வியாழன், 11 அக்டோபர், 2012

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதன் உண்மையான கருத்து என்ன?

"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான் :-

"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம். அப்பொருள்களும் ஏற்புடையதே.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல