திங்கள், 19 ஏப்ரல், 2010

பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட அதிமுகவின் கடிதமே காரணம்

சென்னை: பிரபாகரன் தாயார் சென்னைக்கு வந்தது குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது. அவர் திருப்பி அனுப்பப் பட்டதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக அரசு எழுதிய கடிதத்தால்தன் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறியுள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். அவருடன் துணைக்கு ஒரு பெண் மட்டுமே வந்திருந்தார்.

பக்கவாத நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக 6 மாத கால இந்திய விசாவில் வந்த பார்வதி அம்மாவை, விமானத்திலிருந்து இறங்கக் கூட குடியேற்றத் துறை அதிகாரிகளும் தமிழக போலீசாரும் அனுமதிக்கவில்லை. அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

பார்வதி அம்மாவுடன் உரிய விசா பெற்று வந்த அந்தப் பெண்ணுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது இந்த நிகழ்வு. உரிய அனுமதி பெற்று வந்த, அதுவும் உயிருக்குப் போராடும், நடக்கவும் மூச்சு விடவும் சிரமப்படும் ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடுமையை பலரும் கண்டித்தனர்.

இந்த நிலையில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி, "பார்வதி அம்மாள் சென்னை வருவது குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் சம்மந்தம் இல்லை.

பிரபாகரன் தாயார் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் தரப்படும். பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு அதிமுக முன்பு எழுதிய கடிதம்தான் காரணம். திமுக அரசல்ல.
கடந்த 1985ஆம் ஆண்டு இதேபோல சந்திரகாசன், பாலசிங்கம், சத்தேந்திரன் ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, டெசோ அமைப்பு சார்பில் கண்டன பேரணி, ரயில் மறியல் நடத்தப்பட்டது. அதன்பலனாக சந்திரகாசன், பாலசிங்கம் ஆகியோரின் மீதான உத்தரவு திரும்பப் பெறபட்டது.

ஆனால் தற்போது பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வருவது குறித்து தமிழக அரசுக்கு எந்தவித தகவலும் இல்லை. விமான நிலையத்தில் ரகசியமாக அவருக்கு ஒரு சிலர் மட்டுமே வரவேற்பு அளிக்க சென்ற நிலை ஏற்பட்டதை பார்க்கும்போது, அந்தோ தமிழகமே என்று நினைக்கத் தோன்றுகிறது.

பார்வதி அம்மாள் வருவது குறித்து மத்திய அரசிடம் மட்டுமே செய்தி தொடர்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் எனக்கு தகவல் கிடைத்து விமான நிலைய அதிகாரிகளை விசாரித்தபோது, அவர் மலேசியாவுக்கு திருப்பு அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

மீண்டும் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற அவரது சார்பில் அறிவிப்பு வெளியானால், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்த தயார். தேவைப்பட்டால் மத்திய அரசின் விளக்கத்தைப் பெற்று அவையில் தெரிவிக்கவும் தயார்.

பார்வதி அம்மாள் திருப்ப அனுப்பப்பட்டதற்கு கடந்த 2003ஆம் ஆண்டு பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளையும், தாயார் பார்வதி அம்மாளையும் தமிழகம் வர அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு அன்றைய அதிமுக அரசு அனுப்பிய கடிதமே காரணம் என்றார் கருணாநிதி.

சிபிஐ வெளிநடப்பு

முன்னதாக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சூடான வாக்குவாதம் நடந்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ உறுப்பினர்களுக்கிடையே கடும் வாதம் மூண்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சிவபுண்ணியம் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார் சபாநாயகர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து சிபிஐ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Thatstamil
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல