திங்கள், 10 பிப்ரவரி, 2014

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 12

பர்மாவில் தமிழர்கள் சுமார் இருநூறு ஆண்டு வரலாற்றைக் கொண்டிருக்கின்றபோதிலும், அங்கு தமிழர்களுக்கும் பர்மியர்களுக்கும் இடையேயான திருமணங்கள் அரிதாகவே நடைபெறுகின்றன.

தமிழர்கள் பெரும்பாலும் பர்மியர்களை திருமணம் செய்துகொள்ளத் தயங்குகின்றனர்.

முருகன் கோயில் நிர்வாகியாக இருக்கும் 80 வயதான சுப்பிரமணியப் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்புகளை மீறி பர்மிய சகோதரிகள் இருவரை ஒரே சமயத்தில் மணம்முடித்தார்.

இதனால் அவரது பெற்றோர் கோபமடைந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். சொத்திலும் அவருக்குப் பங்கு கிடைக்கவில்லை. ஆயினும் தான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தியதாக அவர் நம்மிடம் கூறினார்.

‘தமிழ்ப் பெண்களை விட பர்மியப் பெண்கள் மிகவும் பணிவானவர்கள். கணவர்களை அன்புடனும் உபசரிப்புடனும் கவனித்துக் கொள்பவர்கள்’ என்ற கருத்து இங்கே சமூகத்தில் நிலவுகிறது.

தமிழர்களுக்கும் பர்மியர்களுக்கும் இடையே குடும்ப உறவுகள் குறைவாக இருந்தாலும், பர்மிய கலாச்சாரத்தின் தாக்கம் தமிழர்களிடையே அதிகமாகவே இருக்கிறது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் பர்மிய உடையையே விரும்பி அணிகின்றனர்.

தமிழ் இந்துக்கள் புத்தரின் படங்களையும், சிறு சிலைகளையும் தமது வீட்டில் வைத்து வழிபடுகின்றனர். பௌத்த துறவிகளை வீடுகளுக்கு அழைத்து தானம் அளிக்கின்றனர்.

பெரு நகரங்கள் மட்டுமின்றி தூரப் பகுதிகளில் கிராமங்களில் இருக்கும் தமிழர்கள் கூட தமது அன்றாட வாழ்வில் பர்மிய மொழியைக் கலந்தே பேசுகின்றனர்.

திபெத்தோ பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேரந்தது பர்மிய மொழி. இம்மொழியில் ஒரு காலத்தில் பிரஹ்மி எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளும் ஒரு காலத்தில் இதே எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளன.

பர்மிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறுகிறார் தமிழாசிரியர் பெ. சண்முகநாதன்.

பர்மாவில் தற்போது தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ்ந்தாலும் காலனிய ஆட்சியில் இருந்ததைப்போல அவர்கள் செல்வாக்காக இல்லை. இரண்டாம் உலகப் போரிலும் அதற்குப் பின்னும் இந்திய சமூகம் பல இழப்புக்களை சந்தித்துள்ளது.

அரசியல் சூழலும் தமிழர்களின் நிலையும்

ஐனநாயகத்தை நோக்கி நகர்ந்துவரும் பர்மா மாபெரும் மாற்றங்களின் நடுவில் இருக்கிறது. அங்கே கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேல் நடைபெற்ற அரசியல் போராட்டங்களில் தமிழர்களின் நேரடிப் பங்களிப்பு மிகவும் குறைவு. பெரும்பாலானோர் பார்வையாளர்களாகவே இருந்துள்ளனர்.

அரசியல் குறித்து பொது இடங்களில் பகிரங்கமாக பேச இப்போது கூட பலர் தயங்குகின்றனர். இந்து-தமிழர்கள் பரவலாக மதப்பற்று கொண்டவர்களாக இருக்கின்றனர். பலர் வீடுகளில் காந்தி, நேதாஜி, காமராஜர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் போன்றோரின் படங்கள் இருக்கின்றன. சிலர் இந்து கடும்போக்கு அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர்களின் படங்களை வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள கட்சிகளின் பேரில் இங்கே இயங்க முடியாது என்ற விதி உள்ளதால் பல அமைப்புக்களின் பெயர்கள் மாறியுள்ளன.

ஆர்எஸ்எஸ், சனாதன தர்ம ஸ்வயம் சேவக் சங் என்ற பெயரில் பர்மாவில் இயங்குகிறது. இதற்கு வலுவான அடித்தளம் இங்கிருக்கிறது.

முந்தைய காலங்களில் பர்மிய தேசிய காங்கிரஸ், பர்மா திமுக போன்ற கட்சிகள் அங்கேயிருந்தன. பர்மா திமுகவினர் தற்போது தமிழர் அறநெறிக் கழகம் என்ற பெயரில் இயங்குகிறது.

‘அரசியலில் தமிழர் என்ற அடையாளம் எடுபடாது’

பர்மிய காங்கிரஸ் கட்சி 60-களில் – தேசியமயத்தின் போது இந்தியாவிலிருந்து கப்பல்களை கொண்டுவந்து பலஆயிரம் பேர் தாயகம் செல்ல உதவியிருக்கிறது. அதன்பிறகு அக்கட்சி அழிந்தொழிந்து விட்டது.

தற்போது தமிழர்கள் மத ரீதியாக பிரிந்துள்ளனர். ஆனால் முன்பு தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தில் இருந்ததாகவும் பதவிப் போட்டியில் அது அழிந்து போனதாகவும் கூறுகிறார் தமிழ் கல்வி வளர்ச்சி மையத்தின் துணைச் செயலர் ஆர்.ஏ. செல்வகுமார்.

அரச நிர்வாகம் தவிர, சுரங்கத் தொழில் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டு வருகிறது. இராணுவத்தின் எண்ணிக்கை மூன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பர்மாவில் இருக்கும் மக்களில் 90 சதவீதம் பேர் பௌத்தர்கள். அரசியலில் பர்மியர்களும், பொருளாதாரத்தில் சீனர்களும் முதல் நிலையில் உள்ளனர்.

இந்தியர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம் தான். தமிழர்கள் யாரும் இதுவரை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகவில்லை. தமிழர்கள் திரளாக வாழாத சூழலில் இனிவரும் காலத்திலும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற கருத்து இருக்கிறது.

இறுக்கமான உள்நாட்டு சூழலால் அனைத்து தமிழர்களுக்கும் அறிமுகமானவர் என்று யாரும் இல்லை. தமிழர் என்ற அடையாளத்தை மையப்படுத்தி தேர்தலில் நிற்பதை விட, மைய அரசியலில் இருப்பதே நீண்டகாலப் பலன் தரும் என்ற கருத்தும் தமிழர்கள் மத்தியில் வலுவாக உள்ளது.

தொடரும்

பிபிசி தமிழோசை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல