கொரிய போர் நிறைவு பெற்று 60 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் வட கொரியாவில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் நூற்றுக்கணக்கான பெண் படை வீரர்கள் கச்சிதமாக அணிவகுத்துச் சென்றமை அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
ஒரேயளவில் தமது கேசத்தை வெட்டியிருந்த மேற்படி பெண் படைவீரர்கள், தமது கால்களை ஒரே சமயத்தில் மேலே தூக்கியும் கீழே வைத்தும் சென்று ரோபோக்கள் அணிவகுத்து செல்வதைப் போன்ற ஒரு மாயத் தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.
வட கொரிய தலைநகரிலுள்ள கிம் இல் சங் சதுக்கத்தில் இந்த அணிவகுப்பு இடம்பெற்றது.
வட கொரிய இராணுவத்தில் 40 சதவீதமானவர்கள் பெண்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் அந்நாட்டின் 1.2 மில்லியன் படையினரில் சுமார் அரை மில்லியன் பேர் பெண்களாவர்.
வட கொரியா அண்மையில் இந்தப் படையணியில் சேர்ந்து கொள்வதற்கு பெண்களுக்கு உயரத்தை 4 அடி 8 அங்குலமாக குறைத்திருந்தது.
அங்குள்ள பெண்கள் வறுமையான நிலைமைகளில் பிறந்துள்ளதால் போஷாக்கின்மையால் வளர்ச்சி குறைந்தவர்களாக காணப்படுவதாலேயே படையணியில் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு தேவையான உயரத்தை வட கொரியா குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
படையணிக்கு சேர்த்துக் கொள்ளும் பெண்களுக்கு அவர்களது பாடசாலைக் காலத்திலேயே 'அமெரிக்கர்களை கொல்கிறோம்', 'நாம் அமெரிக்கர்களை கொன்றுவிட்டோம்' போன்ற ஆங்கில வசனங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் பின் அவர்கள் வருடாந்தம் 300 மணித்தியால இராணுவப் பயிற்சிக்குட்படுத்தப்படுகின்றனர்.
மேற்படி பெண்களுக்கு தமது முழு சேவைக் காலத்தில் திருமணம் செய்வது, பெற்றோர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வது உள்ளடங்கலான 10 நாள் விடுமுறையை உள்ளடக்கி இரு வார விடுமுறையே வழங்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக