ஞாயிறு, 25 மார்ச், 2012

வரலாற்றில் மிகப்பெரிய தவறாக அமையும்-அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால் தனது வரலாற்றிலேயே அமெரிக்கா செய்யும் மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும் என்று கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரான்மா நாளிதழில் இது குறித்து கட்டுரை யொன்றை காஸ்ட்ரோ எழுதியுள்ளார். அக்கட்டுரையில் அவர் எழுதியுள்ள விபரம் வருமாறு :



இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு ஈரானைத் தாக்க அமெரிக்கா முடிவெடுத்தால், அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஈரானின் அணுசக்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட குண்டுகளுக்காக கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்கா செலவழித்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறை அமெரிக்கா செய்யத்தான் போகிறது. ஒரு குண்டைக்கூட பாய்ச்சாமல் ஈரான் ராணுவம் சரணடைந்துவிடும் என்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது. அது தவறான எண்ணமாகும். அதேபோல், அணு ஆயுதங்களை ஈரான் தயாரிக்கிறது என்று பிரச்சாரம் பண்ணுகிறார்கள். அணுசக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துகிறோம் என்று ஈரான் தெளிவாகச் சொல்லி வருகிறது. அணுகுண்டைத் தயாரிக்கத் தேவையான செறிவூட்டும் தொழில்நுட்பம் ஈரானிடம் இல்லை.

அணு ஆயுத விவகாரத்தில், அமெரிக்கா இரட்டை வேடம் போட்டு வருகிறது. அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் அணு ஆயுதம் தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால், ஆக்கபூர்வமான பணிகளுக்கு அணுசக்தியைத் தயாரிக்கும் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் கூட்டாளி நாடுகள் பொய்யான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது. அதேவேளையில், இஸ்ரேல் அதில் கையெழுத்திடவில்லை. அந்த வகையில், அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கு முழு உரிமையுள்ள நாடாக ஈரான் உள்ளது. இவ்வாறு தனது கட்டுரையில் பிடல் காஸ்ட்ரோ எழுதியிருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல