நிற்றுகொண்டே இருக்கும்.

2099ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் தேசியத் தலைவர் என்று பலராலும் அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் காணாமல் போய்விட்டார். இவரின் காணாமல் போதல் சம்மந்தமாக பல செய்திகள் உலாவுகின்றன. இலங்கை இராணுவத்துடனான சண்டையில் வீர மரணம் அடைந்துவிட்டார். இல்லை....இல்லை.... இலங்கை இராணுவத்திடம் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக சரணடைந்த நிலையில் இரகசிய விசாரணைகளின் பின்பு இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்டுவிட்டார். இல்லை....இல்லை....இறுதிக்கட்ட போர் இற்கு முன்பாகவே நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். இல்லை....இல்லை.... இறுதிகட்ட போரின் போது இலங்கை இராணுவத்தின் போர் வியூக சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு தப்பிவிடார். தற்போது ஆபிரிக்க நாடு ஒன்றில் தலை மறைவாக இருக்கின்றார். மீண்டும் வருவார் தலைவர் என்கின்றது இன்னொரு செய்தி. பிரபாகரனை நேசிக்கும் மக்கள் இவரை மீண்டு(ம்) வருவாரோ....? என்று எதிர்பார்த்து ஏக்கத்தில் இருக்கின்றனர் இவரால் பாதிப்படைந்த பல இலட்சம் மக்கள் இவர் மீண்டு(ம்) வருவாரோ.....? என்ற பயத்துடன்? இருக்கின்றனர். யாராறிவார் இந்த மாயாவிக் கதைகளுக்கான முடிச்சுக்களை. ஆனால் வடிவேலுவின் 'வருவார் ஆனால் வரமாட்டார்' என்பதே தேசியத் தலைவரின் பக்த கூட்டங்களும் 'ஞான திருஷ்டி' மூலம் அறிந்த உண்மை. ஆனால் சூரியத் தேவனுக்கு இறப்பு இல்லை என்ற வாதங்களே மேலோங்கி நிற்கும் நிலமைகள் பிழைப்புக்களை தொடர்ந்து நடத்த உதவும் என்பதால் தேசியத் தலைவரை தெய்வம் (சாகா வரம் பெற்ற) ஆக்கிவிட்டார்கள் பக்த கோடிகள்.

1983 ஆண்டு ஜேஆர் ஜெயவரத்தனா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பில் சிங்கள் மக்கள் செறிந்து வாழும் பல பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பலர் காணமல் போய்விட்டனர். இதில் சிறப்பாக அக்கால கட்டத்தில் செட்டிகுளம் புகையிர நிலைய அதிபராக வேலை செய்த தமிழரும் அவரின் ஆண்பிள்களும் காணமல் போய் விட்டனர். எஞ்சி தப்பிய அக் குடும்பத்தவர் இன்றும், இன்னமும் எங்கள் அண்ணா திரும்பிவருவார் என்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் மீண்டு(ம்) வருவாரோ.....? என்பது இவர்களைப் பொறுத்தவரையில் விடாப்பிடியான நம்பிக்கைகளாகவே இருந்து வருகின்றது. இவர்களைப் போல் பல ஆயிரம்; மக்களை நாம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அல்ல உலகம் பூராவும் காணலாம். இவர்களின் மீண்டு(ம்) வருவீரோ......? ஏன்பது ஆம் என்று உண்மை பெறவேண்டும் என்பதே இந்த வலியை உணர்ந்த எங்கள் யாபேரதும் பிரார்த்தனையாக அமைகின்றது. நிறைவேறுமா...?

1983 ம் ஆண்டு வெலிக்கடைப் படுகொலை, 1987 ம் ஆண்டு கந்தன்கருணைப் படுகொலை பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எமக்கு தெரிய இவ்விரு சிறைகளிலும் இருந்தவர்களின் உறவினர்கள் காணாமல் போன தமது உறவுகள் மீண்டு(ம்) விருவீரோ.....? என்ற சோக கீதங்களை மாவீரர் மாதத்தில் இசைக்கலாமா? ஏன்றே இருப்பார்கள் என்றே நம்ப முடிகின்றது. கூடவே ஆனைக்கோட்டை வதைமுகாங்களின் அனுபவங்களை கூறும் யாழ் மணியங்களும், துணக்காய் வதை முகாங்களின் அனுபவங்களை வெளிக் கொணர்ந்த அருள்பேட்டுக்களும், நவாந்துறை கிறேசியன் போன்றவர்களின் வாக்கு மூலம்களும் இவ் வதை முகாங்களில் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மீண்டு(ம்) வருவீரோ......? என்ற ஏக்க கீதங்கள் நிறைவேறமுடியாத எதிர்பார்ப்பாகத்தான் இருக்கும் என்பதை கட்டியம் காட்டி நிற்கின்றன. இந்த துன்பியல்களை எத்தனை எத்தனை குடும்பங்கள் கொண்டிருக்கின்றன. இவையல்லாம் எமக்கு ஈழப் போர் விட்டுச் சென்ற வடுகள் அல்லவா...?

இன்று அவுஸ்திரேலியாவிற்கு படகுப்பயணம் செய்யும் பலரில் சில படகுகள் கடலில் மூழ்கி இல்லாமல் போய்கின்றன. திரை கடல் ஓடியும் திரவியம் தேட அவுஸ்திரேலியாவிற்கு பயணம் அனுப்பிவிட்டு எங்கள் குல பெண்டிரும் இதே போலவே 'சென்றடைந்தோம்.....' என்ற செய்திகள் கிடைக்காமல் மீண்டு(ம்) வருவீரோ......? என்ற எதிர்பார்ப்பு, ஏக்கத்துடனேயே இருக்கின்றனர். இவர்கள் மீண்டு.... மீண்டும் வரவேண்டும் என்பதே எல்லோருடைய பிராத்தனையாக இருக்கின்றது.

ஒரு புறத்தில் சிரியா ஊடாக ஈரானுக்கான போர்பாதையை திறக்க ஒபமா தேர்தலுக்கு முன்பும் பின்பும் சூழுரைத்து தீவிரவாதிகளுக்கு ஆயுதம் பணம், ஆலாசனை, உதவிகளை வழங்கி வருகின்றார். இதனால் பல ஆயிரம் சிரிய அப்பாவி மக்கள் மடிந்த வண்ணம் உள்ளனர். தமது உறவுகளை தொலைத்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தற்போது தமது காணமல் போன உறவுகளைத் தேடி பாடும் சோக கீதமும் மீண்டு(ம்) வருவீரோ......? தான். மறுபுறத்தில் தனது நண்பன் இஸ்ரேல் ஊடாக காசா வழியே ஈரானுடனான போர்ப் பாதையை திறக்க தினம் தினம் வகை தொகையில்லாமல் பாலஸ்தீன குடியிருப்புக்கள் மீது இஸ்ரேல் குண்டுக்களை பொழிந்த வண்ணம் உள்ளனர். இதில் காசாவிலுள்ள பல்லாயிரம் பாலஸ்தீன மக்கள் தமது உறவுகளை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். இது நடைபெறுவதுவும் இந்த நவம்பர் மாதத்தில் தான். இவர்களும் இன்னும் சில தினங்களில்; தொலைந்த தமது உறவுகளை எண்ணி மீண்டு(ம்) வருவீரொ......? என்று முகாரி ராகம்தான் பாட முடியும.; 50 வருடங்களுக்கு மேலான அகதி முகாம் வாழ்க்கை பாலஸ்தீன மக்களுக்கு கொடுத்த சொத்து இது ஒன்றுதான்.

(தொடரும்.....)

(சாகரன்)

'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 2)

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல