தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பின்னர், தாய்நாடு திரும்பி வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அகிம்சை ஆயுதத்தின் மூலம் அதில் வெற்றியும்பெற்ற மகாத்மா காந்தியின் உறவினர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சமூகச் சேவைகளில் ஈடுபட்டு, அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வகையில், மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தியான ஆஷிஷ் லதா ரம்போகின் (45) என்பவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவை தொடர்பாக தொண்டு செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பிரபல செல்வந்தர்களை சந்தித்த ரம்போகின், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் உள்ள கட்டில்களுக்கு படுக்கை வசதி செய்வதற்காக இந்தியாவில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் லினென் துணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுங்கவரி செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள கைபதிலாக பண உதவி செய்யுமாறு அவர்களை கேட்டுக்கொண்ட ரம்போகின், அதற்கான ரசீதுகளையும் காட்டினார். அந்த துணிகளை டெலிவரி எடுக்க 11 மில்லியன் ராண்டுகள் தேவைப்படுவதாக அவர் கூறியதை நம்பிய மஹராஜ் என்பவர் 6.2 மில்லியன் ராண்டுகளை கொடுத்தார்.
இதேபோல், தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத இன்னொருவரும் 5.2 மில்லியன் ராண்டுகளை அளித்தார். ஆனால், நாளடைவில் அப்படி எந்த துணி கண்டெயனரும் டர்பன் துறைமுகத்துக்கு வரவில்லை. பித்தலாட்டம் செய்து போலி ரசீதுகளை தயாரித்து தொண்டு நிறுவனத்தின் பெயரால் இந்த மோசடியில் ரம்போகின் ஈடுபட்டுள்ளார் என்பது பணத்தை பறிகொடுத்த இருவருக்கும் தெரிய வந்தது.
இதையடுத்து, பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் தென்னாப்பிரிக்க நாட்டின் சிறப்பு படையான ‘ஹாக்ஸ்’ அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ஆஷிஷ் லதா ரம்போகினின் மோசடிகள் அம்பலமானது.
இதையடுத்து, திருட்டு, பித்தலாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் டர்பன் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் மீது போலீசார் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று அவர் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
ஆஷிஷ் லதா ரம்போகினின் தாயாரான எலா காந்தி, பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலராக தொண்டாற்றி வருகிறார்.
குறிப்பாக, கருப்பின அடிமைகளுக்காக மகாத்மா காந்தி உருவாக்கிய போனிக்ஸ் சேரி எனப்படும் பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடடைய பல முயற்சிகளை எடுத்து, சாதனை புரிந்தமைக்காக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நன்மதிப்பையும், பல விருதுகளையும் பெற்றவர் எலா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக