புதன், 21 ஆகஸ்ட், 2013

குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை

சென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுல். குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இரண்டரை மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தை காணப்பட்டது.

இதனையடுத்து குழந்தை ராகுலுக்கு விழுப்புரம், புதுச்சேரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிய நோயால் பாதிப்பு

குழந்தையின் சிகிச்சை அளித்து வரும் குழந்தைகள் நலப்பிரிவு தலைவரும், மருத்துவமனை துணை கண்காணிப்பாளருமான டாக்டர் நாராயணபாபு முதலில் குழந்தையை பரிசோதித்து குழந்தைக்கு ‘ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்' என்ற உடலில் தானாக தீப்பற்றிக்கொள்ளும் அதிசய நோய் இருப்பதாக கூறி இருந்தார்.

30 வகை டெஸ்ட்

இதனையடுத்து குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், மற்றும் தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள் குறித்தும், குழந்தையின் தற்போதைய நிலை குறித்தும் டாக்டர் நாராயணபாபு கூறுகையில், "குழந்தை கடந்த 12 நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதுவரை குழந்தையின் உடலில் தீப்பற்றி எரியவில்லை. குழந்தையின் தோல் ஆராய்ச்சி முடிவு உள்பட அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்து விட்டன. எல்லா முடிவுகளுமே சாதாரணமாகத்தான் உள்ளன. அசாதாரண அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று கூறினார்.


தானக தீப்பிடிக்க வாய்ப்பில்லை

எனவே முன்பு கூறியது போல "ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்" என்ற உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவர் கூறினார்.

தீப்புண்களுக்கு சிகிச்சை

குழந்தை எங்களிடம் சிகிச்சைக்கு வரும்போது, தீப்புண் காயங்களுடன் வந்தது. அதற்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த வித பிரச்னைகளும் இல்லை.

தீ பற்ற வாய்ப்பில்லை
குழந்தையின் பெற்றோர் தான் அதன் உடலில் தானாக தீப்பற்றி எரிந்ததாக கூறி உள்ளனர். ஆனால் இங்கு இதுவரை அது போன்ற சம்பவம் நிகழவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று மருத்துவமனை டீன் டாக்டர் ராமகிருஷ்ணனுடன் பேசி முடிவு செய்வோம்.

24 மணி நேர கண்காணிப்பு

குழந்தை வீடு திரும்பிய பிறகு, அங்குள்ள தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள் மூலம் குழந்தையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்வோம். மேலும் மாதம் ஒரு முறை குழந்தையை இங்கு கொண்டுவந்து பரிசோதனை செய்வோம்" என்றார்.

நீடிக்கும் மர்மம்

குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிவதற்கு வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ள நிலையில் குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
எனவே குழந்தையின் உடலில் தீப்பிடித்தது சூனியத்தினாலா? அல்லது சதியினாலா? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குடும்ப வன்முறையா?

குழந்தையின் உடலில் வேண்டுமென்றே யாராவது தீவைத்து கொடுமைத்தியுள்ளனரா என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டால் தான் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு உண்மை வெளியே தெரியவரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல