சனி, 17 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-6

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகளைக் கொண்ட குழு சீன நாட்டின் அழைப்பை ஏற்று கடந்த ஐந்தாம் திகதி சீனாவுக்குச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் ஊடகத் துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும் சிரேஷ்ட தமிழ் ஊகடவியலாளருமான ந.வித்தியாதரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சேயோன் ஆகியோர் சென்றுள்ளனர்.

அபிவிருத்தி வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பான கொள்கை மற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு அரசியல் கலந்துரையாடல்களில் இந்தக் குழுவினர் 15ம் திகதி வரை பங்குபற்றுவர் எனவும் இக்காலகட்டத்தில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களை நடத்துவர் எனவும் கூறப்பட்டுள்ளது.அண்மையில் சீனத் தூதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் சந்தித்து பேச்சை நடத்தியபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சீன அரசாங்கம் பேச்சு நடத்தவேண்டுமாக இருந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைக் குழுவைத்தான் அழைத்திருக்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தைக் குழுவில் ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் தவிர்ந்த ஏனைய பிரதிநிதிகள் கட்டாயம் உள்வாங்கப்பட்டிருப்பர்.

ஆனால் சீனத் தூதுவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு வருமாறு அழைத்தபோது சம்பந்தன் உடன்பட்டதுடன் மட்டும் நிற்காமல் இப்பேச்சுவார்த்தைக்கு அல்லது அரசியல் கலந்துரையாடலுக்கு தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்களையே அனுப்புவதென உடனடியாகவே முடிவெடுத்துவிட்டார்.

கூட்டமைப்பின் ஏனைய பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தாமல் தனக்குள்ளேயே முடிவெடுத்த சம்பந்தன் குறித்த மூவரின் பெயரையும் சீனத் தூதுவரிடம் இரவு இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் தெரியப்படுத்தி இருந்தார். இதனை அடுத்தே குறித்த மூவரும் சீனாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த ஏற்பாடானது மறைமுகமாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதான ஒரு ஏற்பாடாகவே கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் தொடர்புகளை பேணிவரும் கூட்டமைப்பின் போக்குகளை நன்றாக உணர்ந்துள்ள அரசாங்கம் கூட்டமைப்பின் இத்தகைய போக்குகளால் தங்களிற்கு ஆபத்து அல்லது அழுத்தங்கள் உருவாகலாம் என அவதானிக்கிறது. இதன் அடிப்படையில் இந்தப் போக்கை மாற்றவேண்டுமானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பொறியில் சிக்கவைக்க வேண்டுமென அரசதரப்பு கணக்குப்போட்டது.

குறிப்பாக இலங்கை அரசுமீது இந்தியாவும், அமெரிக்காவும் கோபம் கொள்வதற்கு பிரதான காரணம் இலங்கை சீனாவுடனும் நெருக்கமான ராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்வதே ஆகும். சீனாவுடன் இலங்கை பாதுகாப்புத் தொடர்பான ஒப்பத்தங்களிலும் கையெழுத்து இட்டுள்ளது. இத்தகைய நிலைமையானது அமெரிக்க – இந்திய அரசுகள் இலங்கைமீது கோபம் கொள்வதற்கு வழி ஏற்படுத்தியுள்ளது. தற்போதுகூட சீனாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கும் இருநாட்டு இராணுவ உறவினை உறுதிசெய்து ஒத்துழைப்பை அதிகரித்து நட்புறவைப் பேணுவதற்கும் தீர்மானித்துள்ளதுடன் இரண்டு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்களும் சீனாவில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் கௌங்லிக்கும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட மேல்மட்டக் குழுவினருக்குமிடையே பீஜீங்கில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த நட்புறவு ஒப்பந்தமும் உருவானது. சீனாவில் நடைபெறுகின்ற 9வது சர்வதேச விமான மற்றும் விண்வெளிக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகவே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ சீனாவுக்குச் சென்றிருந்தார்.

சீனாவின் தெற்கு நகரமான ஹயில் நடைபெற்ற இக் கண்காட்சியில் ஏராளமான நவீன போர்த்தளபாடங்கள், மற்றும் புதிய தாக்குதல் கெலிகொப்டர்கள் உள்ளிட்ட பல முக்கிய உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக் கண்காட்சியும் பாதுகாப்பு ஒப்பந்தமும் இந்தியாவையும், அமெரிக்காவையும் கடும் சீற்றமடைய வைத்துள்ள போதிலும் இலங்கை அரசின் காய்நகர்த்தல்களுக்கு அமைவாக கூட்டமைப்பு தூதுக்குழுவினர் சீனாவில் இரகசிய சந்திப்புக்களை மேற்கொள்வதும் அமெரிக்காவையும், இந்தியாவையும் எரிச்சலடையவே வைத்துள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டமைப்புடன் இணைந்து தங்களது பிராந்திய நலன்களை முன் நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க முயன்றுவரும் இந்தச் சூழலில் இலங்கை அரசம் சீனாவும் இணைந்து கூட்டமைப்பை தமது பொறிக்குள் விழுத்தியுள்ளனர்.

இதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று கூட்டமைப்புக்குள் இப்பயணத்தின் மூலம் வலுவான உடைவு ஒன்று உருவாகும் நிலைமை தோன்றிவருவது. ஏனெனில் கூட்டமைப்புக்குள் ஏற்கனவே பிளவுகள் ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் சீனச் சுற்றுப்பயணத்திற்கு தம்மை அனுப்பவில்லையென்று சுரேசும், செல்வமும் நிச்சயமாக குழம்புவார்கள். இதனைவிட தமிழரசுக்கட்சியை முதன்மைப்படுத்தி வித்தியாதரனை அனுப்பியமையையும் இவர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். ஏனெனில் புலிகளின் அழிவிற்கு ஏதோ ஒரு விதத்தில் துணைநின்ற வித்தியாதரன் கூட்டமைப்பின் அழிவிற்கும் வழிகோலுவார் என்ற அச்சம் இவர்களிடம் வலுவாகவே உள்ளது.

சீனா சென்ற வித்தியாதரன் குறித்த நிகழ்ச்சிநிரல்களுடன் மட்டும் நிற்காமல் தன்னுடன் கூடச்சென்றவர்களைத் தனிப்படுத்திவிட்டு, இவர் சீன இராணுவ அதிகாரிகளையும் அவர்களது புலனாய்வுத் துறையினரையும் இரகசியமாகச் சந்திக்கவே செய்வார். கடந்த காலத்தில் வித்தியாதரன் இலங்கை அரசு, இந்திய அதிகாரிகள் மற்றும் விடுதலைப் புலிகளுடனும் ஒரேசமயத்தில் கொண்டிருந்த உறவுகளையும் புலனாய்வுப் பிரிவுகளுடனான அவரது ‘நிதி’ உறவுகளையும் அறிந்தவர்களுக்கு இது வியப்பாக இராது. வித்தியின் அணுகுமுறை சீன அதிகாரிகளுக்கும் நிச்சயம் உவப்பாகவே அமையும். பல பரிமாற்றங்களை முடித்துக்கொண்டே குழு திரும்பிவரும் என்பதில் சந்தேகமிருக்க முடியாது.

புலிகளுடன் அரசாங்கம் ஜெனீவா, தாய்லாந்து போன்ற இடங்களில் பேச்சுவார்த்தை நடத்திய காலப்பகுதிகளில் பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் பலர் அங்குள்ள உல்லாச விடுதிகளுக்குச் சென்றுவரத் தவறியதில்லை. அக்கால கட்டத்தில் இலங்கை ரூபாயில் பெருமளவு தொகை இதற்கெனவே செலவானதாகப் பேச்சு இருந்தது. குறிப்பாக இந்த விடயத்திற்காக அப்போது தமிழ்ச்செல்வன் வித்தியாதரனையும் இன்னும் ஒரு ஊடகவியலாளரையும் கடுமையாகச் சினந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது.

தற்போது சீனாவிலும், உல்லாச விடயங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே அரசு – புலிகள் பேச்சுவார்த்தைக் காலத்தை நினைவுபடுத்தி ஊடகவியலாளர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
வித்தியாதரன் போன்றோரை கைக்குள் போடுவதன் ஊடாக கூட்டமைப்பை உடைக்கமுடியும் என்ற நம்பிக்கை அரச உயர்பீடத்தினரிடம் உள்ளது. ஆனால் இலங்கை அரச உயர்பீடம் நேரடியாக பேரம்பேசினால் கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்கள் இவருடன் குழம்புவார்கள். அத்தோடு இலங்கையுடன் உடன்பட்டு அரசியல் செய்தால் கூட்டமைப்பில் நிலைத்து நிற்கமுடியாது என்பதையும் வித்தியாதரன் அறிவார். இதனால் சீனா போன்ற நாடுகளினூடாக இலங்கையினுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைத்தால் இலங்கையினுடைய செல்லப்பிள்ளையாக இருந்தவாறு கூட்டமைப்பிலும் முக்கிய ஹீரோவாக இருப்பது சாத்தியம். கூட்டமைப்பை ஒரு கட்டத்தில் ஒழித்துவிட்டு தமிழரசுக்கட்சியைப் பலப்படுத்தவும் முடியுமென எண்ணலாம்.

தமிழரசுக்கட்சிக்கும் அல்லது கூட்டமைப்பிற்கும் வித்தியாதரனிற்கும் ஆரம்பத்தில் எந்தவொரு தொடர்புகளுமே இருந்ததில்லை. புலிகளின் அழிவிற்குப் பின்னர் தமிழரசுக்கட்சியின் அல்லது கூட்டமைப்பின் தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வித்தியாதரனுக்கும் வந்ததில் வியப்பில்லை. மைத்துனரான சரவணபவன் கூட்டமைப்பிலுள்ளவர்களை வெட்டி ஓடக்கூடிய திறமையின்றி தனியே பணம் சம்பாதிக்கும் குறியுடன் மட்டும் நிற்பதால் அவரால் எதையுமே சாதிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள வித்தியாதரன் சரவணபவனுடன் தனக்குத் தொடர்பு கிடையாதெனவும் உதயன் பத்திரிகையிலிருந்து தான் விலகிவிட்டதாகவும் பலரையும் நம்பவைத்துள்ளார்.

கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரமுகர் போன்று கால்பதித்து தற்போது சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவராக சீனாவரை சென்றுள்ளார். ஜனாதிபதிக்கும், சம்பந்தனிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின்போது அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நாங்கள் உறவுகளை வைத்தாலும் உங்களுக்கு எதிராக நாங்கள் செல்லமாட்டோம் என சம்பந்தன் வாக்குறுதி அளித்திருந்தார் எனச் சொல்லப்படுகிறது. இதன்போது நீங்கள் சீனாவிற்கு செல்லவேண்டும் அதற்குரிய ஏற்பாடுகளை நான் செய்துதருகிறேன் என ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதற்கு உடன்பட்ட சம்பந்தன் முதலில் சீனக்குழுவை தாங்கள் இலங்கையில் சந்திப்பதாகவும் அதன்பின்னர் சீனாவிற்கு கூட்டமைப்பு செல்லுமென்றும் கூறியிருந்தார். அதன் பிரகாரமே வித்தியாதரன் குழுவினர் சீனா செல்வதற்கு சம்பந்தன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஆனால் சம்பந்தன் நம்புகின்ற அளவிற்கு வித்தியாதரன் நம்பிக்கைக்கு உரியவராக செயற்படப்போவதில்லை. அண்டைநாட்டின் புலனாய்வுத் துறையுடன் இணைந்து புலிகளுக்கே ஆப்பு வைத்தவருக்கு சம்பந்தன் எம்மாத்திரம் என்றே அவரது வரலாற்றை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். கூட்டமைப்பை உடைக்கவும் அவர் கோதாவில் இறங்கிவிட்டார் என்பதையே சீன விஜயம் வெளிப்படையாக உணர்த்துவதாக அவர்கள் ஆதாரப்படுத்துகிறார்கள். வித்தியாரனின் தில்லுமுல்லுகள் ஒரு புறத்தில் இருக்க விடுதலைப்புலிகளை ஊடகங்கள் எவ்வாறு அழித்தனர் என்பதை நாங்கள் தொடர்ந்து பார்க்கலாம் ……..

வே.அர்ச்சுணன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல