வியாழன், 3 ஏப்ரல், 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜெனிவாவில் நெத்தியடி கொடுத்த இந்தியா

கடந்த 3 வாரங்களாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் அறிக்கை கடந்த புதன்கிழமை உத்தியோகபுர்வமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.



இதனை தொடர்ந்து வியாழக்கிழமை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைத்த பிரேரணை சபையில் முன்வைத்த போது பலத்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த பிரேரணை சபையில் தாக்கல் செய்யாது தடுப்பதற்கான பல முயற்சிகளை சிறிலங்கா இராஐதந்திரிகள் மேற் கொண்டிருந்தனர். ஐனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் nஐனிவாவில் தங்கியிருந்து இறுதி கட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்

ஆனாலும் இந்த முயற்சிகள் சிறிலங்காவுக்கு பலனளிக்காத நிலையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைத்த பிரேரணை சபையில் முன்வைத்த போது இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இப்பிரேரணை சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படாது தடுப்பதில் இலங்கைக்கு ஆதரவான பாகிஸ்தான் தலைமையிலான நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டன.

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைத்த இந்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என தமிழக பத்திரிகைகளும் தமிழக அரசியல் வாதிகளும் நம்பியிருந்தன.

25ஆவது மனித உரிமை பேரவை கூட்டம் ஆரம்பமான அன்றே அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இப்பிரேரணையின் வரைபை சமர்ப்பித்த பின்னர் உபமகாநாடுகள் நடைபெற்ற போது இந்தியா மௌமாகவே இருந்தது. இந்த மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என தமிழர் தரப்பில் உள்ள சிலர் நம்பியிருந்தனர்.

ஆனால் கடந்த வியாழக்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முதல் தடவையாக nஐனிவாவுக்கான இந்திய துதுவர் வாயை திறந்தார். அவர் சபையில் உரையாற்றும் போது இத்தீர்மானம் இலங்கையின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் இந்த பிரேரணையில் உள்ள 10வது பிரிவை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் nஐனிவாவுக்கான இந்திய துதுவர் யத்வந் சிங்கா தெரிவித்தார்

இந்த பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக சிறிலங்கா துதுவர் நவிநாத் ஆரியசிங்கா உரையாற்றியதுடன் தமக்கு ஆதரவான நாடுகளின் இராஐதந்திரிகளை தனித்தனியாக சென்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் இந்த பிரேரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் விவாதத்திற்கோ வாக்கெடுப்பிற்கோ விட தேவையில்லை என பாகிஸ்தான் பிரேரணை ஒன்றை முன்வைத்தது. இதற்கு இந்தியாவும் ஆதரவை வழங்கியது.

இதனை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று மனித உரிமை ஆணையாளர் விசாரணையை கண்காணிப்பதற்குரிய நிதி ஐ.நா.மனித உரிமை பேரவை அலுவலகத்தில் நிதி கிடையாது என்றும் இவ்வாறான விசாரணைகளை நடத்தும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு கிடையாது என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.

இதனை மனித உரிமை பேரவையின் தலைவர் மறுத்துரைத்தார். இதற்கான நிதி மனித உரிமை பேரவையில் உள்ளதாகவும் விசாரணையை கண்காணிக்கும் அதிகாரம் அல்லது விசாரணை நடத்தும் அதிகாரம் மனித உரிமை பேரவைக்கு உண்டு எனவும் தெரிவித்த மனித உரிமை பேரவை தலைவர் கடந்த காலங்களில் மனித உரிமை பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணைகளை சுட்டிக்காட்டினார்

இதன் பின்னர் இந்த பிரேரணையை ஒத்திவைக்க வேண்டும் வாக்கு எடுப்பு நடத்தக் தேவையில்லை என்ற பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாடுகளின் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவாக இந்தியா உட்பட 16 நாடுகள் வாக்களித்தன. இதற்கு எதிராக அமெரிக்கா பிரித்தானியா உட்பட 25 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தன. இதனால் பாகிஸ்தானின் கோரிக்கை தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த பிரேரணையின் 10ஆவது பந்தியை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் இந்தியா ஆகிய இலங்கைக்கு ஆதரவான நாடுகள் மற்றொரு பிரேரணையை முன்வைத்தன.

10ஆவது பந்தியில்தான் இலங்கையில் நடந்த போர்குற்றங்களுக்கு சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணைலை மனித உரிமை பேரவை ஆணையாளர் நியமிக்கும் குழு கண்காணிக்க வேண்டும் என்றும் இந்த விசாரணை திருப்தி அளிக்காத பட்சத்தில் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச விசாரணை குழுவை நியமிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

10ஆவது பகுதியை நீக்க முடியாது என அமெரிக்கா தலைமையிணான நாடுகள் வாதித்திட்டிருந்தன. இதன் பின்னர் 10ஆவது பந்தியை சேர்க்க வேண்டுமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆம் என்று அமெரிக்கா தலைமையிலான 23 நாடுகள் வாக்களித்தன. 10ஆவது பந்தியை சேர்க்க தேவையில்லை என பாகிஸ்தான் இந்தியா ஆகிய இலங்கைக்கு சார்பான 14 நாடுகள் வாக்களித்தன. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என 10 நாடுகள் ஒதுங்கியிருந்தன. இதனால் இலங்கைக்கு ஆதரவான நாடுகளின் இரண்டாவது முயற்சியும் தோல்வி கண்டன.

இதனையடுத்து இப்பிரேரணை முழுமையாக ஏற்றுக்கொள்வதா என வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இலங்கைக் எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.தீர்மானத்திற்கு ஆதரவாக ஆர்ஜென்ரினா, வெனின், ஒஸ்ரியா, பொஸ்சுவானா, பிரேசில், சிலி, கொஸ்தரிக்கா, கொத்து இவ்வோர், செக் குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ், யேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மெக்சிக்கோ, மொன்றிநீக்குறோ, பெரு, தென்கொரியா, ரூமேனியா, சியாரோலியன், மனிடோனியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 23 நாடுகள் வாக்களித்தன.
எதிராக அல்ஜீரியா, பாகிஸ்தான், ரசியா, சவூதி அரேபியா, சீனா, கொங்கோ, கென்யா, மாலைதீவு, ஐக்கிய அரபு இராச்சியம், கியூபா, வெனிசூலா, வியட்நாம். ஆகிய 12 நாடுகள் வாக்களித்தன.
இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா 05. கஸ்கஸ்தான், குவைத், மொராக்கோ, நமீபீயா, பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ, காபோன், எதியோப்பியா ஆகிய 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது ஒதுங்கி இருந்தன.

இந்த மூன்று வாக்கெடுப்பிலும் இலங்கைக்கு படுதோல்வியாகவே அமைந்திருந்தன.

இலங்கைக்கு எதிராக கடந்த காலங்களில் இரு முறை பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதும் இம்முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரேரணையில் சொல்லப்பட்ட விடயங்களை சிறிலங்கா நடைமுறைப்படுத்துகிறதா என்பதை 27ஆவது கூட்டத்தொடரில் வாய் மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்பிக்க வேண்டும் என்றும் 28ஆவது கூட்டத்தொடரில் எழுத்து மூலமான அறிக்கையும் சமர்பிக்கப்பட வேண்டும் என இப்பிரேரணயில் சொல்ணப்பட்டிருக்கிறது.

சிறிலங்கா இந்த பிரேரணையை நிராகரிப்பதாக சொன்னாலும் இப்பிரேரணை நிட்சயம் சர்வதேச ரீதியான நெருக்கடிகளை எதிர்நோக்குவது தவிர்க்க முடியாத தாகும்.
இலங்கை சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய துரிதமான சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவது உட்பட சில விடயங்களுக்கு பிரேரணை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, விசாரணை குழு ஒன்றின் ஊடாக இலங்கையில் போர் நடைபெற்ற காலத்ததில் இருத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவார்.

இந்த விசாரணைக்கு எந்த வகையில் உதவ போவதில்லை என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில், மனித உரிமை ஆணையாளர் தன்னிச்சையான விசாரணைகளை நடத்துவார் என முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மாய நிலைப்பாடுகளின் அடிப்படையிலும் தவறான எண்ணக் கருவின் அடிப்படையில் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் வலுவான நிலைமை இல்லை என்றாலும் எதிர்காலத்தில் அது ஐ.நா பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என இலங்கை மனித உரிமை ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் சபை பிரேரணை நிறைவேற்றவோ, நிராகரிக்கவோ அல்லது இலங்கைக்கு எதிராக தடைகளையோ விதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்பிரேரணையின் மூலம் சர்வதேச விசாரணைக்கான கதவுகள் திறக்கப்பட்டிருக்கிறது என்பதும் இலங்கைக்கு கசப்பான செய்தி தான்

இவ்வேளையில் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா உதவும் என நம்பிக்கொண்டிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழர் தரப்புக்கும் nஐனிவாவில் இந்திய நெத்தியடி கொடுத்திருக்கிறது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா ஒரு போதும் இருக்காது இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இந்திய மத்திய அரசு இருக்கும் என்ற செய்தியும் nஐனிவாவில் வைத்து இந்திய சொல்லியுள்ளது.

 - இரா.துரைரத்தினம்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல