வெள்ளி, 12 ஜூலை, 2013

இளவரசன் இல்லாத திவ்யா, இனி...?

'உங்கள் மீதான களங்கத்தைக் கழுவும்விதமாக ஆறு மாதங்கள் கழித்து, இளவரசன்- திவ்யாவுக்குத் திருமணம் செய்துவைப்பீர்களா?'' என்று டாக்டர் ராமதாஸுக்கு நாம் வெளிப்படையாக எழுதி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இன்று இளவரசன் இல்லா மலே போய்விட்டான். இதற்கு மேலும் திவ்யாவையும் அவரது தாயார் தேன்மொழியையும் ரகசிய இடத்தில் ஒளித்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ப தால், அவர்கள் தர்மபுரி எஸ்.பி-யிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர். இப்போது திவ்யாவும் அவரது தாயாரும் அவர்களின் சொந்த ஊரான செல்லங்கொட்டாயில் இருக்கின்றனர்.

இளவரசனின் ஊரான நத்தம் காலனியையும், திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாயையும் காவல் துறையினர் முழுமையாக மூடி சீல் வைத்துள்ள நிலையில், நாம் அங்கு சென்றபோது ஏகப்பட்ட கெடுபிடிகள். செல்லங்கொட்டாய் கிராமத்துப் பெண்களிடம் பேச முயன்றபோது, எழுந்து சென்று கதவைச் சாத்திக்கொண்டார்கள். போலீஸாரின் தடுப்புகளையும் மீறி திவ்யாவின் வீட்டுக்குச் சென்ற போது, திவ்யாவின் அம்மா தேன்மொழி பேசமறுத்து விட்டார். இனி, எப்போதும் பேச முடியாமல் போகும் இறுக்கமான சூழல்தான் திவ்யா வைச் சுற்றி நிலவுகிறது. ஒரு காலத்தில் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகள் இந்தப் பகுதி யில் இருந்தன. 70-களில் வேர்விட்ட நக்சல் பாரி இயக்கம், சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடியதன் விளைவாக நேரடியான சாதிக் கொடுமைகள் இந்தப் பகுதியில் ஒழித்துக்கட்டப்பட்டது. வன்னியர்களும் தலித்களும் காதல் திருமணம் செய்துகொள்ளும் புரட்சிப் பண்பாட்டை விதைத்த நக்சல்பாரி இயக்கம் தேய்ந்தது. பின்னர், சாதி அமைப்புகள் வேர்விட, விஷ விதைகள் விதைக்கப் பட்டன. அந்த விஷம்தான் இப்போது திவ்யாவின் வாழ்க்கை யைப் பாழாக்கி, இளவரசனின் உயிரைப் பறித்திருக்கிறது. இந்த வருத்தங்களுக்கு மத்தியில், உன்னதமான ஒரு விஷயமாக நமக்குப்படுவது, இளவரசனுக்காகக் கொந்த ளிக்கும் மக்களோடு மக்களாக முன்னணியில் நின்று நீதி கேட்பது, வன்னியச் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் என்பதுதான்!

இதே நத்தம் காலனியில் கலப்பு மணம் செய்து வாழும் வன்னியப் பெண்ணான யசோதாவிடம் பேசியபோது, ''நானும் என் கணவர் சின்னசாமியும் அப்பு, பாலன் தோழர்களோட அமைப்பில் சேர்ந்து தீண்டாமைக்கு எதிராகப் போராடியிருக்கோம். அப்போதான் நாங்க காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அப்பவும் எங்கள் கல்யாணத்துக்கு எதிர்ப்பு இருந்துச்சு. ஆனால், யாரும் எந்த ஊரையும் கொளுத்தலை. எங்களைப் போல கலப்பு மணம் செஞ்சுக்கிட்டவங்க நிறையப் பேர் இந்தப் பகுதியில் இருக்காங்க. அதனால், அந்த நேரத்தில் உறவுகளுக்குள்ள வருத்தங்கள் இருக்கும். மத்தபடி, இப்போ வரை வன்னியர்களும் தலித்களும் தாயா, பிள்ளையாத்தான் பழகிட்டு இருக்காங்க. இளவரசன்- திவ்யா காதல் இவ்வளவு பெரிய பிரச்னையாகக் காரணம், அரசியல் கட்சிக்காரங்க அதுல தலையிட்டதுதான். இல்லேன்னா, இது ரெண்டு குடும்பத்துக்குள்ள இருக்கிற உறவுப் பிரச்னையாவே முடிஞ்சிருக்கும். இவ்வளவு நடந்த பிறகும், திவ்யாவோட அம்மா தேன்மொழி பேசாம இருக்கிறது நல்லாயில்லை. இப்பவாவது அவங்க உண்மையைப் பேசணும். இளவரசன் செத்த பிறகும் அமைதியா இருக்குறது தப்பு!'' என்கிறார்.

இளவரசனின் சொந்த ஊரான நத்தம் காலனி முழுக்க, கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. நத்தம் காலனி எரிக்கப்பட்டபோது உடைந்த, எரிக்கப்பட்ட வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டு, இளவரசனின் நினைவோடு திரண்டிருந்தனர் கிராம மக்கள். சாலைக்கு வெகு அருகில் இருந்த இளவரசனின் வீட்டை மட்டும் முற்றுமுழுதாக இல்லாமல் ஆக்கினார்கள் சாதி வெறியர்கள். இப்போது முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட அந்த வீட்டை, கழுவித் துடைத்தார்கள், இளவரசனைக் கடைசியாகக் கிடத்துவதற்கு!

இளங்கோவன், கிருஷ்ணவேணி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகன் பாலாஜிக்கு ராணுவத்தில் வேலை. மூன்றாவதாக இளவரசன் பிறந்தான். கடைசி மகன் என்ப தால், வீட்டில் ஏகத்துக்கும் செல்லம். இளவரசன் வசித்தது நத்தத்தில் என்றாலும், கான்வென்ட் படிப்பு, கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள்... என எல்லாமே காலனிக்கு வெளி யில்தான். அந்த வகையில்தான் திவ்யாவுடனான காதலும் உருவாகியிருக்கிறது. மாவட்ட அளவிலான கால்பந்து வீரரான இளவரசன், போட்டிகளுக்காகப் பல ஊர் களுக்கும் சென்றுவருபவர். அப்படி திருச்சிக்கு ஒரு போட்டிக்காகச் சென்றபோதுதான் திவ்யாவிடமிருந்து தொலைபேசி வந்தது. 'என்னை வந்து கூட்டிட்டுப் போ’ என்று கேட்ட திவ்யாவின் குரல், கடைசியில் இளவரசனின் வாழ்வை தர்மபுரி தண்டவாளத்தில் பிணமாகக் கிடத்திவிட்டது.

இளவரசனின் தந்தை இளங்கோவனிடம் பேசியபோது, ''ஒண்ணாம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, இரண்டாம் தேதி இரவு கிளம்பி காலையில் தர்மபுரிக்கு வந்தோம். நானும் என் மனைவியும் அங்கேயே தங்கிட்டோம். இவன் மட்டும் நத்தம் காலனிக்கு வந்து, பாரதி பிரபு என்ற அவனது நண்பனுடன் தங்கியிருந்தான். மறுநாள் காலை யில வீட்டுக்கு வந்தான். ஏ.டி.எம்-ல பணம் எடுத்துத் தரச் சொன்னேன். எடுத்துக் கொடுத் ததும் நான் வேலைக்குக் கிளம்பிட்டேன். அவன் என் அக்கா வீட்டுக்குப் போனான். அங்கே இருந்து, பாரதி பிரபுவை அழைக்கப் போறதாக் கிளம்பினவனை, அடுத்த அரை மணி நேரத்தில் பிணமாத்தான் பார்த் தோம். அவனுடைய தலையில், யாரோ கடுமையாத் தாக்கி தலையைப் பிளந்திருக்காங்க!'' என்றவர், ''மொத்த மாக இந்த வழக்கு ஆறேழு தடவை தர்மபுரியிலும் சென்னையிலும் நடந் தது. அதில் முதல் மூன்று தடவை திவ்யா தன் விருப்பப்படியே இளவரச னுடன் வாழ்வதாகக் கூறினார். அதை நீதிமன்றம் ஏத்துக்கிட்டாலும், அப்பவே வழக்கை முடிக்காமப் பல தடவை தள்ளிவெச்சாங்க. அதுதான் என் மகனை இப்போ சடலமாக்கிருச்சு. திவ்யாவுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி, 'அம்மா விரும்பினால் இளவரசனுடன் செல்வேன்’னு சொல்லும் வரை திவ்யா தரப்புக்கு வாய்தா கொடுத் துட்டே இருந்தாங்க. ஆனா, என் பிள்ளை எத்தனையோ தடவை கேட்டும் தன் கருத்தைச் சொல்லக்கூட அவனை அனுமதிக்கலை!'' என்கிறார்.

இளவரசனின் தந்தை இளங்கோவ னும் திவ்யாவின் தந்தை நாகராஜும் பள்ளிக் காலத்தில் இருந்தே நண்பர்கள். ஒன்றாகப் படித்து விளையாடி பால்யத்தைக் கழித்தவர்கள். இந்தக் காதல் விவகாரம் இரண்டு ஊர்களுக்கு இடை யில் கிசுகிசுக்கப்பட்டபோது, செல்லங்கொட்டா யைச் சேர்ந்த சிலர், இளவரசனை ஒரு கோயில் விழாவில் தாக்க... நேராக செல்லங்கொட்டாய்க்குச் சென்ற இளங்கோவன், 'இனி என் பையன் உன் மகளைப் பார்க்க மாட்டான். உன் பிள்ளையை நீ கண்டிச்சு வை’ என்று சொல்லிவிட்டு வந்தி ருக்கிறார். இத்துடன் இரு வீட்டாரும் இதை மறந்ததுடன், திவ்யாவை ஹாஸ்டலுக்குப் படிக்க அனுப்பினால் காதல் முறிந்துவிடும் என்றும் நினைத்தார்கள். ஆனால், திவ்யாவும் இளவரசனும் ஒரு வருடத்துக்கும் மேலாக செல்போன் வழியாகவே காதலைத் தொடர்ந்துள்ளனர். அளவுக்கு அதிகமாகத் தன் மகள் செல்போனில் பேசுவது திவ்யா வீட்டாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த... அடுத்த சில நாட்களில் அவருக்கு அவசர அவசரமாகத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பிறகுதான் இந்தக் காதலர்கள் ஊரைவிட்டு வெளியேறி, ஊர் ஊராக ஓடத் துவங்கினார்கள். பேருந்தில் துவங்கிய காதல் தண்டவாளத்தில் முடிந்தது இப்படித்தான்.

இளவரசனின் மரணம் தற்கொலையோ... கொலையோ... ஆனால், அவரது மரணத்துக்கு ரயில் மட்டுமே காரணம் அல்ல. மீண்டும் மீண்டும் அவர்களைத் துரத்தி, எங்குமே அவர்களை வாழவிடாமல் செய்து, சூழ்ச்சியாகத் திட்டமிட்டு திவ்யாவைக் கரைத்துப் பிரித்து, 'இளவரசன் வேண்டாம்’ என திவ்யாவின் வாயாலேயே சொல்லவைத்து... இவற்றுக்கு எல்லாம் யார் யார் காரணமோ, அவர்கள்தான் இளவரசன் மரணத்துக்கும் காரணமானவர்கள். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்; அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

திவ்யாவை 'இளவசரனின் காதலி’ எனப் பலரும் குறிப்பிட்டாலும், அவர் இளவரசனின் மனைவி. நத்தம் காலனியின் மருமகள். இளவரசனுடன் இணைந்து இல்லறம் நடத்தியவர். ஆயிரம் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இளவரசனை விட்டு விலகிவிடக் கூடாது என ஆரம்பத்தில் அவர் காட்டிய மன உறுதி, மகத்தானது. அந்தத் துணிவுதான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஊர் ஊராக ஓடி வாழும் தைரியத் தைத் தந்தது. ஆனால், அந்த மன உறுதி சற்றே பலவீனப்பட்ட தருணம்தான் அவர் வீழ்ந்த இடமும்.

இப்போது அவரது மனம், தன் நலம் விரும்புவது யார், தன்னை நம்பவைத்துக் கழுத்தறுத்தது யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். சாதி வெறி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, தன் சொந்த‌ அனுபவத்தில் திவ்யா புரிந்துகொண்டிருப்பார். இப்போது அவர் பேச வேண்டும். தன் அன்புக் கணவனை, பாசத்துக்குரிய அப்பாவைப் பறிகொடுத்த அநியாயத்துக்கு நீதி கேட்க வேண்டும். அப்படி திவ்யா துணிவுடன் களமிறங்கினால், அவருக்குப் பின்னால் இளைஞர் கூட்டம் திரண்டு நிற்கும்!

(டி.அருள் எழிலன்)

(விகடன்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல