ஐரோப்பிய ஒன்றிய புகலிடக் கோரிக்கையாளர் உடன்படிக்கை பற்றிய யதார்த்தம்
அண்ணாந்து பார்க்கும் மாளி கைக் கட்டி, அதன் அருகி னில் ஓலைக் குடிசை போட்ட பொன்னான உலகம்.
வறியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் தினமும் செத்துப் பிழைக்கும் சேரிப்புறம். செல்வந்தர்கள் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கித் திளைக்கும் மாடமாளிகை.
கொடியதொரு சேரிப்புற வாழ்க்கையில் அடுத்த வேளை சோறு என்பது மாத்திரம் பிரச்சினை அல்ல. கும்பல் மோதலில் தப்பி அடுத்த கணம் உயிருடன் இருப்பதும் சவாலே.
சேரிவாசிகளுக்காக மாடமாளிகையின் கதவுகள் என்றும் திறப்பது கிடையாது. முதலைகள் நிறைந்த அகழி கடந்து, மாடமாளிகையின் சுவர்களைத் தாண்டி உள்ளே குதிப்பது வழக்கம்.
இந்த குறுக்கு வழியின் ஆபத்துக்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. மரண முதலைகள் வாய்திறந்து காத்திருக்கும். முதலைகளுக்கு இரையானவர்கள் ஏராளம். மரணம் தாண்டி மாடமாளிகைக்குள் சென்றால் இன்னொரு போராட்டம்.
மாடமாளிகைக்குள் செல்வந்தர்கள் கூட் டுக் குடும்பமாக வாழ்வார்கள். அந்தக் கூட்டுக் குடும்பத்திற்குள் சேரிவாசிகளை சேர்த்துக் கொள்ள செல்வந்தக் குடும்பங்கள் விரும்புவதில்லையென்றால், அதற்கு காரணங்களை விபரிக்கத் தேவையில்லை.
தடுப்புச் சுவர் தாண்டிக் குதித்து விட்ட சேரிவாசிகள் சிலரை என்ன செய்வது என்பது மாடமாளிகையின் பிரச்சினை. இந்த சேரிவாசிகளை பங்கு போட்டுக்கொண்டு தமது குடும்பங்களுக்குள் சேர்த்துக் கொள்வதென செல்வந்தர்கள் இணங்கியுள்ளனர்.
இந்த செய்தி, 'எல்லாரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று எண்ணும் இலட்சியவாதிகளுக்கு உவப்பானதாக இருக்கலாம். செல்வந்தர்கள் மத்தியில் நீடித்த குடுமிச் சண்டையை ஆராய்ந்தால், இது பகற்கனவு என்பது புரியும்.
வடக்கு ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வருபவர்கள் சேரிவாசிகள். 28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியமே மாடமாளிகை என்றால் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம்.
புகலிடக் கோரிக்கையாளர்களை மீளக் குடியமர்த்தும் யோசனைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளார்கள் என்பது தெரிந்த விடயம். இந்த இணக்கப்பாட்டுக்குள் நீடிக்கும் முரண்பாடுகள் தெரியாத விடயம் எனலாம்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் அறுபதாயிரம் பேரை ஐரோப்பிய நாடுகளுக்குள் மீளக் குடியமர்த்துவது என்பது இணக்கப்பாடு. இவர்களை எவ்வாறு மீளக் குடியமர்த்துவது என்பது பற்றிய கருத்து மோதல்கள் முரண்பாடாக நீடித்தன.
மத்திய தரைக்கடல் தாண்டி ஐரோப்பிய மண்ணில் கால்பதித்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு 114,000 பேர் மத்தியதரைக் கடலில் இருந்து காப்பாற்றப்பட்டார்கள். 2,600 பேர் கடலில் மாண்டார்கள்.
இன்று இத்தாலியிலும், கிரேக்கத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ள 40,000 பேரை ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் மத்தியில் பகிர்ந்து கொள்வது பற்றி பெல்ஜியத் தலைநகரில் இடம்பெற்ற மாநாட்டில் இணக்கம் காணப்பட்டது.
இதற்கு அப்பால், சிரியா, எரிட்ரியா ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி ஐரோப்பாவை அடைய முடியாத நிலையில் தத்தளிக்கும் 20,000 பேர் பற்றியும் ஆராயப்பட்டது. இவர்களும் ஐரோப்பிய நாடுகளில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள்.
இந்த இணக்கப்பாட்டின் பிரகாரம், ஒவ்வொரு நாடும் தாமாக முன்வந்து தாம் எத்தனை பேரை ஏற்றுக் கொள்கிறோம் என்பதை அறிவிக்க வேண்டும். சுயவிருப்ப கோட்டா முறையின் கீழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பங்கிடப்படுவார்கள்.
புகலிடக் கோரிக்கையாளர் எவரேனும் ஐரோப்பாவில் மீளக்குடியமர்த்தப்பட அருகதையற்றவர்கள் என்று தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அவரை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் ஏற்பாடும் உள்ளது.
இந்தக் கோட்டா முறையின் கீழ், எந்தெந்த நாடு எத்தனை பேரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அடுத்த மாதம் ஆராயப்படும். அதற்கான கூட்டத்தில் உள்நாட்டு அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.
ஐரோப்பாவை நாடும் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது சமகால உலகின் சிக்கலான நெருக்கடியாகும். இந்த நெருக்கடிக்கு பல பரிமாணங்கள் உண்டு. இதனை பொருளாதார கண்ணோட்டத்தில் ஆராயலாம். மனிதாபிமான கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.
பிரசல்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ஐரோப்பிய தலைவர்கள், இதனை சுயநலக் கண்ணோட்டத்தில் மாத்திரமே ஆராய்ந்தார்கள். வந்தவர்களை ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் தள்ளிவிட்டு வரவிருப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை காட்டினார்கள்.
வந்தவர்களை பகிர்ந்து கொள்வதிலும் வாதப் பிரதிவாதங்கள். இந்த வாதப் பிரதிவாதங்கள் காரணமாக, வியாழக்கிழமை பிற்பகல் ஆரம்பித்த கூட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.
மாடமாளிகை என்பது கூட்டுக் குடும்பம் என்றால், அழையா விருந்தாளிகளாக வந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் பிரச்சினையை சமாளிப்பதில் ஒவ்வொருவருக்கும் சமபங்கு இருக்க வேண்டும் என்பது தானே நியதி.
ஆனால், பிரசல்ஸ் மாநாட்டில் சுமையை அடுத்தவன் தோள்களில் திணிப்பதன் மீதே ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அதன் காரணமாக, ஒருவரை ஒருவர் பெயர் சொல்லித் திட்டும் அளவிற்கு நிலைமை மோசமானதாகத் தெரிகிறது. இத்தாலிய பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும், லித்துவேனிய ஜனாதிபதிக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது. கோட்டா முறை தீர்வை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று லித்துவேனிய ஜனாதிபதி விமர்சித்ததாகத் தெரிகிறது.
*பிரிட்டன் பிரதமர் பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்துக் கொள்ள விரும்பவில்லை. அகதிகளைப் பங்கிட்டுக் கொள்ளும் உடன்படிக்கையில் இணையப் போவதில்லையென அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய பிரஜையொருவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடவுச்சீட்டு இல்லாமல் பயணிக்கக்கூடிய ஷெங்கன் வலய ஏற்பாட்டுக்குள் பிரிட்டன் இல்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கூட்ட நிலவரங்களை ஆராய்ந்தால், இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகள் கோட்டா முறையின் ஊடாக புகலிடக் கோரிக்கையாளர்களைப் பங்கீட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதைக் காணலாம்.
எனினும், அகதிகளை கையாள்வதில் அனுபவம் இல்லாத மத்திய ஐரோப்பிய நாடுகள் கோட்டா முறையை ஆட்சேபிப்பதும் தெரியவரும். பத்துக்கு மேற்பட்ட நாடுகள் கோட்டா முறையை ஆட்சேபிக்கின்றன.
புகலிடக் கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்தும் யோசனை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் கண்டதாகக் கூறப்பட்டாலும், அந்த யோசனையின் மீது அனைத்து நாடுகளும் கடப்பாடு கொண்டிருக்கவில்லை என்பது கண்கூடு.
இந்த நிலையில், 60,000 பேரை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப் போகின்றன என்பது முக்கியமான பிரச்சனை. ஒரு நாடு கூடுதலான சுமைகளை ஏற்று மற்றைய நாடு சும்மா இருக்கக்கூடிய நிலையே தென்படுகிறது.
இது ஆரோக்கியமற்ற நிலைமையாகும். இந்த நிலைமையால் ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பின் எதிர்காலம் மாத்திரமன்றி, புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சிகளும் தீவிரமாக பாதிக்கப்படக்கூடும்.
இன்று மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்க நாடுகளிலும் நீடிக்கும் ஆயுதமோதல்கள் முடிவடையக்கூடிய அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாறாக, அவை உக்கிரமடைந்து வருவதையே காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில், சிரியா போன்ற நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளை அடையக் கூடிய புகலிடக் கோரிக்கையாளர்களன் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனை எந்தவகையிலும் தடுக்க முடியாது.
சிரியாவையே உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். இந்த நாட்டில் இருந்து தப்பிச் சென்ற ஒரு இலட்சம் அகதிகள் லெபனானில் தங்கியிருக்கிறார்கள். இவர்களை சமாளிப்பதில் லெபனான் சிரமங்களை எதிர்கொள்கிறது.
இன்று ஐரோப்பிய நாடுகளின் முன்னிலையில் இருப்பது, சில ஆயிரம் அகதிகளின் பிரச்சினை. உலகம் முழுவதிலும் நிர்க்கதியான நிலையில் இருக்கும் அகதிகளின் எண்ணிக்கை இலட்சங்களைத் தாண்டுகிறது.
வறுமை, போர் முதலான கொடுமைகள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் சேரியாக மாறுகையில், ஒரு மாடமாளிகை மாத்திரம் கதவுகளை அடைத்துக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் என்ன எவரும் கேள்வி எழுப்பலாம்.
மாடமாளிகையின் கதவுகள் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், சேரிவாசி கள் சேர்ந்து மாடமாளிகையின் சுவர்களை தகர்க்கக்கூடிய நிலைமை ஏற்படக்கூடும்.
இந்த நிலையைத் தவிர்க்க வேண்டுமானால், மாடமாளிகையின் கூட்டுக் குடும்பம் ஒற்றுமை கண்டு ஒட்டுமொத்த உலகநலனுக்காக பாடு பட வேண்டும்.
சதீஸ் கிருஷ்ணபிள்ளை - வீரகேசரி




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக