சனி, 14 டிசம்பர், 2013

மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைப்பதிவுகளிலிருந்து சில துளிகள்...

மக்களின் சுதந்திரத்துக்காக, நல்வாழ்வுக்காகப் பெரும் தியாகங்கள் செய்து, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா வழிமுறைகளையும் கையாளும் தலைவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் மண்டேலா. அவர் உயிருடன் இருக்கும்வரை பதவியில் தொடர்ந்திருக்க முடியும் என்றாலும், இரண்டாம் முறையாகத் தேர்தலில் நிற்க மறுத்துவிட்டார். இதுவே இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு உட்பட உலக நாடுகள் பலவற்றின் உயர்ந்தபட்ச விருதுகள் (203) குவிவதற்கு காரணமாக அமைந்தது.

கைக்கெட்டிய மீன் குழம்பும் எட்டாமல் போன காதலியும்

புத்தன், யேசு வரிசையில் பலர்.... இவர்கள் அனைவரும் தெய்வங்களே, இருந்தும் இம் மண்ணில் மனிதர்களாக அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அதன் பிறகே மண்ணுலகை விட்டு பிரிந்தவர்கள்... அதாவது மண்ணுலகில் இவர்கள் மக்களோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையே பின்னாளில் இவர்கள் தெய்வங்களாக வழிபடக் காரணமாயிற்று. இது வரலாற்றுக் கதைகளே!

இதேபோன்றே, நிறைவேறாத ஆசைகளோடு இறந்துபோனவர்கள் பின்னாளில் கடவுளாக வந்து அருள்பாலிப்பதும் உண்டு. ஆவியாக மாறி அலைக்களிப்பதும் உண்டு. இதுவும் எமது முன்னோர்களின் ஐதீகமே..!

பத்துத் திங்கள்... ஆதி பழங்குடி இனத் தாயாரின் வயிற்றில் சுமக்கப்பட்டு ஒரு விடிகாலைப் பொழுதில் தென்னாபிரிக்கா எனும் நித்திலம் ஈன்றெடுத்த கறுப்பின முத்தே நெல்சன் மண்டேலா எனும் சூரியன். இந்தச் சூரியன் தனது ஔியை இன்று இழந்துவிட்டாலும் இவர் கொடுத்த ஜனநாயகம் என்கின்ற அந்த மாபெரும் ஔி என்றுமே மறையாது. ஏனெனில் பதவிமோகத்தில் ஆட்டம் போடுகின்றவர்களுக்கு ஜனநாயகம் எனும் ஔி அடிக்கப்போகின்ற சாவு மணியே இந்த கறுப்பு சூரியனை என்றென்றும் எம்முள் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கப் போகின்றது என்பது மாத்திரம் திண்ணம்.

ஒரு கடிகாரம் இயங்குவதற்கு அதன் கூறுகள் சீராக இணைந்துள்ளதே காரணமாக இருக்கின்றது. இது போன்றதே ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளும். சீராக இயங்கும் கடிகாரம் தானாக உருவாகிடவில்லை என்பது நமக்குத் தெரியும். ஒரு கடிகாரத்தின் கூறுகளை பெட்டியொன்றுக்குள் போட்டு எவ்வளவுதான் உலுக்கினாலும் அவை தாமாக ஒன்று சேர்ந்து கடிகாரமாக உருவெடுக்க முடியாது. அவற்றை ஒன்றாக இணைத்து ஒரு கடிகாரமாக உருவாக்க திறன்மிக்க வல்லுனர் ஒருவர் தேவைப்படுகின்றார்.

ஆம், மண்டேலா என்கின்ற தனியொரு வல்லுனரின் சிருஷ்டிப்பே ஜனநாயகம் என்கின்ற கடிகாரமாகும். ஏனெனில் தான் நேசித்த மக்களின் சுதந்திரத்திற்காக தன்னை தானே செதுக்கிய சிற்பியே மண்டேலா. இந்த அற்புத மனிதர் தனது இனத்தின் விடிவுக்காக, அகிம்சை வழிப் போராட்டங்களால் நிறவெறியர்களின் ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து தென்னாபிரிக்க மக்களின் விடுதலையைச் சாதித்த வழிமுறையானது மகாத்மா காந்தியின் செயற்பாட்டை போன்றது. காந்தியின் அகிம்சை வழி்ப் போராட்டத்தை இவர் பின்பற்றியமையே, இன்று மகாத்மா காந்திக்கும் ஒரு படிமேல் மக்களால் மட்டுமன்றி உலகத் தலைவர்களாலும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்படுகி்ன்றார் இந்த உன்னத மனிதர்.

யார்? இந்த மண்டேலா...

1918ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் உள்ள 'குனு' கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார். இவரது தந்தை 'சோசா' பழங்குடி இனத்தலைவராக இருந்தவர். இவரது தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்கள் மற்றும் 9 பெண் குழந்தைகள் சேர்ந்து 13 குழந்தைகள். அவரது மூன்றாவது மனைவிக்குப் பிள்ளையாகப் பிறந்தவர்தான் மண்டேலா. இவரது முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா என்பதாகும்.

தென்னாபிரிக்காவின் தேசத்தந்தை எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலாவை அந்நாட்டு மக்கள் தங்களின் முடிசூடா மன்னனாகவே கருதினர். இதனாலேயே அவரை கௌரவிக்கும் வகையில், 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்நாட்டு நாணயத் தாள்களில் (ரண்ட்) அவரின் உருவம் பொறிக்கப்பட்டது. இது மாத்திரமன்றி அனைத்து அரச அலுவலகங்களிலும் அவரது உருவச்சிலை வைக்கப்பட்டதும் சோவோட்டோ கிறிஸ்தவ கோயிலில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளமையும் தென்னாபிரிக்காவின் அனைத்து விமானங்களிலும் மண்டேலாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளமையானதும் மண்டேலாவை கௌரவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளாகும்.

மண்டேலாவின் செயற்பாடுகளும் விருதுகளும்

27 ஆண்டுகள் கொடும் சிறைவாசத்துக்குப் பிறகு, சுதந்திர தென்னாபிரிக்காவின் முதல் ஜனநாயகத் தேர்தலில் வென்று, தென்னாபிரிக்க அரசின் தலைவரானபோது, வெள்ளை இன மக்களிடம் அவர் காட்டிய பெருந்தன்மையும், மக்களாட்சி குறித்த அவரது புரிதலும், தொலைநோக்கும்தான் அவர் எத்தகைய மகத்தான தலைவர் என்பதைக் காட்டுகிறது. இங்குதான் அவர் காந்திய வழியை முழுமையாகப் பின்பற்றுகிறார்.

தங்கள் மக்களின் சுதந்திரத்துக்காக, நல்வாழ்வுக்காகப் பெரும் தியாகங்கள் செய்து, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா வழிமுறைகளையும் கையாளும் தலைவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் மண்டேலா. அவர் உயிருடன் இருக்கும்வரை பதவியில் தொடர்ந்திருக்க முடியும் என்றாலும், இரண்டாம் முறையாகத் தேர்தலில் நிற்கவே மறுத்துவிட்டார். இதுவே இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு உட்பட உலக நாடுகள் பலவற்றின் உயர்ந்தபட்ச விருதுகள் (203) குவிவதற்கும் காரணமாக அமைந்தது. மண்டேலாவைப் போன்று ஏராளமான சர்வதேச விருதுகளைப் பெற்ற தலைவர்கள் வேறு எவரும் இல்லை என்பதே இவரது மகத்துவத்துக்கான சிறு சான்று.

1995ஆம் ஆண்டு மண்டேலா எழுதிய கடிதம் ஒன்றில் காதலர் தினம் குறித்த விவரங்கள் எவையுமே தமக்கு தெரியாது என குறிப்பிட்டிருந்தார். 27 வருட சிறைவாசத்திற்கு பின் வெளிவந்த மண்டேலா, எழுதிய (LONG WALK TO FREEDOM) என்ற சுய சரிதைப் புத்தகத்தில், 72 வயதில் சிறையிலிருந்து வெளியே வந்தபோதும் அப்போது தான் புதிதாக பிறந்ததை போன்று உணர்ந்ததாக எழுதியிருந்தார்.தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்றது தான் அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும். தென்னாபிரிக்க பழங்குடியின தலைவரின் மகனான மண்டேலா 'மடிபா' என்ற செல்லப் பெயர் கொண்டே அழைக்கப்பட்டார். 'மடிபா' என்றால் தூய்மைப்படுத்துபவர் என்று பொருள் சாந்தமானவராக கருதப்படும் மண்டேலா, முன்கோபி எனவும் வர்ணிக்கப்படுகிறார். .

எயிட்ஸ்நோய் விழிப்புணர்வில் மண்டேலாவின் பங்கு

'எயிட்ஸ்' நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மண்டேலா 2005ஆம் ஆண்டு தனது மகன் மக்காத்தோ 'எயிட்ஸ்' நோயால் மரணமடைந்தார் என்பதை பொதுநிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. மண்டேலா தனது சொந்த ஊரான குனுவில், அவர் இறுதியாக கழித்த சிறை அறையின் வடிவத்தில் வீடு அமைத்தார். இந்த வீட்டிலேயே தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து நிகழ்ச்சிகளையும் நடத்தினார். 1995ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை 'ரக்பி' இறுதிப் போட்டியின் போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த மண்டேலா. வெள்ளை இனத்தவர் மட்டுமே விளையாடி வந்த ரக்பியை இனிமேல் அனைவரும் விளையாடலாம் என்றும் அறிவித்தார். தனது சிறை வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை 'ராபன்' தீவு சிறையிலேயே மண்டேலா கழித்தார். சிறையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த எண் 46664 ஆகும். அவர் சிறைவைக்கப்பட்டிருந்த அறையின் தரையில் "மண்டேலா எண் 46664" என அவரே எழுதி வைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

10 மணித்தியாலங்கள் பாறைகளை உடைத்தார்

நெல்சன் மண்டேலா ராபன் தீவு சிறையில் இருந்தபோது தினமும் 10 மணித்தியாலங்கள் பாறைகளை உடைத்ததாக சிறை அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடியவர்களை அந்த நாட்டு அரசு 'ராபன்' தீவில் அமைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவும் இந்தச் சிறையில் 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.

அங்கு நாள்தோறும் நான்கு, நான்கு கைதிகளாக இரும்புச் சங்கிலியில் பிணைத்து கடினமான சுண்ணாம்பு பாறைகளை உடைக்கச் செய்வது வழக்கம். அதன்படி, மண்டேலாவையும் சக கைதிகளோடு சங்கிலியில் பிணைத்து சுண்ணாம்பு பாறைகளை உடைக்கச் செய்தனர். நாள்தோறும் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை மண்டேலா பாறைகளை உடைத்தார். வெள்ளை நிற சுண்ணாம்பு பாறைகளோடு அவரது வாழ்க்கை பல ஆண்டுகள் உருண்டோடியது.

மண்டேலா இருந்த சிறைப் பகுதியின் அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட் இந்தத் தகவல்களை இப்போது செய்தியாளர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். மண்டேலா குறித்து அவர் மேலும் கூறியதாவது:

1978ஆம் ஆண்டில் ராபன் சிறையில் நான் சிறைச்சாலை அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது எனக்கு 18 வயது, மண்டேலாவுக்கு 60 வயதிருக்கும். இருவரும் பரஸ்பரம் அன்போடு பேசிக் கொள்வோம். மண்டேலா எப்போதும் தூய்மையான உடை அணிந்திருப்பார். முடிந்தவரை அனைத்து கைதிகளுக்கும் உதவி செய்வார்.

அவர் சிறைக் கைதியாக இருந்தால்கூட என்னிடம் ஒரு தந்தையைப் போலவே நடந்து கொண்டார். சட்டம் படித்திருந்த மண்டேலா, பல்வேறு நேரங்களில் சிறை அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்து கைதிகளுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தார். அவர் மீதுள்ள பாசத்தால் ரொட்டித் துண்டுகள் மற்றும் தலைமுடிக்கு வைக்கும் எண்ணெய் என்பவற்றை சக சிறைக்காவலர்களுக்குத் தெரியாமல் பல தடவைகள் கொண்டு வந்து கொடுத்துள்ளேன்.

மண்டேலா விடுதலை அடைந்து மக்களாட்சியின் மூலம் தேர்தலில் வென்று 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் நானும் கலந்து கொண்டேன். என்னை அடையாளம் தெரிந்துகொண்ட அவர் அருகில் அழைத்தது மாத்திரமல்லாமல் ‘இவர் யார் தெரியுமா? என்னுடைய சிறைக்காவலர்’ என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்தும் வைத்தார் என்கிறார் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட்.

பாழடைந்த நிலையில் மண்டேலாவின் வீடு

ஜோகன்னஸ்பேர்க் நகரின் புறநகர்ப் பகுதியான அலெக்சாண்ட்ரா குடிசைப் பகுதியில் தன்னுடைய இளமைப் பருவத்தின் பெரும் பகுதியை கழித்திருந்த மண்டேலா "எனக்கு 20 வயதிருக்கும்போது அங்குள்ள மிகச் சிறிய வீடொன்றில் நாங்கள் வசித்தோம். அந்த வீட்டில் மின் வசதி கிடையாது, தண்ணீர் வசதி கிடையாது, ஆனாலும், அங்கு நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்” என்று தனது சுயசரிதை புத்தகத்தில் அந்த வீட்டைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒருவரது வாழ்க்கை முறையில் பெரும் பகுதியை எந்த இடம் அதாவது தான் வாழ்ந்த வீடு, சூழல் என்பன அவரது ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதோ அந்த ஒன்றின் நினைவுகள் தனது ஆயுள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு மண்டேலா தனது சிறிய வீடு பற்றி சுயசரிதைப் புத்தகத்தில் எழுதியிருந்தமையே சான்று. ஆனால் மண்டேலாவின் மனங்கவர்ந்த அலெக்சாண்ட்ரா வீடு தற்போது பாழடைந்த நிலையில் உள்ளமையானது கவலைக்குரிய விடயமாகும்.

நெல்சன் மண்டேலாவின் காதலும் திருமணங்களும்

நெல்சன் மண்டேலா ஒரு போராளி என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு அவர் பெண்களைக் கவர்ந்த நாயகன் என்பதும் உண்மை. அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை பயணத்தின் பல்வேறு கட்டங்களில் 3 மனைவிகளுடன் ( 6 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகளுடன்) பயணித்துள்ளார். இதற்கிடையே ஒரு பெண்ணால் மண்டேலாவின் காதல் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்ட நிகழ்வும் அவர் வாழ்வில் நடந்துள்ளமை யானது அவர் பெண்களை எவ்வளவு நேசித்துள்ளார் என்பதற்கு சான்றாகும்.

மண்டேலாவின் காதலை நிராகரத்த பெண்

தென் ஆபிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலியாவிற்கு கிடைக்காமல் போனது.

மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கறுப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகீம் அஸ்வத். இவரது மகளே ஆமினா. இப்ராகீம் அஸ்வத்தால் உருவாக்கப்பட்ட சங்கமே பின்னாளில் இந்திய காங்கிரஸ் இயக்கமாக உருவெடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக 1994ஆம் ஆண்டு பதவியேற்ற புரட்சியாளர் நெல்சன் மண்டேலா, தன்மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார். பின்னாளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த யூசப் கச்சாலியா என்பவரை ஆமினா திருமணம் செய்து கொண்டு புதுடில்லியில் வாழ்ந்தார்.

அதற்கு முன்னதாக தென்னாபிரிக்காவில் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக பல்வேறு போராட்டங்களை சந்தித்த ஆமினா கச்சாலியா, நெல்சன் மண்டேலா தன்மீது வைத்திருந்த காதலையும் அதை அவர் நிராகரித்ததையும் சுவைபட புத்தகமாக எழுதியுள்ளார்.

ஒரு முறை ஜோகனஸ்பர்க்கில் உள்ள என் வீட்டிற்கு வந்த நெல்சன் மண்டேலா, என்னை முத்தமிட்டு, என் தலைமுடியை கோதி விட்டபடி, 'நீ எவ்வளவு அழகான இளநங்கை தெரியுமா?' என்று கேட்டார். நான் கோபமாக அவரை தள்ளி விட்டேன். என் கோபத்துக்கான காரணம் என்னவென்று அவர் கேட்டார். 'நான் இளநங்கை அல்ல. நடுத்தர வயது பெண்' என்று பதில் கூறினேன்.

'சரி முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்' என்று கூறிய அவர், மீண்டும் ஒருமுறை என்னை முத்தமிட்டு, 'நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா வயதான பெண்ணே?' என்று என்னை கேலி செய்தார்.

மீண்டும் ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது அவருக்கு பிடித்தமான மீன் குழம்பு சமைத்து வைத்திருந்தேன். இதனை ஒரு நல்ல சகுனமாக எடுத்துக்கொண்ட அவர் தனது காதலை என்னிடம் வெளிப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறி, எனது சம்மதத்தை கேட்டார். அவர் அவ்வாறு கேட்டது எனக்குப் பிடித்திருந்தாலும் அவரை அன்று நான் நிராகரித்தேன்.

மண்டேலாவின் காதலை நான் நிராகரிப்பதற்கு, மொசாம்பியா நாட்டை சேர்ந்த கிரேசா மச்சேலுடன் அவருக்கு திருமணம் நடந்திருந்ததே காரணமாகும். திருமணமான ஒருவரை என் வாழ்க்கைத் துணைவராக இணைத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை என்ற எனது நிலைப்பாட்டை அவரிடம் எடுத்துக்கூறினேன். இதனால், வருத்தப்பட்ட அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு விட்டார். அவர் செல்லுமுன் அவருக்கு விருப்பமான மீன் குழம்பைப் பற்றி நினைவுபடுத்தினேன், இருந்தும் நிற்காமல் சென்று விட்டார்.

மேற்கண்டவாறு பல சுவாரஸ்யமான நினைவுகளை 'When Hope and History time' (நம்பிக்கையும் வரலாறும் இணைந்து கவிதையாகும் போது) என்ற புத்தகத்தில் ஆமினா கச்சாலியா பதிவு செய்துள்ளார்.

இந்த காலகட்டத்திற்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையில், யூசுப் கச்சாலியாவை திருமணம் செய்து கொண்ட ஆமினா, புதுடில்லியில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் 1995ஆம் ஆண்டு காலமானார். அதன் பின்னர் ஜோகனஸ்பேர்க்கில் வாழ்ந்து வந்த ஆமினா கச்சாலியா, தனது 83ஆவது வயதில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது பிள்ளைகள், ஆமினா கச்சாலியா எழுதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.

மண்டேலாவின் இறுதி மணித்தியாலங்கள்

மறைந்த மாமனிதன் நெல்சன் மண்டேலாவின் இறுதி மணித்தியாலங்கள் அற்புதமானவை என்று அவரின் புதல்வி தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தமது 95 ஆவது வயதில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இறுதி விடை வழங்க தமது குடும்பத்தினர் உட்பட அனைவரும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்கா மறைந்த தமது தலைவருக்கான நினைவு கூரல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில். நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. சுமார் 100இற்கும் அதிகமான அரச தலைவர்கள் இதில் பங்கேற்பர் என குறிப்பிட்டுள்ள தென்னாபிரிக்க அரசானது உலக வரலாற்றில் அதிக தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் இறுதி நிகழ்வுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்பதில் பெருமிதம் அடைகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது. நிறம் எதுவானாலும் நல்ல மனத்தினூடாக அதனை தகர்த்தெறிந்த மண்டேலா என்றும் எப்போதும் எம்முடன் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்.

தாமோதரம் சுதாகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல