இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு 1.500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள்தான் காரணமென தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு 1.500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதே உறுதியுடன் இருப்பதற்கு அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட கலவையால் கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.
இந்த கலவையில் தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கல்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில் “அமிலோ பெக்டின்” என்ற மாச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும் போது அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்” கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை கற்களுக்கு இடையில் வைத்து கட்டும் போது அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும் சுவர்களில், விரிசல் ஏற்படாமலும் அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.
இந்த கலவையை கொண்டுதான் சீனப்பெருஞ்சுவரும் அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின் பல் வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன. மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.
பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள் எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக