சனி, 10 ஜனவரி, 2015

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வாக்காளனே!!

இலங்கை அரசியலில் வரலாறு காணாத மாற்றம் என்று சொன்னால் அது தவறு...

காரணம்!

இது வரலாறு காண வேண்டிய மாற்றம். திடீரென பறந்த அன்னத்தினால் வெற்றிலை சின்னம் தோற்றிருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.

அது அப்படித்தானா என்பது உறுதியில்லை...

திடீரென்று யோசித்து, உடனே முடிவெடுத்து ஜனாதிபதித் தேர்தலில் குதித்து வெற்றிபெற்றதாக இதைக் கருதமுடியாது. சீரான திட்டவடிவமைப்பு, அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற நேர்த்தியான அணுகுமுறைகளை வைத்து பார்க்கும் போது இந்த அன்னம் திடீரென பறந்து வரவில்லை.



நின்று நிதானித்து கள நிலைவரங்களை அறிந்தபின்தான் பறக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.

இதோ நம் நாட்டின் ஏழாவது ஜனாதிபதி யார் என்பதை தீர்மானித்த நேற்றைய நாள், அது மைத்திரிபால சிறிசேன என அறிவித்துவிட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு தனது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையிலேதான் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு அழைப்புவிடுத்து தானாக வந்து, பதவியைத் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

மஹிந்த ராஜபக் ஷவின் குறி தவறிய இடம் இங்குதான்.

எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார் மைத்திரிபால சிறிசேன. அவர் நிறுத்தப்படுவார் என்று கொஞ்சம் நினைத்திருக்க வாய்ப்பில்லை. மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் என்பது அனைவரும் அறிந்துதான், ஆனால் அந்த விடயத்தை ஞாபகப்படுத்த வேண்டியது நமது கடமையல்லவா.

இந்தத் தேர்தலின் முடிவுகள், யார் எங்கெங்கு எவ்வளவு எவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய முழுமையான தகவல்கள் வேறு பக்கங்களில் பிரசுரமாகியிருப்பதால் நாம் அதைத் தவிர்த்து ஏனைய விடயங்களைப் பற்றி பேசுவோம்...

ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டிருப்பதாகத்தான் பொது எதிரணியினர் தெரிவித்துவருகின்கின்றனர். அது உண்மையும்தான். நம்நாட்டின் புதிய ஜனாதிபதியின் அரசியல் பின்னணியைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்...

பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்பதுதான் இவருடைய முழுப்பெயர். 1951ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி பொலன்னறுவையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற மைத்திரிபால சிறிசேன, அதன்பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் கற்று 1973ஆம் ஆண்டில் டிப்ளோமா பட்டம் பெற்றார். கல்வி பயிலும் போதே அரசியல் ஈடுபாடு காட்டிவந்த மைத்திரிபால சிறிசேன, 1971களில் ஜே.வி.பியின் புரட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன சிறையிலும் அடைக்கப்பட்டார். அதன் பின் விடுதலையான மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவின் மார்கிசம் கார்க்கி கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியல் டிபளோமா பட்டம் பெற்றார்.

உத்தியோகப்பூர்வமாக 1979ஆம் அரசியலில் காலடி எடுத்துவைத்த மைத்திரிபால சிறிசேன, இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1989ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படடார்.

அதன் பின்னர் படிப்படியாக அரசியலில் உயர்ந்த மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய உறுப்பினராக உருவெடுத்தார். 1994ஆம் ஆண்டிலிருந்து 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

2014 நவம்பர் மாதம் 21ஆம் திகதியே இவர் எதிர்க்கட்சியின் கூட்டணியில் இணைந்து ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளராகக் களமிறங்குவதாக அறிவித்தார். ஆனபோதும், தான் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியையோ அல்லது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியையோ ராஜினாமா செய்யவில்லை. இன்னமும் சட்டப்படி நான்தான் செயலாளர் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆற்றுப் பெருநிலம் மற்றும் ரஜரட்டை அபிவிருத்தி அமைச்சராகவும், விவசாய அபிவிருத்தி, வேளாண் சேவைகள் அமைச்சராகவும், இறுதியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் 2014 நவம்பர் 21 வரை பதவியில் இருந்தார். மைத்திரிபால சிறிசேன மீது 2008 அக்டோபர் 9ஆம் திகதி கொழும்பின் புறநகரான பிலியந்தலையின் அருகிலுள்ள பொரலஸ்கமுவ என்ற இடத்தில் வைத்து தற்கொலைக்குண்டுத் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டது. மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த வாகன அணித் தொடர் மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலில் இருந்து மைத்திரிபால சிறிசேன சென்ற வாகனம் தப்பியது. ஆனாலும் அச்சம்பவத்தில் ஒருவர் மட்டும் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர்வரை காயமடைந்தனர்.

இப்படியாக பல கட்டங்களைத் தாண்டி வந்தே இன்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

இவர் தன்னை பொது வேட்பாளராக அறிவிக்கும் அந்த நாள் வரை ஏன் அந்த தருணம் வரை மைத்திரி பால சிறிசேனதான், இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்துப்போட்டியிடப்போகிறார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு சில ஊடகங்களில் அரசல் புரசலாக இந்தச் செய்தி கசிந்திருந்தாலும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஏன் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவரிடமே இந்தக் கேள்வி எழுப்பட்டது. அப்போது அவர் அதற்கு இல்லை என்று மறுத்துவிட்டார். ஏனைய கேள்விகளுக்கும் அவர் தனது சிரிப்பின் மூலமே பதில் சொல்லி வந்தார்...

அந்த நிலையில்,

2014 நவம்பர் 21 அன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருந்து மேலும் பல கட்சி உறுப்பினர்களுடன் விலகி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி-தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து கொண்டார். அதன் பின்னர்தான் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக இவர் தான் களமிறங்குகிறார் என்று அவரின் போட்டியாளராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கே தெரியவந்தது...

அதிர்ச்சிதான்... இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அரச தரப்பு....

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என அறிவிக்கப்பட்ட பின்னர் அரசத்தரப்புக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. அரசாங்கத்தில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று மகிந்த ராஜபக் ஷவின் கோட்டைக்குள் இருந்த பலர் வெளியேறினர்.

இந்த வெளியேற்றத்தினால் மஹிந்த தரப்பு பாராளுமன்றத்தில் கொண்டிருந்த மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையை இழந்தது. அடுத்தடுத்து பல அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இப்படி கட்சித் தாவல்கள் நடந்ததில்லை என்றே சொல்லவேண்டும். இங்கிருந்து அந்தப்பக்கமும் அந்தப்பக்கத்தில் இருந்து இந்தப்பக்கமும் கட்சித்தாவல்கள் சர்வசாதாரணமாக நடந்தன.

கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலத்தில் அனைத்துப் பத்திரிகைகளிலும் முன்பக்கத்தை பிடித்துக்கொண்ட செய்திகள் என்றால் இந்தக் கட்சி தாவல்கள்தான்.

இலங்கையின் அனைத்து நிர்வாகக் கூறுகளையும் ராஜபக் ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், ஊழல், உறவினருக்கான சலுகை போன்றவற்றால் இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதாகவும் பொது எதிரணித் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. அது உண்மைதான் என்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியே வந்த பல முன்னாள் அமைச்சர்கள் நிரூபித்தும் காட்டினர்.

அதைத்தவிர பலராலும் எதிர்க்கப்பட்டு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைமையை, பொது எதிரணி வேட்பாளர், தான் பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் அதை இல்லாமல் செய்துவிடுவேன் என்று உறுதியளித்தார்.

இலங்கைத் தேர்தல் வரலாற்றிலேயே பல கோடிகள் கைமாற்றப்பட்டதும் இந்தத் தேர்தலில்தான் என்றும் பிரசார மேடைகளில் சொல்லப்பட்டு வந்தது. எத்தனை கோடி கொடுத்தும் வெற்றியைத் தனதாக்கிக்கொள்ள முடியாமல் போனது மஹிந்த ராஜபக் ஷவிற்கு.

இந்தத் தேர்தலில் முக்கியமாக பார்க்கவேண்டிய ஒன்று தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை காரணம் இவர்கள் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவுகள் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்தியது. கொழும்பை எடுத்துக்கொண்டால் மனோ கணேசன், அசாத் சாலி என்று பலரும் பொது எதிரணிக்கு பக்கபலமாக செயற்பட்டார்கள். இவர்களை அடுத்து முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புகளின் அறிக்கை.

தபால் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர்தான் இவர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்கள். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளை தொகுதி வாரியாக நாம் பார்த்தால், தமிழ் முஸ்லிம் வாக்குகளினால்தான் அவர் வெற்றிபெற்றார் என்று நம்புகிறோம்.

இன்னொரு விடயத்தையும் இங்கே சுட்டிக்காட்டினால் இந்தத் தருணத்தில் அது பொருந்தும் என்று நினைக்கின்றோம். 2005இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெற்றிபெற்றதும் வடக்கு மக்களின் வாக்குகளால்தான், இப்போது 2015 இல் அவர் தோல்வியடைந்ததும் வடக்கு மக்களின் வாக்குகளால்தான். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. 2005இல் மக்கள் வாக்களிக்கவில்லை. 2015 மக்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த வாக்களிப்புதான் இலங்கை அரசியலை மாற்றியிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

எது எப்படியோ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவின் மீதும், பிரதமராக பதவிவகிக்கப்போகும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுக்கின்றது.

இந்த நம்பிக்கையை தளர்த்திக்கொள்ளாமல் மக்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவதற்கு வழிசமைத்தால் எதிர்வரும் தேர்தல்களின்போது கட்டவுட் போஸ்டர்களுக்கு செலவு செய்யாமலே தேர்தலை வெற்றிகொள்ளலாம்.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேனவை நாமும் வாழ்த்துகின்றோம்.

வாழ்க ஜனநாயகம்...

எஸ்.ஜே.பிரசாத்-

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல