வெள்ளி, 14 மார்ச், 2014

இது ஆபத்தைக் குறிக்கும் அடையாளம் அல்ல; இதுதான் எம்மை அடையாளம் காட்டும் அடையாளம்

மண்டையோடும் அதன் கீழ் குறுக்கு வடிவிலான இரண்டு எலும்புகளும் கொண்ட குறியீடு அபாயத்தை உணர்த்துவதாகும். குறித்த இடத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தை காட்டுவதற்கு இந்த மண்டை ஓட்டுச் சின்னமே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், நம் தமிழ் மண்ணில் இந்த மண்டையோடும் எலும்புக் கூடும்தான் எங்கள் இனத்தில் உயிரிழந்தவர் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கான ஒரே அடையாளம்.



யாழ்ப்பாணத்தின் செம்மணி முதல் மன்னார் மாதோட்ட நன்னகர் உள்ளிட்ட வடக்கின் அனைத்துப் பகுதியிலும் மனித எலும்புக்கூடுகளேவிதை படுபொருளாகிவிட்டன.தமிழர் தாயகத்தில் ஒரு சிறு கிடங்கை வெட்டினாலும் அதில் மனித எலும்புக்கூடு வந்து விடும் என்று பயம் கொள்ளும் அளவிற்கு நிலைமை உள்ளது.

வடக்கில் நாளாந்தம் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் பற்றி தென்பகுதி சிங்கள மக்கள் எந்தளவு தூரம் அறிந்து கொண்டுள்ளார்கள்?அது குறித்து அவர்களின் மனநிலை என்ன? என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை.

அதேநேரம் எங்கள் மண்ணில் இருக்கக் கூடிய மனிதப் புதைகுழிகள் பற்றி எங்கள் அரசியல் தலைமைகள் தென்பகுதிகளுக்கு எடுத்துச் சொல்ல ஏதேனும் உபாயம் வகுத்ததாகவும் தெரியவில்லை.எதுவாயினும் எங்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகள் அனைத்தும் எங்கள் உறவுகள்; இந்த மண்ணில் வாழவேண் டிய இளம் பிள்ளைகள்.

என்ன செய்வது? இனவக்கிரத்தின் கோரப் பசிபோக்க வந்த தசைதின்னிக் கூட்டங்கள் பசி ஆறிய பின் எறிந்த எச்சங்களே இந்த எலும்புக் கூடுகள். இப்போது அந்த எலும்புக் கூடுகள் யாருடையது என்ற தேடலில் மண்டையோட்டை அடையாளம் காட்டுவது மட்டுமே எங்கள் தலைவிதியாகத் தொடர்கின்றது.

நேற்று முன்தினம் கூட, மாங்குளத்துப் பற்றைக் காட்டில் ஓர் இளம் ஆண் ஆசிரியரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்னர் காணவில்லை என்ற பதிவுக்கு இப்போது கிடைத்த பதில், மாங்குளத்துப் பற்றைக் காட்டில் அவர் எலும்புக் கூடாக மீட்பு என்பதுதான்.

காணவில்லை என்ற பதிவுகள் தெளிவாக இருந்தாலும் புதைகுழிக்குள் கலந்து போய்க் கிடக்கின்ற எலும்புக் கூடுகளில் எது எவருடையது என்ற தேடலுக்கு சோதனை நடத்துவது யார்?

சுட்டவன்தான் சோதனை நடத்த வேண்டும் என்ற துன்பம் சுட்டுக் கொன்றதைவிட பன்மடங்கு பாரமானது.

ஓ! உலகமே, தமிழினத்துக்கு மட்டும் ஏன் இந்தத் தலைவிதி? வடக்கில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் குவேனியை கட்டிய விஜயனோடு கூட வந்த எழுநூறு தோழர்களுடையது என்று உங்களுக்குக் கூறினால் நீங்கள் அதற்கும் தலையாட்டும் அற்புத மனிதர்கள் அல்லவா?

இருந்தும் ஒரு நல்ல காலம். மன்னார் மாதோட்டத்தில் மீட்கப்பட்ட மண்டை ஓடுகள் திருக்கேதீச்சரத்தான் அணிந்த மாலையில் இருந்த மண்டையோட்டு மலர்கள் என்று சொல்லாமல் விட்டார்களே அந்தளவில் ஆறுதல். மற்றப்படி மண்டையோடு எங்கள் இனத்தை அடையாளம் காட்டும் அடையாளமே.

வலம்புரி இணையம்
படம்: கூகில்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல