வெள்ளி, 7 செப்டம்பர், 2012

நம்பிக்கையுடன் மீண்டும் வாழ்க்கையை துவக்கியுள்ளோம்: இலங்கை தமிழர்கள் திருப்தி

யாழ்ப்பாணம்: உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியா கட்டித் தந்துள்ள வீடுகள் வசதியாக இருப்பதாக, அங்கு வசிப்போர் தெரிவித்தனர். வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், காய்கறித் தோட்டம் அமைத்து, அதை வாழ்வாதாரமாக பயன்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, இந்தியா, 50 ஆயிரம் வீடுகளை கட்ட உதவி அளித்து உள்ளது. இதில், முதல்கட்டமாக, 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

கால் ஏக்கரில் வீடு: இதன் ஒரு பகுதியாக, கண்டி-யாழ்ப்பாணம் "ஏ 9' நெடுஞ்சாலையில், முகமாலை அருகே, புதுக்காடு, கரந்தையில், 50 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீடும் கால் ஏக்கர் நிலப் பரப்புக்குள் கட்டப்பட்டு உள்ளது.

இங்கு குடியேறி உள்ள, தர்மகுலசிங்கம்-யோகேஸ்வரி தம்பதியர் கூறுகையில், ""கடந்த ஆண்டு இங்கு குடியேறினோம். இந்த வீடும், இடமும் வசதியாக உள்ளன. மின் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு அருகே உள்ள ஊரில் தான், நாங்கள் வசித்து வந்தோம். இங்கிருந்து கொண்டே சொந்த ஊரில் வேளாண் பணிகளை துவக்கி உள்ளோம்,'' என்றனர். இவர்களைப் போல், இங்குள்ள பலர் தங்கள் சொந்த ஊர்களில், வேளாண் பணிகளை துவக்கி உள்ளனர்.

போரில் பலியான குழந்தை: இங்கு வசிக்கும், விக்னேச ராசா என்பவர் கூறுகையில், ""என் சொந்த ஊரில் காணியை குத்தகைக்கு எடுத்து, அதில் விவசாயம் செய்கிறேன். மிளகாய், சிறு பயிறுகளை பயிரிட்டுள்ளேன். என்னுடைய ஆறு மாத குழந்தை, போரில் குண்டடி பட்டு இறந்துவிட்டது. அந்த சோகம் தீரவில்லை என்றாலும், நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைத் துவங்க முயல்கிறேன். இது நிறைவேறுமா என்பது, எனக்கு தெரியவில்லை. இறைவன் கையில் தான் உள்ளது,'' என்றார். ஒவ்வொரு வீட்டுமனையும், கால் ஏக்கர் பரப்பில் அமைந்து உள்ளதால், குடியிருப்போர், தோட்டங்களை அமைத்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். தோட்டங்களில், காய்கறி, பூக்கள், சிறு தானியங்களை சாகுபடி செய்கின்றனர்.

அமைதி நீடிக்க வேண்டும்: குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்டுள்ள பொது கிணற்றில் இருந்து, குடத்தில் தண்ணீர் சுமந்து வந்து, சாகுபடிக்கும் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, கனகமணி தங்கராசா என்பவர் கூறுகையில், ""இறுதிகட்ட போரின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில், என் கணவர் தங்கராசா குண்டு அடிபட்டு இறந்தார். அங்கேயே மண்ணைத் தோண்டி உடலைப் போட்டேன். எந்த சடங்கும் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. போர் முடிந்து மீள் குடியேற்றத்தின் போது, இந்தியா உதவியுடன் கட்டியுள்ள இந்த வீட்டை தந்தனர். வீடு வசதியாக உள்ளது,'' என்றார். மேலும், ""வீட்டைச் சுற்றி காய்கறித் தோட்டம் அமைக்கும் முயற்சியில் உள்ளேன். இதை ஆதாரமாக கொண்டு பிழைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. பக்கத்து ஊரில் உள்ள சிதைந்து போன பழைய வீட்டை புனரமைக்கும் பணியில், என் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளனர். எங்கள் நிலத்தில் மீண்டும் சாகுபடி செய்யவும் முயல்கிறோம். அமைதி நீடித்தால் நாங்கள் வாழ முடியும்,'' என்றார். இங்குள்ள பெரும்பாலானோர், குடும்ப உறுப்பினர்களை போரில் இழந்து உள்ளனர். தர்மகுலசிங்கம்-யோகேஸ்வரி தம்பதியினர், தங்கள் 21 வயது மகனை இழந்தனர். இந்த காயங்கள் ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

கட்டுமானத்தில் குளறுபடிகள்: குண்டுவீச்சினால், தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டு இருந்த இவர்களுக்கு, புதிய வீடுகள், புதிய வாழ்க்கைக்கு மையமாக அமைந்து உள்ளன. நிறைகள் பல இருப்பினும், இவை இந்திய கட்டுமானம் என்பதால், சில குறைகளும் உள்ளன. கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில வீடுகளின் கதவுகள் பெயர்ந்து நிற்கின்றன. கூரைக்கு காட்டு கம்புகளை பயன்படுத்தியதால், அவை உளுத்துவிட்டன. அதற்கு பதிலாக முற்றிய பனை மரத்தை பயன்படுத்தி இருக்கலாம். அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும்; செலவும் குறைந்திருக்கும் என்று, அந்த பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

- தினமலர் -
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல