இந்நிலையில் என்றுமில்லாதவாறான இழப்புக்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்தித்திருந்தாலும் போரில் எதுவிதத்திலும் நேரடியாகப் பங்கு கொள்ளாத பொதுமக்களும் பலவிதமான இழப்புக்களை சந்தித்திருக்கின்றார்கள் என்பது மறுக்கப்படடியாத உண்மை.
இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையேயான உச்சக்கட்ட மோதல் வடபகுதியின் இதயம் என சொல்லப்பட்டுவந்த கிளிநொச்சியையும் தாண்டி முள்ளிவாய்க்கால் எனச்சொல்லப்படும் இடம் வரை தமிழ் மக்களை நடைபிணங்களாக்கி எதுவுமே அற்ற நிர்க்கதி நிலைக்குக் கொண்டு போய் விட்டுள்ளது.
சொல்ல முடியாத இழப்புக்களையும் வலிகளையும் தமிழ் மக்கள் இறுதிக்கட்ட போரின் போது அனுபவித்திருக்கின்றார்கள் என்பதை சர்வதேசம் அறிந்திருந்தாலும் அதனை அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளாமையே வலி சுமந்த மக்களின் மனக்காயங்களுக்கு மருந்து போட முடியாத நிலையாக இருக்கின்றது. என்னதான் வன்னிப்பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டாலும் அது சர்வதேசத்திற்கு காட்டப்படும் ஒரு படப்பிடிப்பாகத்தான் இருக்கின்றன.
முள்ளிவாய்க்கால் அனுபவத்தின் ஊடாக வன்னியில் வாழ்ந்து வந்தவர்கள் நலன்புரி நிலைய வாழ்க்கைக்குள் உட்பட்டு மீண்டும் தமது சொந்த மண் என்னும் நிலையை எட்டியிருந்தாலும் அவை அவர்களது உள்மன காயங்களுக்கான முழுமையான ஆறுதலாக அமைந்திருக்கவில்லை என்பதையே வன்னியின் மீள்குடியேற்றப்பகுதிகள் வெளிப்படுத்துகின்றன.
என்னதான் கிளிநொச்சியின் மையப்பகுதி போரின் முன்பு இருந்தது போன்ற தோற்றப்பாட்டை தற்போது காட்டினாலும் அது வெறுமனே தோற்றப்பாடே தவிர முன்னைய கிளி நொச்சியைப்போன்று வராது என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டி உறவாடிய சக நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார் எனப் பலதரப்பட்டோல் பல பேரை மீள்குடியேற்றத்தின் பின்னரான மக்களின் நடமாட்டத்தின் போது காணமுடியவில்லை என ஏங்கிச் சலிக்கும் மனிதர்கள் உலாவித்தியும் இடமாகவே வன்னிப்பெருநிலப் பரப்பின் பல பகுதிகள் தென்படுகின்றன.
மீள்குடியேற்றம் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படும் வன்னிப்பிரதேசதத்தில் பௌதீகரீதியில் இயல்பு நிலை வழமைக்குத் திரும்புவது போன்று தென்பட்டாலும், வியாபாரிகளினதும் வர்த்தகர்களினதும், தொழில் முயற்சி செழிப்பானதாகத் தோற்றம் தந்தாலும் அவை எல்லா தரத்தினருக்குமான பொதுவான நிலைப்பாடாகத் தென்படவில்லை.
ஏ9 பாதை எனச்சொல்லப்படும் கண்டி யாழ். வீதி வழியே பயணிக்கும் போதே மீள் குடியேறியிருக்கும் மக்களின் நிலை இதுதான் என நிரூபணம் ஆகின்றது.
பல பகுதிகளிலும் தொட்டம் தொட்டமாக, குடும்பங்களாக பாதுகாப்பு வேலிகள் இல்லாத நிலங்களில் சிறிய அளவிலான கொட்டகைகள் அமைத்து மீள்குடியேறியிருக்கும் மக்கள், மழைக் காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில் நீரில் மிதக்கும் அக்கொட்டகைகளின் காட்சி துத மீள்குடியேற்றத்தினை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
இதுதான் கடந்த ஆண்டு தொடக்கம் வன்னியில் ஆரம்பித்திருக்கும் மீள் குடியேற்றம் அதன் பின்னரான நிலைப்பாடும். மீள்குடியேற்றம் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்றால் என்னத்தைச் சொல்வது எல்லாமே முடிந்து விட்டது இனி சொல்வதற்கு எதுவுமே இல்லை எனும் வேண்டா வெறுப்பாகத்தான் மக்களிடம் இருந்து பதில் வருகின்றது.
வெற்றுப்பானையில் இருந்து சோற்றை எடுக்க முடியாது என்பார்களே அதுதான் வன்னியின் மீள்குடியேற்றத்திலும் இருப்பதாக தெகின்றது.
ஏதோ மீள்குடியேறியிருக்கின்றோம் என்பதற்காக கிடைப்பவற்றைக்கொண்டு வாழ வேண்டியிருக்கின்றது. எதையும் சண்டை போட்டு முந்தியடித்து பெறவேண்டும் என் கின்ற நிலை தேவை இல்லாமல் போயிருக்கின்றது என்கின்றனர் சிலர்.
இவ்வாறு வன்னியில் மீள்குடியேற்றப் பட்டிருக்கின்றவர்களின் பலரது இருப்பிடங்கள் இல்லாமல் போயிருக்கின்றது இருக்கும் இருப்பிடங்களில் பல வானத்தையும் பக்கவாட்டையும் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
இன்னும் சிலரின் வீடுகள் அத்திவாரத் தோடும், இடுப்பு அளவிற்குமாக தமது அளவை குறைத்திருக்கின்றது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சினதும் ஜனாதிபதி விசேட செயலணியினதும் அனுமதி பெற்ற தன்னார்வத் தொண்டு அமைப்புக்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சற்று ஆறுத லைக்கொடுப்பதாகத் தெரிகின்றது.
இந்நிலையில் மீள்குடியேறிய குடும்பங்கள் சிலவற்றிற்கு தற்காலிக குடிமனைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகின்றது அதே போன்று சர்வோதயம் அமைப்பினால் சுகாதார வசதிகளைக்கருத்தில் கொண்டு மலசலகூடங்கள், குடிநீர்க்கிணறுகள் என்பன அமைக்கப்பட்டு வருவதாக விசுவமடுப்பகுதியில் மீள்குடி யேறியிருக்கும் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக