சனி, 18 மார்ச், 2017

3 மணி நேரமாக காருக்குள் உயிரோடு எரிந்து கருகிய அஸ்வின், இலங்கை மனைவி நிவேதா.. அதிர்ச்சித் தகவல்கள்!

கார் ரேஸில் சர்வதேச சாம்பியன் பட்டம், தேசிய அளவில் பட்டம் வென்ற வீரர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.



சென்னையில் சொகுசுகார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. பிரபல கார் பந்தைய வீரர் அஸ்வினுக்கு இலங்கையைச் சேர்ந்த நிவேதா உடன் திருமணமாகி ஒராண்டு நிறைவடைந்துள்ளது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிவேகமாக வந்த போது பிஎம்டபிள்யூ கார் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதி உடைத்து மரத்தின் மீது மோதி சிக்கியது. இதில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் எரிபொருள் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

அஸ்வின் - நிவேதா
இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட அஸ்வினும் அவரது மனைவி நிவேதாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை உடைத்து எடுத்து உடல்களை மீட்டனர். இதனையடுத்து இருவரின் உடல்களையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சாம்பியன்
விபத்தில் உயிரிழந்த அஸ்வின் இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றவர். ஐந்து முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதிதான் இவருக்கும் மருத்துவமாணவி நிவேதாவிற்கும் இடையே திருமணம் நடைபெற்றது. ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் கார் விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்.

எலும்புக்கூடான கார்
கார் விபத்து குறித்து இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. இந்த விபத்து கார் ரேஸ் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நிகழ்ந்தது ஏன்?
கார் விபத்து நிகழ்ந்தது எப்படி என்று விசாரணை நடத்தி வரும் போலீசார், குடிபோதையில் விபத்து நேரிட்டதா? அல்லது கார் ரேஸ் வீரரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் விபத்தை ஏற்படுத்தினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் கண்ணீர்
விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் கண்ணீருடன் அஸ்வின் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சாதாரண விபத்தாக இருக்கலாம் என்று நினைத்து வந்த இடத்தில் இப்படி உடல் கருகும் அளவிற்கு விபத்து நேர்ந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினர். கார் ரேஸ் வீரரான அஸ்வின் இதுபோல பலமுறை நள்ளிரவில் பயணம் செய்துள்ளதாகவும் இதுவரை ஒருமுறை கூட விபத்தில் சிக்கியதில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல