வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் பிரபாகரனை கண்டுபிடித்து தரச் சொல்லி இலங்கை எம்பி மனு கொடுப்பது சரியா? தவறா? - தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து

மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கண்டு பிடிக்க வேண்டுமென்று இலங்கை யில் உள்ள காணாமல் போன வர்களுக்கான மையத்தில் மனு கொடுக்க விரும்புகிறேன் என்று இலங்கை எம்பி சிவாஜி லிங்கம் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.



இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போருக் குப் பிறகு அந்நாட்டில் 20 ஆயிரத் துக்கும் அதிகமான தமிழர்கள் காணாமல் போயினர். இது தொடர் பாக மனித உரிமை அமைப்புகள் கொடுத்த நெருக்கடியால், காணா மல் போனவர்களுக்கான மையத்தை இலங்கை அரசு (Office Of Missing Persons-OMP) சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களில் ஒருவருமான சிவாஜிலிங்கம், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கண்டுபிடித்துத் தரக்கோரி, காணாமல் போனவர் களுக்கான மையத்தில் மனு அளிக்க விரும்புகிறேன். பிரபாகரனின் சகோதரிகள் சம்மதம் தெரிவித்தால், நான் அதைச் செய்வேன்” என்று கூறி னார். பிரபாகரன் இறந்துவிட்ட தாகச் சொல்லப்படும் வேளையில், சிவாஜிலிங்கத்தின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் புலம்பெயர் தமி ழர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தில் நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்:

சிவாஜி லிங்கம் என்ன நோக்கத்தில் இப்படி கூறினார் என்று தெரியவில்லை. அவர் இதுபற்றி விரிவாகக் கூற வேண்டும்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்:

ஏகலைவனுக்கு எப்படி துரோணாச்சாரியாரோ அப்படித்தான் பிரபாகரனுக்கு நேதாஜி. நேதாஜியை மட்டுமே அவர் தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார். நேதாஜி வழியிலேயே தனது போராட்டத்தை மேற்கொண்டார். பிரபாகரனின் நிலை பற்றி பரப்பப்பட்டு வரும் தகவல்களை நேதாஜியின் மரணம் சார்ந்து பரப்பப்படும் தகவல்களுடனே ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இந்த சூழலில், பிரபாகரனை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று காணாமல் போனவர்களுக்கான மையத்தில் மனு கொடுப்பது சரியான நடவடிக்கையே. இதனை நான் வரவேற்கிறேன்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்:

பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை இலங்கை இன்னமும் சரியானபடி நிரூபிக்கவில்லை. இந்த சூழலில்தான் சிவாஜி லிங்கம் இப்படி சொல்லியுள்ளார். பிரபாகரன் உயிரோடு இருக் கிறாரா என்ற விவாதத்துக்கே நாங்கள் செல்ல விரும்ப வில்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் என்னைப் போன்ற லட்சக்கணக் கானவர்களை தொடர்ந்து இயங்கச் செய்கிறது. அது கோடிக்கணக்கான தமிழர்களின் நம்பிக்கை. பிரபாகரன் விஷயத்தில் இலங்கை அரசு தீர்மானமான முடிவை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிவாஜிலிங்கம் இப்படி சொல்லியிருக்கக் கூடும். காணாமல் போய்விடுகிற அளவுக்கு பிரபாகரன் சாதாரண ஆள் இல்லை. எனவே, இதில் எனக்கு உடன்பாடில்லை.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி:

இது ஏதாவது விளம்பர நோக்கில் சொல்லப்பட்டதா என்று தெரியவில்லை. ஆகவே, இதுபற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல் முருகன்:

சிவாஜிலிங்கம் இதனை போகிற போக்கில் சொன்னது போல் தெரிகிறது. அவர் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை விரிவாக அறிக்கையாக தந்திருந்தால்தான் கருத்து ஏதும் கூற முடியும்.

தமிழர் முன்னேற்றப் படை தலைவர் கி.வீரலட்சுமி:

பிரபாகரன் மரணமடைந்து விட்டதற்கான இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று இந்தியா கேட்ட போது இலங்கை அதனை தரவில்லை. 2009-ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறி இலங்கை ராணுவம் காட்டிய உடலை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டதையும் இலங்கை ஏற்கவில்லை. இது தொடர்பாக சிவாஜிலிங்கம் எம்பி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இந்த சூழலில், காணாமல் போனவர்களுக்கான மையத்தில் பிரபாகரனை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று மனு கொடுப்பதில் தவறேதும் இல்லை. இதனை தமிழர் முன்னேற்றப் படை வரவேற்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எம்.மணிகண்டன்

(Tamil Hindu)





Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல