வெள்ளி, 21 மார்ச், 2014

239 பயணிகளை பத்திரமாக மீட்க விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு ரகசிய பேச்சு? பரபரப்பு தகவல்கள்

ஜார்ஜ் டவுன்:மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ம் தேதி பீஜிங் சென்ற விமானம் மாயமான பிறகு பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விமான கம்ப்யூட்டரில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்த யாரோ, விமான பாதையை மாற்றி பதிவு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கேற்ப விமான பைலட் அகமது ஜகாரியின் வீட்டில் சோதனை செய்த போது, விமானம் ஓட்ட பயிற்சி பெறும் சிமுலேட்டர் கருவியில் சில தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அழிக்கப்பட்ட அந்த தகவல்களை, அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ. உதவியுடன் மலேசிய அதிகாரிகள் இப்போது மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



மர்மம் நீடிக்கும் நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிவிக்கும்படி மலேசிய அரசை சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் போல் 2 பொருட்கள் மிதப்பது சாட்டிலைட் அனுப்பிய படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று கூறினார். அத்துடன் இந்திய கடல் பகுதியில் போர் விமானங்கள், கப்பல்கள் தொடர்ந்து தேடி வருகின்றன. எனினும், குறிப்பிட்ட அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், விமானத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம். பயணிகளை பத்திரமாக மீட்க கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று பயணிகளின் உறவினர்கள் உள்பட பலரும் ஆன்லைனில் சந்தேகம் கிளப்பி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பயணிகள் உயிருடன் உள்ளனர்.

அவர்கள் திரும்பி வருவார்கள் என்று அவர்களுடைய உறவினர்கள் பலர் மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
ஆனால், பைலட்டே விமானத்தை கடத்தி இருக்கலாம். அல்லது அவரே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் விமானத்தை கடத்தி எங்காவது மூழ்கடித்திருக்கலாம் என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும், விமான பைலட் ஜகாரி அகமது ஷா (53), கடந்த பிப்ரவரி 3ம் தேதி தனது வீட்டில் உள்ள சிமுலேட்டர் கருவியில் இருந்து சில தகவல்களை அழித்துள்ளார் என்று மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஷாமுதீன் உசைன் கூறியுள்ளார். இதற்கு மலேசிய எதிர்க் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிமுலேட்டர் தகவல்களை வெளியிடுவதால் என்ன பயன்? காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியுமா?

என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பைலட் ஜகாரி, மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வருக்கு நெருங்கிய உறவினர் என்பதால் பல சந்தேகங்கள் கிளப்புகின்றனர். இதற்கு மலேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் காணாமல் போன பிறகு, 6 மணி நேரம் விமானம் பறந்ததாக கூறப்படுகிறது. விமானத்தின் பயண பாதை குறித்த ரேடார் தகவல்களையோ, விமானம் எங்கு சென்றிருக்கலாம் என்ற உத்தேச இடத்தையோ மலேசிய அரசு இதுவரை வெளியிடாதது ஏன் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் மலேசிய அரசியலிலும் சிக்கல் அதிகரித்துள்ளது.

tamilmurasu

தொடர்புடைய பக்கங்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல