புதன், 19 பிப்ரவரி, 2014

போர் என்ன விளையாட்டா?

நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வெளியாகும் இந்து பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு செய்தி அதிர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது. சுண்டெலிகள் சீவன் போக அலறியடிப்பதை உணராமல் பூனை விளையாடுமாமே, அதைத்தான் ஞாபகப்படுத்தியது இந்தச் செய்தி.



பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. என்பதாக அந்தச் செய்தி எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இது தொடர்பாக பாஜக-வின் மூத்த தலைவர்கள் இருவர் இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அண்மையில் சென்னையில் ரகசியமாக சந்தித்துப் பேசினர். இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இலங்கையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

உங்களின் யோசனைகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கத்தயாராய் இருக்கிறோம் என்று சம்பந்தனிடம் சொன்ன பா.ஜ.க தலைவர்கள், மத்தியில் அமையும் புதிய அரசு, தூதரக அளவிலான நடவடிக்கைகளின் மூலமே ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமா அல்லது இந்திரா காந்தி எப்படி கிழக்கு பாகிஸ்தான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதைப் போல (இலங்கை மீது இந்தியா போர் தொடுத்து) ஈழ விவகாரத்திலும் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா என்று கேட்டார்களாம்.

இந்த சந்திப்பின்போது, இலங்கையில் நடந்த கொடுமைக ளைப் பார்த்தபோது பேசாமல் விடுதலைப்புலி ஆகி விடலாமா? என்று நான்கூட சில நேரங்களில் நினைத்தது உண்டு என்று பாஜக தலைவர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டாராம்… – இவ்வா றிருக்கிறது இந்துப் பத்திரிகையின் செய்தி.

வெளிநாடுகளினதும் மற்றும் அயல் நாட்டினதும் அரசியல் வாதிகள், தங்களது தேர்தல் வெற்றிகளுக்கும் பூகோள அரசியல் லாபங்களுக்குமாக பகடைக்காய்களாக உருட்டி விளையாடுவதற்கு ஏற்றவர்கள்தான் இலங்கைத் தமிழர்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

காஷ்மீர் முஸ்லிம்களிடமோ, மத்தியப் பிரதேச நக்சலைட் ஆதரவு பழங்குடி மக்களிடமோ அல்லது பஞ்சாப் தீவிரவாதத் தலைவர்களிடமோ எந்த வெளிநாட்டினராவது இப்படி ஒரு உசுப்பேற்றும் கேள்வியைக் கேட்க முடியுமா? அது, எவ்வளவு பாரதூரமான விஷயமாகப் பார்க்கப்படும்! இலங்கையில் போரை உண்டாக்குவது மட்டும் ஏன் அவ்வளவு சுலபமான விஷயமாகப் பேசப்படுகிறது? போரால் சிதிலமான – இன்னும் அந்த வதைகள் இழப்புகளிலிருந்து மீள முடியாமல் இருக்கும் நம் சமூகத்தின் தேவை என்னவென்பதை நம் தலைவர்கள் எனப்படுவோர் தெளிவாகச் சொல்லாமல் மழுப்பலாக நடந்து வருவதனால்தான், வெளி நாடுகள் இன்னொரு போர்தான் இவர்களுக்குத் தீர்வு என்கிற ரேஞ்சில் கதைக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த தமிழ்த் தலைவர்கள், நடைமுறைக்குச் சரிவரக்கூடிய தீர்வு என்னவென்பதைச் சொல்லாமல் பம்முவதால், இலங்கை அரசைத் தண்டிக்க சர்வதேச நீதிமன்றம் அல்லது படையெடுப்புதான் வேண்டும் என்பது போன்ற எண்ணப்பாடுகளையே வெளிநாடுகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

Thinamurasu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல