ஞாயிறு, 6 ஜூன், 2010

82 ஆண்டு கால 'உதைபந்தாட்ட' வரலாறு

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. கால்பந்துக்கு ரசிகர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூறும் அளவுக்கு மிகத் தீவிரமான ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டும் கால்பந்து மட்டுமே.

அதிலும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி என்பது உலக கால்பந்து ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாகும். வீரர்களையும், அணிகளையும், அவர்களின் அட்டகாச, ஆவேச ஆட்டங்களையும் காண தயாராகி விடுவார்கள் கால்பந்து ரசிகர்கள்.

எந்த அணி வெல்லும், எந்த வீரர் அதிக கோல் அடிப்பார், யாருக்கு கோப்பை என்ற பெட்டிங்கும் படு சூடாக நடக்கும். அந்த கால்பந்து திருவிழா தற்போது வந்து விட்டது.

உலகக் கோப்பைப் போட்டிகள் வந்ததே ஒரு பெரிய வரலாறாகும். 1928ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவராக இருந்தவரான ஜூல்ஸ் ரிமெட், சர்வதேச அளவில் ஒரு கால்பந்துத் தொடரை நடத்த திட்டமிட்டார்.

இதையடுத்து விறுவிறுவனெ திட்டங்கள் தீட்டப்பட்டு 1930ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி உருகுவே நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 13 அணிகள் மட்டுமே கலந்து கொண்டன. அதன் பின்னர் சீரிய முறையில் உலகக் கால்பந்துப் போட்டித் தொடர்கள் முறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா போல நடத்தப்படத் தொடங்கியது.

தற்போது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளில் 32 அணிகள் இடம் பெறுகின்றன. இவற்றுக்கான தகுதிப் போட்டிகள் ஒவ்வொரு கண்டத்திலும் நடத்தப்பட்டு அணிகள் தேர்வாகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் ஜூன் 11ம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை 19வது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

32 அணிகள், 64 ஆட்டங்கள் என ஒரு மாத காலத்திற்கு உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு தினசரி விருந்து காத்திருக்கிறது.

இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்சம் பிரேசில் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

1958, 62, 70, 94, 2002 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடர்களில் பிரேசில் சாம்பியன் ஆனது.

அதற்கு அடுத்து இத்தாலி நான்கு முறை (34, 38, 82, 2006) சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.

மேற்கு ஜெர்மனி 3 முறையும், அர்ஜென்டினா 2 முறையும், உருகுவே 2 முறையும், இங்கிலாந்து ஒரு முறையும், பிரான்ஸ் ஒரு முறையும் சாம்பியன் ஆகியுள்ளன.

உலகின் முதல் சர்வதேச கால்பந்துப் போட்டி...

உலகின் முதல் சர்வதேச கால்பந்துப் போட்டி நடந்தது 1872ல். அப்போது இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே அப்போட்டி நடந்தது. அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்துக்கு வெளியே கால்பந்துப் போட்டி நடைபெறுவது என்பது மிக மிக அரிதான ஒன்றாகும்.

ஆனால் 1900ம் ஆண்டு வாக்கில் கால்பந்து உலகம் முழுவதும் பிரபலமடையத் தொடங்கியது. பல்வேறு நாடுகளில் கால்பந்து சங்கங்கள் உருவாக ஆரம்பித்தன. இங்கிலாந்துக்கு வெளியே, முதல் அதிகாரப்பூர்வமான போட்டியாக பாரீஸ் நகரில் 1904ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸுக்கும், பெல்ஜியத்திற்கும் இடையிலான சர்வதேச கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து பாரீஸ் நகரில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை முறைப்படி தொடங்கின.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல