மாயமான மலேசிய விமானத்தில் பயணித்து காணாமல் போயுள்ள பயணிகளில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், மலேசிய ரிசாட் ஒன்றில் இருந்து சீன பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் டிம் சாங், “எமது நாட்டு பிரஜைகளுக்கு பாதுகாப்பை மலேசியா உடனடியாக உறுதி செய்ய வேண்டும். கடத்தப்பட்ட சீனப் பிரஜையான பெண்ணை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என சற்று காரசாரமாகவே கூறியுள்ளார்.
மலேசியாவின் சிங்கமாட்டா தீவில் உள்ள பொர்னியோ டைவிங் ரிசாட்டில் வைத்து இந்த கடத்தல் நடைபெற்றது. மொத்தம் இரு பெண்கள் கடத்தப்பட்டனர். அந்த ரிசாட் ஹோட்டலில் தங்கியிருந்த 29 வயதான சீனப் பெண் ஒருவர். மற்றவர், 40 வயதான ஹோட்டல் பெண் சிப்பந்தி. இவர் பிலிப்பீன்ஸ் நாட்டவர்.
இந்த பெண்கள் கடத்தல் குறித்து மீடியாக்கள் குழப்பமான தகவல்களை வெளியிட்டுள்ளன. சில மீடியாக்களில் சீன பெண் தமது ரூமில் இருந்தபோது அங்கு சென்ற துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மற்ற பெண் எப்படி கடத்தப்பட்டார் என்ற தகவல் இல்லை. வேறு சில மீடியாக்கள், இரு பெண்களும் கடலைப் பார்த்தபடி படகுத்துறையில் நின்றபோது, படகில் வந்த சிலரால் கடத்தப்பட்டனர் என்கின்றன.
சம்பவம் நடந்தபோது, நேற்று இரவு 10.30 மணி. சுமார் 60 உல்லாசப்பயணிகள் இந்த ரிசாட்டில் தங்கியிருந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து, இவர்கள் மறைவுகளில் பதுங்கி தம்மை பாதுகாத்துக் கொண்டனர் (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும்).
பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த தீவிரவாத இயக்கம் ஒன்றுதான் இவர்களை கடத்தியிருக்கலாம் என ஒரு தியரி கூறப்படுகிறது. இதுவரை இந்த கடத்தலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.
தற்போது ஆஸ்திரேலியா விஜயத்தை மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் நஜீப், “சீனாவுக்கும் எமக்கும் (மலேசியா) இடையே உரசலை ஏற்படுத்துவதற்காக சிலர் திட்டமிட்டு செய்யும் காரியங்களா இவை என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.
viruvirupu



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக