வியாழன், 10 ஜனவரி, 2013

றிஸானா நபீக் என்ற ஏழைப் பெண்ணின் பரிதாப முடிவு, நாகரீக உலகம் வெட்கப் பட வேண்டிய விடயம்

2005ம் ஆண்டு வைகாசி மாதம், மூதுரைச் சொந்தவிடமாகக் கொண்ட பதினேழு வயதான றிஸானா நவிக் என்ற ஏழைப் பெண் சவுதி அரேபியாவிலுள்ள ஒரு குடும்பத்துக்குப் பணிப் பெண்ணாகச் சென்றார். வேலைக்குச் சென்ற ஒரு மாதத்திலிலேயே, அவரின் பராமரிப்பிலிருந்த நான்கு மாதக்குழந்தையைக் கொலை செய்ததாக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். குழந்தைக்குப்பால் கொடுக்கும்போது குழந்தையின் தொண்டையில் பால் அடைத்துக்கொண்டதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாகவும் அதற்குக்காரணம் றிஸானா என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.

அந்தக்குழந்தை எப்படி இறந்தது என்பதற்கான எந்தவிதமான விளக்கமுமில்லாமல் இறந்த குழந்தையின் பெற்றோரின் தகவல்களுடன் றிஸானா கொலைகாரியாக்கப் பட்டார்.

றிஸானாவின் பிறந்த திகதி 4.2.1988. அப்படியானால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டபோது அவரின் வயது பதினேழு. சவுதி அரேபியச் சட்டத்தின்படி வயது குறைந்தவர்களுக்கு மரண தண்டனையில்லை. ஆனால். றிஸானாவின் பாஸ்போர்ட்டில் அவரின் பிறந்த திகதி 02.02.1982ம் ஆண்டு என்று போட்டிருந்ததால், றிஸானாவின் தலைவிதி இன்று நடந்த கொடுமைச் சம்பவத்தில்; முடிந்திருக்கிறது.

றிஸானாவின் நிலையைக் கேள்விப்பட்ட பல்லாயிரக்கணக்கான நல்ல மனிதர்கள் அவரின் விடுதலைக்காகக் கடந்த பல்லாண்டுகளாகப் போராடினோம். இலங்கையரசும் பல தடவைகளில் பற்பல முயற்சிகளையும் செய்தார்கள். ஆனாலும் இன்று நடந்த விடயம் தாங்கவொண்ணாத் துயரைத் தருகிறது. எப்படியும் றிஸானா விடுதலை செய்யப்படுவார் என்று நான் மனதார நம்பினேன்.

இலங்கையிற் பிறந்த ஏழைப்பெண்கள் கிட்டத்தட்ட 500.000 பல நாடுகளிலும் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனுப்பும் பலகோடி டாலர்ஸ்கள் இலங்கையின் திறைசேரியை நிரப்புகிறது. எப்படியும் வெளிநாடு சென்று தங்கள் ஏழ்மைக் குடுப்பத்துக்கு உதவ நினைக்கும் பல பெண்கள் சொல்லமுடியாத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

றிஸானாவின் பரிதாப சரித்திரத்துக்கு, அவரின் பிறப்புச்சானிறிதழை மோசடி செய்த கொழும்பிலுள்ள ட்ரவல் ஏஜென்சிக்காரர்கள், சரியான விசாரணை செய்யாமல் (இறந்த குழந்தையின் போஸ்ட்மோர்டடம் நடக்கவில்லை என்பது வதந்தியாகவிருந்தது) கொலைக்குற்றம் சாட்டிய சட்ட முறைகள், அத்துடன் தொடர்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சவுதிஅரேபியாவின் இரக்கமற்ற முடிவும் ஒரு ஏழைப்பெண்ணைப் பலி கொண்டு விட்டது.

2005ம் ஆண்டிலிருந்து இதுவரை எத்தனையோ எத்தனங்கள் பற்பல விதத்தில் அவரின் விடுதலைக்காக எடுக்கப்பட்டன. உலகம் பரந்த விதத்தில் பல மனித உரிமை ஸ்தாபனங்கள் றிஸானாவின் விடுதலைக்குப் போராடின.

சாதாரண மக்களாகிய பல்லாயிரக்கணக்கானவர்கள் றிஸானாவின் விடுதலைக்கு உலகப் பரந்த விதத்தில் பிரசாரம் செய்தோம். இறந்த குழந்தையின் பெற்றோரிடம் பாவமன்னிப்புக்கேட்டுக் கெஞ்சினோம். அத்தனையும் இரக்கமற்ற சவுதி அரசால் ஏற்றுக்கொள்ளப்படாமல் றிஸானா இவ்வுலகிலிருந்து இன்று மதிய நேரம் (09.01.13) பிரிக்கப்பட்டுவிட்டாள்.

இது நாகிரீக உலகில் நடக்கும் மன்னிக்க முடியாத தண்டனைகள்.

றிஸானாவை இழந்து தவிக்கும் அவரின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். றிஸானாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேணடுவோம்.

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 09.01.13

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல