வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

எதிரணியின் எகிப்தியக் கனவு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி இலங்கையின் சுதந்திரதினமான கடந்த வெள்ளிக்கிழமை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொரளையில் தீப்பந்த ஊர்வலத்தையும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் அனுசரணையுடனான ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் நேற்று முன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் நடத்தியிருந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் இணங்கிச் செயற்படக் கூடியதாக இருந்த எதிரணிக் கட்சிகளினால் அவரின் விடுதலைக்காக ஒரு வருடத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது.

அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் தங்களினால் பயன்படுத்தப்பட்டிருக்காவிட்டால் முன்னாள் இராணுவத் தளபதிக்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது என்பதை உணர்ந்ததினாற்போலும் எதிரணிக் கட்சிகள் ஒருவித குற்ற உணர்வுடன் அவரின் விடுதலைக்கான போராட்டங்களைப் பிரிந்து நின்றென்றாலும் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து எதிரணியினர் நடத்தி வருகின்ற அரசியல் இயக்கங்கள் அக்கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். போர் வெற்றியைப் பயன்படுத்தியே தேர்தல் பிரசாரங்களை அரசாங்கம் முன்னெடுத்துவந்த காரணத்தினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் போர் வெற்றிக்குப் போட்டியாக உரிமை கோரக் கூடியவர் என்ற அந்தஸ்தில் இருந்த பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கி அதே போர் வெற்றியின் ஊடாகப் பெறக்கூடிய சிங்கள மக்களின் வாக்குகளைத் தாங்களும் பங்குபோடுவதே எதிரணித் தலைவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால், அவர்களினால் அந்த நோக்கத்தில் வெற்றி பெற முடியவில்லை. வெளியில் இருந்த பொன்சேகாவைப் பயன்படுத்தி அடைய முடியாமல் போன அரசியல் ஆதாயத்தை உள்ளே இருக்கின்ற பொன்சேகாவைப் பயன்படுத்தி அடைவதற்கான முயற்சிகளே எதிரணிக் கட்சிகளின் தற்போதைய போராட்டங்கள் என்பது எமது அபிப்பிராயம். முன்னென்றுமில்லாத வகையிலான பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் நாட்டு மக்களுக்கு ஒரு சொற்ப அளவிலேனும் நிவாரணத்தைத் தரக்கூடியதாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வக்கில்லாத நிலையில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு உருப்படியான தந்திரோபாயங்களை வகுக்க முடியாத அரசியல் வங்குரோத்து நிலையில் எதிரணிக் கட்சிகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், எதிரணியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று அதை அர்த்தப்படுத்த முடியாது. போர் முடிவுக்கு வந்ததன் பின்னரான சூழ்நிலையின் பொருளாதார பயன்களைத் தங்களால் அனுபவிக்க முடியவில்லையே என்ற கவலையும் அதிருப்தியும் நாட்டு மக்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்துவதற்கு முறையான அரசியல் அணுகுமுறைகளைக் கையாளுவதற்கு எதிரணிக் கட்சிகள் முயற்சிக்காத பட்சத்தில் மக்கள் அக்கட்சிகள் மீது நம்பிக்கை வைத்து அணி திரளப் போவதில்லை.சுதந்திர தினத்தன்று ஐ.தே.க. வினர் நடத்திய தீப்பந்த ஊர்வலத்தின் மீது காடையர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு பொரளையில் அல்லோலகல்லோலத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தினர் வெலிக்கடைச் சிறைக்கு முன்பாக நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு எந்தவிதமான இடையூறுமே விளைவிக்கப்படவில்லை.

தீப்பந்த ஊர்வலம் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு எதிராகப் பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காதமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். அரசியல் எதிர்ப்பியக்கங்களை வன்முறை கொண்டு ஒடுக்குவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஆனால், அத்தகைய ஒடுக்குமுறை இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் முக்கியமான அங்கமாக மாறி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இத்தகைய நாசகாரத்தனமான அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதில் நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் சமமான பங்கு உண்டு. தீப்பந்த ஊர்வலம் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் வரலாற்றிலே அதுவும் குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களில் நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களில் எந்தவொன்றினாலுமே செய்யப்பட்டிருக்கக்கூடிய விசாரணைகளோ அல்லது சமர்ப்பிக்கப்பட்டிருக்கக் கூடிய அறிக்கைகளோ எந்தவிதமான பயனுறுதியுடைய விளைவையும் தரவில்லை என்ற யதார்த்தம் எம்முன்னால் விரிந்து கிடைக்கின்ற நிலையில், அதுவும் குறிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவுடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் எதைத்தான் சாதித்துவிடமுடியும்? பொரளைச் சம்பவத்தை விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க வேண்டுமென்று ரணில் கோரிக்கை விடுத்தது அவரது அரசியல் பலவீனத்தின் தெளிவான வெளிப்பாடாகும். அநீதிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடுவதென்பது அவரால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவிடயமாகும்.

இதனிடையே அரபுலகில் டியூனீசியாவைத் தொடர்ந்து எகிப்தில் இடம்பெற்று வருகின்ற மக்கள் கிளர்ச்சிகளை உதாரணம் காட்டி ஐ.தே.க.வின் தலைவர்களும் சில எதிரணித் தலைவர்களும் பேசுகின்ற விசித்திரத்தையும் கூடக் காண்கின்றோம். அரபுலகில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எதிரணிக் கட்சிகளின் தூண்டுதல் இன்றியே மக்கள் தாங்களாக வீதிகளில் இறங்கிக் கிளர்ச்சி செய்வதனாற்தான் போலும் அந்தக் கிளச்சிகளை உதாரணங்களாகக் காட்டி இலங்கையிலும் மக்கள் கிளர்ச்சி செய்வார்கள் என்று ஐ.தே.க.தலைவர்கள் எச்சரிக்கை செய்கிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் தாங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லையே. மக்கள் போராட்டங்களில் இறங்கிய பிறகு தாங்கள் அதில் பின்னர் தொற்றி கொண்டு அரசியல் அனுகூலங்களை அடையலாமென்ற நம்பிக்கையிலேயே அரசியல் வங்குரோத்து நிலையில் இந்த எதிரணித் தலைவர்கள் எகிப்தியக் கனவு காண்கிறார்கள்!

- தினக்குரல் .


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல