செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்னும் பிரான்ஸின் தாராமய கொள்ளை

அமெரிக்காவினதும் நேட்டோ நாடுகளினதும் தேவைக்காக நடந்த லிபிய யுத்தத்தின் பின்னர், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பெயரில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் வறிய நாடுகளின் பட்டடியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் யுத்தமொன்று நடந்து கொண்டிருக்கின்றது.

மத்திய ஆபிரிக்க நாடான மாலி இம்முறை உலக வல்லாதிக்க வாதிகளின் பலிக்கடாவாக ஆகியிருக்கின்றது. மாலியின் மக்கள் நாளாந்தம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு எதிர்பார்க்கும் ஆயூட்காலமு 50 வருடங்களாகும். குழந்தை மரணம் கர்ப்பிணித் தாய்மார்களின் மரணம் அதிகமாகக் காணப்படும் நான்கு நாடுகளில் ஒன்றாக மாலி கருதப்படுகிறது. 4.5 மில்லியன் ஜனத்தொகையை கொண்ட மாலியில், பட்டினிக் கொடுமையால் மக்கள் பரிதாபமாக செத்துக் கொண்டிருக்கும் மாலியில் வைரம், தங்கம், யூரேனியம், மரங்கள், எண்ணெய் உள்ளிட்ட பெறுமதிமிக்க வளங்களும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மாலியை தனது காலனித்துவ நாடாக வைத்துக் கொண்டிருந்த பிரான்ஸ் அதன் வளங்களை கொள்ளையிட்டது. பிரான்ஸிடமிருந்து சுதந்திரமடைந்த மாலி, நவ தாராளமய முதலாளித்துவத்திற்கு பலியாகி இன்று பிரான்ஸினதும், வல்லாதிக்க நாடுகளினதும் எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மாலியின் வடக்குப் பிரதேசத்தில் நிலவும் இனக்கிளர்ச்சி ஆயுதப் போராட்டம் வரை வளர்ந்து விட்டிருக்கின்றது. பல நூற்றாண்டு காலமாக மாலியின் வளங்களை கொள்ளையிட்டு வளர்ந்த பிரான்ஸ், கிளர்ச்சியாளர்களை ஒழித்துக் கட்டுவதற்காக மாலி அரசாங்கத்தின் உதவிக்கு வந்தது. கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் வடக்கு திசை நகரங்கள் மீது பிரான்ஸிய ஜெட் விமானங்கள் குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கின்றன. பிரான்ஸில் புதிதாக தயாரிக்கப்பட்ட நவீரக யுத்த விமானத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை உறுதி செய்யும் விதத்தில், புதியரக ஜெட் விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்திய வான்படை வீரர்களை பார்த்து பிரான்ஸிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

' உங்களது இருவகையான தாக்குதல்களையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்ததையிட்டு முதலாவதாக உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். , இரண்டாவதாக நான் கூற நினைப்பது வியாபாரம் குறித்துதான்"

பிரான்ஸிய ஜனாதிபதி ஊடகங்களுக்கு கூறியதைப் போன்று அவர்கள் தலையீடு செய்வது ஒரே நோக்கத்திற்காகத்தான். அதாவது ஜனநாயகத்திற்காகத்தான். அதேநேரம், வேறொரு சந்தர்ப்பத்தில் மூன்று நோக்கங்களைப் பற்றி கூறியிருந்தார். அதாவது, மாலியின் இறையான்மையை பாதுகாப்பதற்காக ஒத்துழைப்பு வழங்குவதும், அந்நாட்டில் தங்கியுள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதுமே நோக்கம் என்று.ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்ஸில் மாலியின் மீது தலையிடுவதற்கு திட்டமிட்டதன் பின்னர்தான் பிரான்ஸ் யுத்த நடவடிக்கையில் இறங்கியது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்ஸிலில் யுத்த ரீதியிலான தலையீடு குறித்து ஆலோசிக்கப்படவில்லை. மாலி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அந்நாட்டின் தலைநகர் பெங்காஸியில் 'ஆபிரிக்க தலைமைத்துவத்துடன் கூடிய சர்வதேச ஒத்துழைப்பு மையமொன்றை" அமைக்கும் பிரான்ஸின் ஆலோசனைக்கு பாதுகாப்புக் கவுன்ஸில் அனுமதியளித்தது. அவ்வளவுதான். ஆபிரிக்க சங்கத்தின் அரசாங்கங்கள் தமது உறுப்பினர் நாடொன்றில் நடக்கும் உள்நாட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தலையிடுவதில் தாமதம் ஏற்பட்டமையால் பிரானஸ் தன்னிச்சையாக தலையீடு செய்திருப்பது தெரிகிறது. பாதுகாப்பு என்ற போர்வையில் நுழைந்திருக்கும் குள்ள நரிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸில் தனது யுத்த நிபுணர்களை மாலிக்கு அனுப்பியுள்ளது. மாத்திரமல்ல, அவர்களை அங்கு அனுப்பியிருப்பது அந்நாட்டு இராணுவத்திற்கு 'பயிற்சியளிப்பதற்குத்தான்" என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

மாலியின் கிளர்ச்சிக் குழுக்களில் AQIM என்றழைக்கப்படும் கிளர்ச்சிக் குழு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அல்ஜீரிய இராணுவத்தோடு 1990 நடந்த உள்நாட்டு ய[த்தத்தின் பின்னர் தப்பியோடிய அல்ஜீரிய அல்-கைதா உறுப்பினர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் அங்கு செயல்படுகின்றன. பொஷீஷேயின் அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக போராடிவரும் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக அமெரிக்காவும் பிரான்ஸும் மாலியில் இராணுவ நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன. மாலியின் ஜனாதிபதி பொஷிஷேயின் அரசாங்கத்திற்கு சொந்தமான விசாலமான பிரதேசங்களை கிளர்ச்சிப்படைகள் தம்வசம் வைத்துக் கொண்டிருந்தன. கிளர்ச்சியாளர்கள் மாலியின் தலைநகரான பங்குய் பிரதேசத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அமெரிக்க அரச திணைக்களமும் பிரான்ஸின் உதவிக்கு ஓடோடி வந்திருக்கிறது. ' நலிந்து வரும் பாதுகாப்பு நிலை" என்று கூறிக் கொண்டு பராக் ஒபாமா 50 பேரைக் கொண்ட தற்காலிக பாதுகாப்புப் படையொன்றை மாலிக்கு அவசரமாக அனுப்பியிருப்பதாக கூறினார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க விஷேட படையினர் கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சிப் படைகளை அடக்குவதற்காக பிரான்ஸுக்கும் அமெரிக்காவிற்கும் அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதி பொஷீஷே, கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்வதாக ' வெளிநாட்டு சக்திகள்" மீது குற்றம் சுமத்தியதோடு, இந்த வருட ஆரம்பத்தில் சீனா மற்றும் தெற்காபிரிக்க நாடுகளின் ஒன்றியத்தோடு எண்ணெய் ஆய்வுக்காக தன்னால் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள்தான இந்த மோதலுக்கு காரணம் என்று கூறினார்.

தனது முன்னைய காலனித்துவ நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கு 1960 லிருந்து பிரான்ஸுக்கும் தொடர்பு இருக்கின்றது. தற்போதைய ஜனாதிபதி இளைஞராக இருந்த போது இராணுவத்தில் சேர்ந்ததன் பின்னர் இராணுவப் பயிற்சிக்காக பிரான்ஸ்சுக்கே சென்றார். மாலியின் கொடிய ஜனாதிபதியாக இருந்த படேல் பொகாஸா தன்னை சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தி சமயத்தில் 32 வயதான பொஷீஷே மேஜர் தரத்திற்கு உயர்த்தப்பட்டார். பொகாஸா பதவி வகித்த 1966 -1979 காலப்பகுதியில் அவரது ஆயுதப்படையை வலுப்படுத்திய பிரான்ஸ் நிதி உதவிகளையும் வழங்கியது. என்றாலும், நூற்றுக்கணக்கான பிரான்ஸின் விஷேட படைப் பிரவினால் பொகாஸாவின் சர்வாதிகாரம் கவிழ்க்கப்பட்டது. 2003ல் ஆட்சியைக் கைப்பற்றிய இன்றைய ஜனாதிபதி போஷீஷே, பிரான்ஸின் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்துக் கொண்டிருக்கின்றார்.

என்றாலும், இப்போதைய பிரான்ஸின் தலையீடு குறித்து மாலி ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற வகையில் மாலியின் கொஞ்ச நஞசமுள்ள வளங்களையும் கொள்ளையிட்டு தமது நவ தாராளமய முதலாளித்துவ முறையை ஆபிரக்க நாடுகளில் நிலை நாட்டுவதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட வல்லாதிக்க பகற் கொள்ளையர்கள் முயன்று வருவது தெரிகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல