புதன், 9 ஏப்ரல், 2014

தப்புக்கும் தவறுக்கும் பொறுப்பின்மைக்கும் வசதியான கூடாரம்

ஒரு காலம் ஆசிரியர்கள் என்றால் ஊர்களில் அவர்களுக்குப் பெரிய மதிப்பு.

அந்த மதிப்புக்கேற்றமாதிரித்தான் அன்றைய ஆசிரியர்களும் நடந்தார்கள்.

 'வாத்தியார் சொன்னார் தப்பாது. வாத்தியார் நல்ல விசயங்களைப் பற்றித் தெளிவாகச் சொல்வார். நல்லதையே வழிப்படுத்துவார். நல்ல காரியங்களையே சொல்வார். நியாயமாக நடந்து கொள்வார் என்ற மாதிரியான அபிப்பிராயங்கள் ஆசிரியர்களைப் பற்றி இருந்தது.
இன்று ஆசிரியர்கள் பல பாடசாலைகளில் நடந்து கொள்கிற விதத்தினால் மாணவர்களே முகத்தைச் சுழிக்கிறார்கள்.



அந்த அளவுக்கு மாணவர்களின் முன்னிலையிலேயே சீரழிகிறார்கள். சக ஆசிரியர்களுடன் மோதல், அணி சேர்ந்து நடத்தல், பக்கச் சார்ப்பாக நடந்து கொள்ளல், பாடங்களை ஒழுங்காகப் படிப்பிப்பதில்லை என்ற மாதிரியான செயற்பாடுகளால் ஆசிரியர்களை விட்டு மாணவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
அல்லது இந்த ஆசிரியர்களைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகிறார்கள்.

அன்றைய ஆசிரியர்கள் எழுத்தறிவை ஏற்படுத்தவே பெரும்பாடெல்லாம் பட வேண்டியிருந்தது. அன்றைய சமூகத்தில் இன்றிருப்பதைப் போல அடிப்படை வசதிகளோ, அடிப்படை அறிவுடைய குடும்பங்களோ இல்லை. மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த மாணவர்களைத் தங்களின் கடின உழைப்பினாலேயே அறிவாளிகளாகவும் சமூக மனிதர்களாகவும் உருவாக்கினார்கள்.

இன்று அப்படியல்ல. ஒப்பீட்டளவில் இப்பொழுது பல வசதிகள் உள்ளன. பாடசாலைகளிலும் வசதிகள் உண்டு. குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்திலும் குடும்பத்தினரின் அறிவிலும் ஓரளவுக்கு வசதியான நிலை உள்ளது.

இந்த நிலையில் மாணவர்களை வழிப்படுத்துவதும் அவர்களை மேலும் வளர்த்தெடுப்பதும் கடினமான ஒன்றல்ல.

ஆனால், இதை நம் ஆசிரியர்கள் எந்த அளவுக்குச் செய்கிறார்கள்?

உண்மையில் அரைவாசிக்கும் மேலான ஆசிரியர்கள் தங்களை அர்ப்பணித்துச் சேவை செய்கிறார்கள். அவர்களுடைய கனவாக இந்த மாணவர்களின் எதிர்காலமே அவர்களின் மனதில் நிறைந்திருக்கிறது. அவர்களால்தான் பாடசாலைகள் இன்னும் உயிர்வாழ்கின்றன. மாணவ சமூகம் அவர்களால்தான் உயர்கிறது.

இதேவேளை இன்னொரு தொகுதியினர் எந்த வகையான பொறுப்பும் இல்லாமல் சம்பளத்தையும் அதிகாரத்தையும் மட்டும் எடுப்பதற்காகவும் அனுபவிப்பதற்காகவும் பாடசாலைகளையும் மாணவர்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இவர்கள் பாடசாலைகளில் உள்ள கன்ரீகளிலும் ஸ்ராவ் றூம்களிலும் மரங்களின் கீழும் நின்று கதைப்பது, ஒழுங்காக வேலை செய்கிற ஆசிரியர்களைப் பற்றியும் ஒன்றுக்கும் உதவாத அரசியலைப் பற்றியுமே.

இந்த அரசியல்தான் இவர்களைக் காப்பாற்றியே வைத்திருக்கிறது.

என்னதான் தப்புச் செய்தாலும் என்ன தவற்றை விட்டாலும் அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தாத மாதிரிச் செய்து விடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

இந்த ஒழுங்கில்லாத ஊதாரி வாத்திமாரைப்பற்றி யாராவது முறைப்பாடுகளை மேலிடத்திற்குச் சொன்னாலோ, அல்லது விசாரித்தாலே அல்லது ஆதாரமாகக் குற்றம் சாட்டினாலோ அதையெல்லாம் தலைகீழாக மாற்றித் தங்களைச் சுற்றவாளிகளாகவும் மற்றவர்களைக் குற்றவாளிகளாகவும் மாற்றி விடுவார்கள்.

இது எப்படியென்று கேட்கிறீர்களா? எல்லாமே அரசியல்தான்.

தாங்கள் 'அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுகிறோம்', தங்களுடைய 'தமிழ்த்தேசிய உணர்வை இவர்கள் மதிக்கிறார்களில்லை'என்றெல்லாம் புலம்பி, ஊரைக் கூட்டி உத்தமர்களாகக் காட்டிவிடுகிறார்கள்.

எந்தத் தவற்றைச் செய்து விட்டும் இப்படி ஒரு புலுடாவை விட்டுத் தப்பித்துக் கொள்ளும் அளவில்தான் இன்று தமிழ்த்தேசியமும் அந்தத் தேசியத்தை வலியுறுத்துகின்ற அரசியலும் உள்ளது.

இப்படித் தவறுகளைச்செய்வோர் அதிகமாகத் தஞ்சமடைகிற ஒரு கூடாரமாகவே இன்று தமிழ்த்தேசிய அரசியலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் உள்ளது.

கள்ளர்கள், கயவர்களின் கோட்டை என்பார்களோ, அதைப்போல சுயநலமிகள், பொறுப்பற்றவர்கள், சமூக விரோதிகளின் தங்குமிடமாக.

ஒரு சிறிய உதாரணம், வன்னிப் பகுதியில் ஆசிரியர் பற்றாக்குறை என்று அங்கிருந்து பெருங்குரல் எடுத்துக் கத்துகிறார்கள், வன்னிப் பகுதி கல்வி அதிகாரிகளும் பெற்றோரும் அதிபர்களும்.

வன்னியில் பல பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம். கணக்கியல், பௌதீகவியல் போன்ற பாடங்களைப் படிப்பிக்கக்கூடிய ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இதேவேளை இந்தப் பாடங்களைப் படிப்பிக்கத் தகுதியான ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் மேலதிகமாக உள்ளனர்.
ஆனால், இவர்களில் யாருமே அங்கே போகத்தயாரில்லை. ஒரு சிலர் விதிவிலக்கு.

ஏன் அங்கே நீங்கள் போக மறுக்கிறீர்கள் என்று கேட்டால், எதற்காக அங்கே போகவேணும் என்று திருப்பிக் கேட்கிறார்கள்.
அங்கே பல மாணவர்கள் ஆசிரியர்களில்லாமல் சிரமப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

வன்னி பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம். உதவிகளும் ஆதரவும் தேவையான பகுதி என்றால், அதை அரசாங்கம் செய்ய வேணும் என்கிறார்கள்.

இது என்ன நியாயம்? இதில் அரசாங்கம் என்ன செய்வது? என்ன செய்ய முடியும்? இவர்கள் எந்த அரசாங்கத்தைச் சொல்கிறார்கள். கொழும்பு அரசையா? அல்லது கைதடி அரசாங்கத்தையா?

இவர்களை வன்னிக்கு அனுப்பி வைக்க எந்த அதிகாரியாலும் முடியாது. அதற்கு ஆசிரிய சங்கங்களும் இடமளிக்காது. காரணம் எல்லாமே யாழ்ப்பாண வியாதிக்காரர் இருக்கிற அமைப்புகள்.

ஆனால், சட்டப்படி மேலதிகமான ஆசிரியர்கள் ஒரு கல்விக் கோட்டத்திலோ வலயத்திலோ இருக்க முடியாது. எனவே இப்பொழுது யாழ்ப்பாணத்தின் பல பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பிலும் புதிய டிவிஷன்கள் உருவாக்கப்படுகின்றன. பதினைந்து இருவது மாணவர்களோடும் புதிய வகுப்புகள் இயங்குகின்றன.

வன்னியிலோ நாற்பது மாணவர்களுக்கே ஆசிரியர்களில்லை.

மாணவர்களுக்காக ஆசிரியர்கள் இருந்த காலம் மாறி ஆசிரியர்களுக்காக மாணவர்கள் என்ற காலம் வந்திருக்கிறது.

ஆசிரியர்களின் நியாயம் இப்படியென்றால் அதற்கான மதிப்பு எப்பிடியிருக்கும்?

- வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல