செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர். ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும்.

பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு (Unsaturated Fat) அதிக அளவில் உள்ளது. இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் (Gluten) என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும். அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது. இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

எடை இழக்க...
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது. இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற...

கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த...

கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

இரத்தத்தில் கொழுப்பை குறைக்க...

கேழ்வரகில் லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids) இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உடலின் இயல்பான செயல்பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல