திங்கள், 11 மார்ச், 2013

விடுதலைப் புலிகள் பற்றி சுப்ரமணியம் சுவாமி ராபர்ட் பிளேக்கிடம் என்ன சொன்னார்?

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் சமர்ப்பிக்க படுவதற்குமுன், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வாஷிங்டன் சென்று அமெரிக்காவின் Assistant Secretary of State for South and Central Asian Affairs பதவியில் உள்ள ராபர்ட் ஓ. பிளேக்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டன என்ற விபரம் தற்போது கிடைத்துள்ளது.

ராபர்ட் பிளேக்கிடம் சுவாமி, “இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஏற்கும்படி இலங்கை அரசிடம் கோருவது நடைமுறைக்கு ஒத்துவராது. நான் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் கொழும்புவில் கடந்த மாதம் 28-ம் தேதி சந்தித்தேன்.

அவர்கள் இருவருமே சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையில் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை” என்று தெரிவித்தார்.

சுவாமி கூறிய மற்றொரு விஷயம், “இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வற்புறுத்தினால், அது இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்தாது. காரணம், இலங்கையில் சர்வதேச விசாரணை நடப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டால், காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர சில நாடுகள் முயற்சி செய்து வருவதை நீங்கள் (அமெரிக்கா) அறிவீர்கள். அதை தடுக்க வேண்டிய நிலையில் உள்ள இந்திய அரசை, இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை என்ற அமெரிக்க கோரிக்கை சங்கடப்படுத்தும்”

இதையடுத்து, விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் சுப்ரமணியம் சுவாமி பேசியதாக தெரியவருகிறது.

“இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இலங்கை தமிழர்களின் அமைப்புகளின் பின்னணிகளை பாருங்கள். அவற்றின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் பிரிவுகள் இருப்பதை உங்கள் (அமெரிக்க) உளவு அமைப்புகள் ஏற்கனவே ரிப்போர்ட் கொடுத்திருப்பார்கள் என்பது எனக்கு (சுவாமி) தெரியும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த நாடு அமெரிக்கா. அதன்பின், கனடாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்களும் நீங்கள்தான்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கன்வின்ஸ் செய்து விடுதலைப் புலிகள் மீது தடை கொண்டுவர செய்தவர், அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கான்டலீசா ரைஸ் என்பதும் உங்களுக்கு தெரியும்.

விடுதலைப் புலிகளின் தடைக்கு எதிராக இருந்த 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை கன்வின்ஸ் செய்தவர், கான்டலீசா ரைஸ்.

இந்த 7 நாடுகளின் தலைவர்களை இலங்கையின் அப்போதைய வெளியுறவு அமைச்சராக இருந்த மங்கள சமரவீர சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தது, அமெரிக்க ஸ்டேட் டிப்பார்ட்மென்ட் என்பதும் உங்களுக்கு தெரியும்.

விடுதலைப் புலிகள் பற்றி நீங்களே நேரடியாக அறிந்துகொண்ட சந்தர்ப்பமும் உண்டு.

கொழும்புவில் அமெரிக்க தூதராக இருந்த நீங்கள், கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொழும்புவில் இருந்து இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு நகரில் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் சென்றீர்கள்.

அந்த ஹெலிகாப்டர் மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் தரையிறங்கியபோது, ஹெலிகாப்டரை குறிவைத்து விடுதலைப் புலிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் சிறு காயத்துடன் உயிர் தப்பினீர்கள்

அதன்பின், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்த விவகாரத்தில் இலங்கை அரசுக்கு உதவியதும் நீங்கள்தான். கடந்த 2007-ம் ஆண்டு செப்டெம்பரில் அமெரிக்கா கொடுத்த உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே, இலங்கை கடற்படை விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அனைத்தையும் அழித்தது.

இந்த விபரம், மற்றையவர்களைவிட உங்களுக்கு (ராபர்ட் ஓ. பிளேக்) நன்றாக தெரியும் (2007-ம் ஆண்டு புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட நேரத்தில் கொழும்புவில் இருந்த அமெரிக்க தூதர், இதே ராபர்ட் ஓ. பிளேக்தான்!)

இலங்கை இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவதற்கு முன்னரே, விடுதலைப் புலிகள் யுத்தத்தில் அழிக்கப்படுவார்கள் என்பதை அமெரிக்கா தெரிந்து வைத்திருந்தது.

யுத்தம் முடிவதற்கு 1 மாதம் முன்னரே, 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இலங்கை பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த 4 அதிகாரிகளை அமெரிக்காவுக்கு அழைத்து, யுத்தம் முடிந்தபின் செய்ய வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது குறித்து பிரீஃபிங் செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

வாஷிங்டனிலும், அதன்பின் லாங்க்லியிலும் வைத்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரீஃபிங் செய்யப்பட்டதும் உங்களுக்கு தெரியும்.

இப்படியாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சகல விதத்திலும் உதவியவர்களே நீங்கள்தான். இப்போது, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை கொண்டுவவருவதன் மூலம், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கிடைப்பதற்கோ, இலங்கையில் பிரிவினைவாதம் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் மீண்டும் உருவாகவோ வாய்ப்பு ஏற்படக் கூடாது”

இதுதான், சுப்ரமணியம் சுவாமியால் அமெரிக்காவிடம் கூறப்பட்டது. சுவாமி கூறிய சில தகவல்கள், இலங்கை தரப்பால் அவருக்கு கூறப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

-வாஷிங்டனில் இருந்து Renata Modanaவின் குறிப்புகளுடன், விறுவிறுப்பு.காமுக்காக ரிஷி.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல