வெள்ளி, 20 டிசம்பர், 2013

பார்வல் தோ ப்யாசா ரெசிபி

குளிர்காலத்தில் கோவைக்காயின் சீசன் என்பதால், மார்கெட் முழுவதும் கோவைக்காய் மிகவும் விலை மலிவில் விற்கப்படும். இத்தகைய கோவைக்காயில் நல்ல அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இதனை உணவில் அதிகம் சேர்த்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, குளிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

இங்கு வட இந்திய ஸ்டைலில் அந்த கோவைக்காயைக் கொண்டு எப்படி வறுவல் செய்வது என்று பார்ப்போம். வட இந்தியாவில் இந்த ரெசிபியின் பெயர் பார்வல் தோ ப்யாசா.

சரி, இப்போது அந்த பார்வல் தோ ப்யாசா ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்:

கோவைக்காய் - 8-10
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3-4
மிளகு - 5-6
கிராம்பு - 3-4
கருப்பு ஏலக்காய் - 1-2
பச்சை ஏலக்காய் - 2-3
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பூண்டு - 5-6 (தட்டியது)
தக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை:

முதலில் கோவைக்காயை நன்கு கழுவி, தோலை சீவி விட்டு, நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதில் உள்ள விதையானது கடினமாக இருந்தால், அந்த விதையை நீக்கிவிட வேண்டும்.

அடுத்து ஒரு பேனில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கோவைக்காயை போட்டு, மூடி வைத்து கோவைக்காயை நன்கு மென்மையாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், மிளகு, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய் மற்றும் பட்டை ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும்.

பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு தக்காளி சாறு மற்றும் தயிர் ஊற்றி நன்கு ஒரு கொதி விட்டு, பின் மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 1-2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 பிறகு வேக வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து, மீண்டும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, தீயை குறைவில் வைத்து, 10-15 நிமிடம் வேக வைத்து, பின் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், வட இந்திய ரெசிபியான பார்வல் தோ ப்யாசா ரெடி!!!

இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல