வியாழன், 25 மார்ச், 2010

மருமகள்

கணவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? புவனாவின் முகத்தில் குழப்ப ரேகைகள் கோலமிட்டன. பழைய நினைவுகள் அவள் மூளை செல்களுக்குள் ஆர்ப்பரிக்க... மெதுவாக சுதாரித்துக் கொண்டாள்.

``என்னை மன்னிச்சிடுங்க. கண் ஆபரேஷன் பண்ணிக்க போற உங்கம்மாவுக்கு துணையா ஆஸ்பத்திரிக்கு நíங்க வேற யாரையாவது அழைச்சிட்டு போங்க.'' அதிர்ந்தான் விஜய்.

மனைவியைக் கோபத்துடன் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகல... புவனா அறை மூலையிலிருந்த நீலநிறப் பெட்டியைத் திறந்து அதைக் குடைய ஆரம்பித்தாள். மூன்று நிமிடத் தேடலுக்குப் பின்... லேசாக கசங்கியிருந்த அந்தக் காகிதம் கிடைத்தது. அதை பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் விழ ஆரம்பித்தன. மூன்று நாட்கள் ஓடி விட்டன. வீட்டை கனத்த மவுனம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விஜய் புவனாவோடு பேசுவதில்லை. சாவித்திரியும் மருமகளோடு பேச்சை நிறுத்தி விட்டிருந்தாள். ``அம்மா.. ஸ்கூலுக்கு போயிட்டு வரோம்... டாடா...'' வாரிசுகள் நரேனும் ரூபினியும் கோரசாகக் கத்த... ``போயிட்டு வாங்க.. டாடா...'' என்று சொல்லிவிட்டு புவனா பூஜையறைக்குள் நுழைய...

``புவனா...'' விஜய்யின் உஷ்ணமான குரல்! பூகம்பம் ஆரம்பமாகப் போகிறது என்ற உண்மை புவனாவுக்குப் புரிந்தது. ``சொல்லுங்க..'' ``அம்மாவை அடுத்த வாரம் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணலாம்ன்னு இருக்கேன். அம்மாவுக்கு துணையா இருக்க என் அக்கா ஒத்துக்கிëட்டாங்க. நரேனையும் ரூபினியையும் நாங்க ஆஸ்பத்திரில இருந்து வர்ற வரைக்கும் சித்தப்பா வீட்ல விட்டுடலாம்ன்னு இருக்கேன்...'' ``சொல்லுங்க...'' ``உங்கம்மா வீட்டுக்கு நீ கிளம்பு. தேவைப்படறப்ப நான் வந்து கூட்டிட்டு வரேன்...''

``தேவைப்படறப்ப'' என்ற வார்த்தையில் மட்டும் அதிக அழுத்தம்! கலகலவென்று சிரித்தாள் புவனா. அவள் இமையோரங்களில் லேசான கண்ணீர்த் துளிகள். ``வெரிகுட். உங்களை நான் என்னமோன்னு நினைச்சேன். என்ன இருந்தாலும் நீங்க ஆம்பளை ஜாதியாச்சே. அதைத்தான் இப்ப நல்லா நிரூபிக்கிறீங்க. உங்க அம்மா கூட நான் துணைக்கு போகலங்கறதுக்காக என்னை என் அம்மா வீட்டுக்கு போக சொல்றீங்க. அப்படித்தானே...?''

``என் மகன் சொல்றதுல என்னடி தப்பு இருக்குது? என் கூட ஒரு வாரம் ஆஸ்பத்திரிக்கு வந்து தங்கறதுக்கு கூட உனக்கு விருப்பம் இல்லை. உன் மாதிரி ஒரு மோசமான மருமகள் இருக்கிறதை விட இல்லாம இருக்கிறதே, மேல்'' அமிலம் கலந்த வார்த்தைகளை சாவித்திரி வீச...``அத்தை...என்னை மோசமான மருமகள்ன்னுதானே சொல்றீங்க... ஒரு நிமிடம் பொறுங்க...''

புவனா அவளுடைய அறைக்குள் வேகமாக நுழைந்தாள். இரண்டு நிமிடங்களுக்குப் பின் திரும்பிய புவனாவின் கையில் அந்த கசங்கிய காகிதம் இருந்தது. ``என்ன திகைக்கறீங்க? உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நரேன் பிறந்து மூணு மாசம் ஆனப்ப என் அம்மா வீட்ல இருந்து என்னை அழைச்சிட்டு போகச் சொல்லி உங்களுக்கு ஒரு போன் பண்ணேன். அதுக்கு நீங்க போன்ல பதில் சொல்லாம இந்த பதில் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தீங்க.

இந்தாங்க.. இதைப் படிங்க..'' விஜய் கடிதத்தைப் படிக்காமல் மவுனம் சாதிக்க.. ``உங்களால அதைப் படிக்க முடியாது. நானே படிக்கிறேன்... கேளுங்க.. '' உரத்த குரலில் படிக்க ஆரம்பித்தாள். அன்புள்ள புவனாவுக்கு, அங்கு உன் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் குழந்தையை எடுத்துக் கொண்டு மூன்று மாதத்திலேயே இங்கு வந்து விடட்டுமா என்று போனில் கேட்டாய். இதுகுறித்து அம்மாவைக் கேட்டுப் பார்த்தேன்.

பச்சை உடம்புக்காரியான உன்னையும், குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு உடம்பில் தெம்பில்லை என்று என் அம்மா உறுதியாக சொல்லி விட்டார்கள். எனவே நீ இன்னும் இரண்டு மாதங்கள் அங்கேயே அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்கவும். மற்றபடி இங்கு அனைவரும் நலம். கடிதம் படித்து முடித்தவள், ``இப்ப புரியுதுங்களா.. நரேன் பிறந்தப்ப என்னைக் கவனிச்சிருக்கிறதுக்கு உங்கம்மா தயாரில்லை. ரூபினி பிறக்கறப்பவும் என்னை என் அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இதுக்குப் பின்னால, பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்.

ஆபரேஷனுக்கு முதல் நாளே எங்க அம்மாவை இங்கு வரவச்சிட்டு உங்கம்மா டாடா சொல்லிட்டாங்க. ஆக உங்கம்மா இதுவரைக்கும் எனக்காக ஒரு மைக்ரோ செகண்ட்டை கூட செலவழிக்கலை. இதெல்லாம் உங்களுக்கும் நல்லாவே தெரியும். இப்ப என்கிட்ட இவ்வளவு கடுமையா நடந்துக்கிற நீங்க அப்ப ஏன் உங்கம்மா கிட்ட நியாயம் பேசலை?? வார்த்தைகள் தோட்டாக்களாப் பாய... சாவித்திரியின் முகத்தில் வியர்வைத் துளிகள்... எந்தப் பதிலும் சொல்ல இயலாமல் மவுனமாய் நின்றான் விஜய்.

``ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க... என்னைக்கு உங்க மாதிரி ஆம்பளை ஜாதிங்க அம்மாவையும், மனைவியையும் சமமா நடத்தற மனப்பாங்கை அடையறாங்களோ, அன்னைக்குத்தான் திருமணமான பொண்ணுங்களுக்கு நல்ல காலம். இல்லன்னா என் மாதிரி காலத்துக்கும் கஷ்டப்பட வேண்டியதுÖன்...'' புவனாவின் தொண்டை கரகரத்தது. ``உங்கம்மா மாமியாருக்குரிய கடமையை செய்யாம இருக்கலாம்.

ஆனா மருமகளுக்குரிய கடமையை நான் செய்யத் தயாரா இருக்கேன். உங்கம்மாவுக்குத் துணையா நானே ஆஸ்பத்திரிக்குப் போறேன். என் மனசுல ரொம்ப நாளா இருக்கிற ஒரு ஆதங்கம் உங்களுக்கு தெரியுணுமேன்னுதான் நான் இப்படி நடந்துக்கிட்டேன். இப்ப என் மன ஆதங்கம் தீந்துடிச்சி. நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க..'' அழுதுகொண்டே புவனா பேசிமுடிக்க... விஜய்யும் சாவித்திரியும் அவளை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.!

இரா. வசந்தராசன்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல