மகனுக்கு அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நோர்வேயில் கைது செய்யப்பட்ட இந்திய தம்பதிகளுக்கு நாளை தண்டனை காலம் அறிவிக்கப்பட உள்ளது. சந்திரசேகர் வல்லபாநேனி மற்றும் அவரது மனைவி அனுபமா, ஆகியோர் அவர்களது ஏழு வயது மகன் ஸ்ரீராம் தெரிவித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைக்கு அடித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நோர்வே நாட்டின் சட்டப்படி, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைதண்டனை விதிக்குமாறு அரச தரப்பு வழக்கு தொடுநர் கோரியுள்ளார். பெரும்பாலும் இந்த தண்டனை நீதிமன்றம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை நோர்வே நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒரு நாட்டு நீதிமன்ற எல்லைக்குள் நடந்த விடயத்தை இன்னொரு நாட்டின் கலாசாரத்தின் படியோ இன்னொரு நாட்டின் சட்டத்தின் படியோ விசாரிக்க முடியாது என்றும் இது முட்டாள் தனமாக கோரிக்கை என்றும் நோர்வே நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்தப் பிரச்சினையில் தலையிட முடியாது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தனிப்பட்ட குடிமகனின் பிரச்னை என்றும், நோர்வே நாட்டின் சட்டப்படி அவர்கள் கைது செயய்ப்பட்டிருப்பதாகவும் அந்தச் சட்டத்தில் தலையிடும் அதிகாரம் இpந்தியாவுக்கு இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் தாங்கள் இந்த விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக