வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல்

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... பாதர் இமானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி.

தன் வலி மிகுந்த‌ எழுத்தினால், ,ராஜதந்திர‌ப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர்மேற் கொள்ளும் 'டிப்ளமேட்டிக்’ வேலைகளால், ராஜபக்சவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் பாதர் இமானுவேல்.

80 வய தைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றில் வசித்துவருகிறார்...

கேள்வி: எப்படி இருக்கிறீர்கள்... உங்களைக் கண்டுபிடிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே!

பதில்: ஏதோ இருக்கிறேன்! எம்முடைய புலம்பெயர் வாழ்வும், பாதுகாப்பின்மையும், நீதிக்கானப் போராட்டமும், தொடர் செயல்பாடுகளும் பெரும் பாலும் எம‌து இருப்பை மறைத்தே வைக்கவேண்டிய அவசியத்தை உண்டாக்கிவிட்டது. நான் கிறிஸ்துவ மதத்தில் ரோமிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய‌ பதவிகளை வகித்தவன். கிழக்காசிய நாடுகளின் கிறிஸ்துவ மதப் பொறுப்பாளராக இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.'இலங்கை’ எமது தாய்நாடு என்றால், இந்தியா எமது தந்தை நாடு.

ஆனால், ராஜபக்rவின் அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் என்னைப் புலி பாதர் எனத் தொடர்ந்து தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். இதனால் இலங்கை, இந்தியாவுக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனாலேயே எனது நடமாட்டங்கள் சுருங்கிவிட்டன. உடல் மூப்பு காரணமாக, சுகவீனமும் அவ்வப்போது என்னை முடக்கிப் போட்டுவிடுகிறது!

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அமைப்புகளும் தங்கள் நலனில் அக்கறைக் காட்டுவது இல்லை� என்ற குரல்கள் ஈழத்திலிருந்து ஒலிக்கின்றனவே?

பதில்: புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமிழ் மக்களும் அரசியல் பேசுவது மட்டுமல்ல; தாயகத்தில் வாடும் மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. செல்வாக்கு உள்ளவர்கள், அங்கு உள்ள நமது உறவுகளைக் குடும்பம் குடும்பமாகத் தத்து எடுக்க வேண்டும். சர்வ சாதாரணமாக செலவழிக்கும் ஐந்து அல்லது பத்து பவுண்ட்களைக்கூட ஈழத்துக்கு அனுப்பலாம். 'ஈழம்’ எனும் வேருக்கு நம்முடைய சிறு உதவிகள்தான் நீர் வார்க்கும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டும்!

கேள்வி: இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் சாதி பிரச்னைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?

பதில்: உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960-களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்புபேசினாலும், நான் அவரை பெரிதும் மதிக்கிறேன்.

இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் சாதிக்கு எதிராக தீவிரமானப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள் கூட ஈழத்தைச் சின்னா பின்னமாக்கிவிடும் என்பதை எந்த நொடியும் மறந்து விடாதீர்கள்!

கேள்வி: தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் ஆரம்பித்த அஹிம்சைப் போராட்டம், அதன் பிறகு 30 ஆண்டு கால‌ ஆயுதப் போராட்டம் ஆகிய அனைத்தும் முள்ளிவாய்க்காலில் ஒரு தேக்கத்தை அடைந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் டிப்ளமேட் லாபி, பொலிட்டிகல் நெட்வொர்க்கிங் ஆகியவை ஈழப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுமா?

பதில்: சிங்களப் பேரினவாதத்தின் முன் தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டமும், புலிகளின் ஆயுதப் போராட்டமும் கை கொடுக்கவில்லை. இது, அநீதிகள் நிறைந்த உலகம். அதுவும் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, புரட்சிப் போராட்டங்களின் மீது சர்வதேசத்தின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. எனவே, இனி அரசியல் போராட்டமே எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம்.

எங்களுடைய டிப்ளமேட் செயல்பாடுகளின் சோதனை முயற்சிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நல்ல பலன் அளித்தது. அதன் வெளிப்பாடே அமெரிக்காவின் இரண்டு தீர்மானங்களும். கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, முன்னேற விரும்புகிறோம். ஆக்கபூர்வமான விமர்சனங்களில் இருந்து எம்மைத் திருத்திக்கொள்கிறோம்; மன்னிப்பும் கேட்க விரும்புகிறோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நோர்வே எனப் பல நாடுகள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. எங்களின் இந்தச் செயல்பாடுகளுக்கான விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி: இலங்கையின் வட பகுதிகளில் நடைபெறவிருக்கும் மாகாணத் தேர்தலில், ஈழ அரசாங்கத்தின் அதிகார அழுத்தத்தை மீறி தமிழர்கள் வெற்றி பெறுவார்களா?

பதில்: தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இந்தத் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் அனைவருக்கும் வாக்குரிமை, முறையான வாக்குப் பதிவு எனத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால், தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். ராஜபக்ச அரசின் மீதான கோபத்தையும், தமிழர்களின் தாகத்தையும் மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்!

கேள்வி: இந்தியா முன்மொழிந்த 13-வது சட்டத் திருத்த மசோதாவை இலங்கை ஏற்க மறுக்கிறது. அதே வேளை யில் ஈழத் தமிழர்களும் அதிருப்தி வெளிப்படுத்துகிறார்கள். 13-வது சட்டத் திருத்தத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: கடந்த சில தசாப்தங்களாக‌ தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப் புலிகளையும் அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்த பிறகு, பான் கீ மூனுக்கும் மன்மோகன் சிங்குக்கும் ராஜபக்ச பல வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், அவை எவையுமே செயல்வடிவம் எடுக்கவில்லை. லேண்ட் பவர், போலீஸ் பவர் என எதனையும் இன்று வரை வழங்கவும் இல்லை.

இந்த நிலையில் எங்களைப் பொறுத்தவரை 13-வது சட்ட திருத்தம் முடிவும் அல்ல, தொடக்கமும் அல்ல. அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இலங்கை அரசின் நரித் தந்திர வேலைகளால் இந்தியாவுக்குப் பெரும் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதிகள் தமிழ்மக்களுக்குக் குறைந்தபட்ச நீதியைக்கூட வழங்க மாட்டார்கள்!

கேள்வி: நவம்பர் மாதம் இலங்கையில் கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. 'மாநாட்டின் முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்ச கொமன்வெல்த் நாடுகளின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன... அது உண்மையா?

பதில்: அந்த நிலைமை மட்டும் ஒருபோதும் நேர்ந்துவிடக் கூடாது. அது இப்போதைய ஈழத் தமிழர்களின் நிலையை முற்றிலும் மோசமாக்கிவிடும். இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை அதன் உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும். இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது. 'ஒருவேளை நீங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றால், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் நீங்களும் பங்கேற்றதற்கு ஒப்பாகும்’ என கனடாவிடம் விளக்கினோம்.

எங்கள் வார்த்தைகளை செவிமடுத்து, 'கனடா அந்த மாநாட்டில் பங்கேற்காது’ எனச் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல பிரிட்டன், நியூசிெலாந்து,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்களும் எமக்குச் சாதகமான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்!

கேள்வி: நீங்கள் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் உண்டு. பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது எந்த அளவுக்கு உண்மை?

பதில்: 1986-ல் நான் யாழ்ப்பாண குருமடத்தில் பேராசிரியராக இருந்தபோது ஒருமுறை பிரபாகரனைச் சந்தித்தேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு என்னை அவர் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதும் சந்தித்தேன். அந்த இரண்டு சந்திப்புகளுமே எமது தாயகம் குறித்தும், மக்களின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதிலேயே மையம் கொண்டது. அதன் பிறகு, நான் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டேன்.

பிரபாகரன் இருக்கிறாரா? என்ற கேள்வி எமக்கு இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. அவர் பெயரைச் சொல்லி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபாகரனைக் காட்டிலும், அவரின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்!

(விகடன் )
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல