திங்கள், 8 பிப்ரவரி, 2010

கலாசாரம் எனும் வெற்று வார்த்தை

நம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க் கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். பெண்களின் கல்வி மட்டம் எண்ணிக்கை அடிப்படையிலும் தரத்தின் அடிப்படையிலும் உயர்ந்தே வருவதால் இனி வரும் தலைமுறையில் இல்லத்தரசி என்ற வார்த்தைக்குள் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய அவசியம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.

படிப்பை முடித்துவிட்ட பெண்களின் பெற்றோரைச் சந்திக்கும் உற்றார் உறவினர்கள் அந்தப் பெண்களின் திருமணம் பற்றிப் பேசாமல் அவர்களின் தொழில் வாய்ப்பைப் பற்றி விசாரிப்பதும் ஆரோக்கியமானதொரு சூழ்நிலைதான்.

ஆனால் இவை மட்டுமே போதுமா?
இன்னமும் பெண்களின் சுயசிந்தனை என்பது மூளையிலேயே மழுக்கடிக்கப் படுவதைப் பார்க்கும்பொழுது வேதனை யாகத்தான் உள்ளது. கல்வி என்பது வேலைக்காகத்தான் என்றாலும் அதிலும் கூடப் பெண்களுக்கென்று குறிப்பிட்ட சில துறைகளை தகவல் தொழில்நுட் பம், மருத்துவம் என்றாலும் பெண்களுக் கான மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை மட்டுமே படிக்க வலியுறுத்தப்படுகின்றனர்.

அறிவியல் யுகம் நடந்துகொண்டிருந்தாலும் ஒரு சிறுமி பெரியவள் ஆனதை ஊர் கூடிக் கொண்டாடுவதும், வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்ததும், படித்த படிப்பை ஓரம் கட்டி வைத்துவிட்டு திருமண பந்தத்துக்குள் அவளை நுழைப்பதும் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. போதாக்குறைக்கு அண்டை அயலில் உள்ளவர்களும் "பெரியவங்க நல்லதுதான் சொல்லுவாங்க' என்று பெண்ணின் மூளையைச் சலவை செய்வதும் வழக்கத்தில் இருக்கிறது. பெண்களின் எந்த விஷயமும் சகம் சார்ந்தே முடிவெடுக்கப்படுகிறது. உறவினரில் இருந்து, பக்கத்து வீட்டார் வரை அவளுக்கு மட்டுமே அறிவுரைகள் சொல்லப்படுகின்றன.

பிரபல மகளிர் இதழ் ஒன்றில், தொலைக்காட்சி தொடரான "கோலங்கள்' நாயகிக்கு விவாகரத்து கிடைத்த பின், அவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று பள்ளி மாணவிகளைக் கேட்டால், அத்தனை பேரும் பெண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் என்பது நம் கலாசாரத்துக்கு ஒத்துவராது என்று கிளிப்பிள்ளையாய்ச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு கட்டுரையில், கிராமங்களில் இன்னும் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கும் இத்தகைய பழக்கங்க ளால்தான், நம் கலாசாரம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. "இந்த கலாசாரம்' எது தெரியுமா? பன்னிரண்டு வயது பெண்ணுக்கு ஊர் கூடி நடத்தும் மாராப்புச் சேலை என்ற வயது வந்ததும் நடத்தும் சாமத்திய சடங்கு.

அன்றைய காலக்கட்டத்தில் பெரியவள் ஆவது என்பது சுற்றத்தார்களுக்கு ஒரு அறிவிப்பு. என் மகள் தயாராய் இருக்கிறாள் என்று. அதிலும் சில பிரிவில் பெண் கேட்டுவர வேண்டும் என்று உள்ளது. ஆனால் இன்று இச்சம்பவம் நடந்த பிறகு வெளியுலகில் அச்சிறுமி கால் வைக்கும்பொழுது பலவித மன உளைச்சலுக்கும் ஆளாவாள் என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோமே?
கலாசாரச் சீரழிவு மற்றும் அதற்கான காரணங்கள் அதைக் கட்டிக்காக்க வேண் டிய பொறுப்பு அனைத்துமே பெண்களை வைத்தே சொல்லப்படுகிறது. இதில் எந்த இன, மதத்தைச் சார்ந்த ஆண்களின் பார்வையும் ஒன்றுதான். கலாச்சாரம் என்ற பேச்சை எடுத்தால் உடனே பேசப்படும் முதல் விஷயமே, பெண்மைக்கு அழகான புடைவையும், நீண்ட கூந்தலும் தான்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் ஆண்கள் அனைத்துப் பிரிவின ருக்கும் குடுமியும், கடுக்கனும் இருந்தது.
வேட்டியும் துண்டுமே உடையாகவும் இருந்தது. பின்பு சௌகரியம் கருதி முடியை வெட்டிக்கொண்டார்கள். கடுக்கனும் போனது. ஆனால் இன்று நாகரிகம் என்ற போர்வையில் அங்கும் இங்கும் தென்படுவதை விட்டு விடலாம். வேட்டி மேல் கோட்டும், பின்பு சூட்டும் கோட் டும், அதற்கு பின்பு பேண்டு சட்டையாகவும் மாறியது. வீட்டில் வேட்டி போய், லுங்கி வந்தது. இன்று லுங்கி "போயே போச்சு.' வீட்டிலும், தெருவிலும், ஏன் பொது நிகழ்ச்சியிலும் ஆண்கள் அரைக் காற்சட்டை அணிந்து வருகிறார்கள். இது கலாசார இழிவு என்று யாராவது பேசி னார்களா என்ன? உட்காரும்பொழுது, அரைக்காற்சட்டை, தொடைக்கு மேல் ஏறி "கால்'சட்டையாக மாறி எதிரில் உட் காருபவர்களை நெளிய வைக்கும். பதினெட்டு வயதில் இருந்து வயதானவர்கள் வரை இந்த உடைதான்.

தமிழ் அறிஞர்கள், பெண்ணின் உடை, கண்ணியமாகவும், கௌரவமாகவும், எதிர்ப்பாலினரின் உணர்ச்சியைத் தூண்டும்படியும் இருக் கக்கூடாது என்று குரல் கொடுக்கிறார்கள்.
அவர்கள் கண்களுக்கு இது கலாச்சாரச் சீரழிவாகத் தெரியாவிட்டாலும் அநாகரிகமாகவேனும் தெரியாமல் இருப்பது வியப்புத்தான். அதிலும் இந்த கட்டைக் காற்சட்டைக் கலாசாரம் படித்த, நாகரிகமான, மேல்தட்டு ஆண்களின் உடையாகவும் மாறிவிட்டது. இந்த அநாகரிகம் பெண்களை எந்தளவுக்குக் கூச்சமுறவும் தலைகுனியவும் வைக்கிறது என்று அறிவுஜீவிகள் பலருக்குத் தெரிவதில்லை.

அவர்களும் ஆண்கள்தானே?

ஆனால் புடைவையை விட சௌகரியமான, உடல் முழுவதும் மூடும் சல் வார் கமீசும், வேலைக்குப் போகும் பெண் காலை அவசரத்தில் நேரத்தை மிச் சப்படுத்த வெட்டிய தலைமுடியும் இவர்கள் கண்ணுக்கு ஏன் உறுத்தலாய் இருக்கிறது என்று புரியவில்லை?

கலாசாரம் என்பது மாறிக்கொண்டிருக்கும் விஷயம். உணவு, உடை, பேச்சு, நடவடிக்கை அனைத்தும் சேர்ந்ததுதான் காலசாரம். காலைக் கஞ்சி, கூழ் போன்றவை போய், இட்லி தோசை ஆனது.

இன்று ரொட்டியும், கோர்ன் பிளேக்சு மாய் மாறிப்போனது. மாறும் மொழிக்கு உதாரணம் வேண்டும் என்றால் ஐம்பது அறுபது வருடத்துக்கு முந்திய கதைக ளைப் படித்தால் தமிழ் எப்படி மாறியிருக்கிறது என்று தெரிய வரும்.

ஆக, கலாசாரம் என்ற அர்த்தமில்லாத வார்த்தை, ஆண்டாண்டு காலமாய் பெண்ணை அடக்கி ஆளும் ஆண்களுக்குக் கிடைத்த துருப்பிடித்துப் போன ஆயுதம். ஆனால் பெண்களின் சிந்தனையில் மாற்றம் வந்துகொண்டு இருக்கிறது.

உதாரணமாக, மேற்படி தொலைக்காட்சி தொடரின் நாயகிக்கு மறுமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார்களாம் இல்லத்தரசிகள். காலம் மாறுகிறது. பெண்களின் எண்ணங்களும் மாறுகிறது. வளரும் இளைய தலைமுறைக்கும் சுயசிந்தனையை வளர்க்க வேண்டும். அவர்கள் காலத்திலாவது இதுபோன்ற கட்டுரைகள் எழுதவேண்டிய அவசியமிருக்கக்கூடாது என்பதே இன்றைய வளர்ந்த பெண்களின் எதிர்பார்ப்பு.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல