சனி, 10 ஜனவரி, 2015

மைத்திரிபால சிறிசேன முன்னுள்ள சவால்கள்

மிகப்பெரிய பரபரப்புக்கு மத்தியில் நிலவிவந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து அரசியலை ஆரம்பித்த மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்னொரு வகையில் கூறுவதென்றால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது என்று கூறலாம்.



அது மட்டுமல்ல தேர்தல் முடிவின் பின்னர் பல பாதகமான நிலைமைகள் தோன்றும் என்று பல தரப்புக்களாலும் கூறப்பட்டுவந்த நிலையில் ஆட்சி மாற்றமும் சுமுகமான முறையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளிவந்து முடிவடைவதற்கு முன்னரே மஹிந்த ராஜபக் ஷ அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலை பொறுத்தமட்டில் பாரிய எதிர்பார்ப்புக்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்ததுடன் இதற்கு முன்னர் ஒருபோதும் காணப்படாத வித்தியாசமான போக்கு இந்தத் தேர்தலில் காணப்பட்டது. அந்தளவுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்கள் மத்தியிலும் கடுமையான போட்டி நிலவியது. இம்முறை ஜனாதிபதி தேர்தல் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது. அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி தேர்தலில் பிரதான போட்டியாளர்களாக மாறினர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது புதுவிதமான அனுபவமாக இருந்தது. ஆளும் கட்சியில் இருந்த இரண்டு பேர் திடீரென எதிர் எதிர் போட்டியாளர்களாக மாறியமையே இதற்கு காரணம். கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதிவரை நாட்டில் மிகவும் ஸ்திரமான அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காணப்பட்டது. ஆனால் 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது எதிரணியின் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன துமிந்த திசாநாயக்க மற்றும் எம்.டி.கே.எஸ். குணவர்த்தன ஆகியோரும் வெளியேறினர். அதன் பின்னரே நாட்டின் அரசியலில் சூறாவளி ஏற்பட்டது என்று கூறலாம். காரணம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடங்கிய ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் வெளியேற்றம் தீவிரமாக இடம்பெற ஆரம்பித்தது. ஒவ்வொருவராக கட்சி தாவ ஆரம்பித்து மொத்தமாக 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினர். இந்நிலையில் இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் தேர்தல் பிரசாரக் காலத்தின்போது பாரிய போட்டி நிலவியது. தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்த இரண்டு வேட்பாளர்களும் அரசியலமைப்பு மாற்றத்துக்கான யோசனைகளை முன்வைத்தனர். மேலும் மக்கள் மத்தியில் அவற்றை கொண்டுசென்றனர். ஆனால் மைத்திரிபால சிறிசேன தரப்பின் 100 நாள் வேலைத்திட்டம் மக்கள் மத்தியில் சென்றது. அத்துடன் நாட்டுக்கு மாற்றம் ஒன்று தேவை என்ற விடயமும் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாரியளவிலான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டே பதவிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவேண்டியது அவசியமாகும் . அரசியலமைப்பு மாற்றம் மற்றும் மக்களுக்கான பொருளாதார சுபீட்சம் என்பன தொடர்பில் அவரின் அபரிமிதமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் அதிகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் தேர்தல் தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேன மிகவும் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். சிங்கள மக்கள் அதிகளவு வாழும் சில தொகுதிகளில் மஹிந்த ராஜப க் க்ஷ வெற்றிபெற்றிருந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மைத்திரிபால சிறிசேன பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். எனினும் தெற்கின் பல தொகுதிகளிலும் மைத்திரிபால சிறிசேன மக்களின் ஆதரவை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

இந்நிலையில் மைத்திரிப்பால சிறிசேன எவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை முக்கியமாக வழங்கியுள்ளார் என்று பார்ப்போம். அதாவது பொருளாதார விடயங்கள் அல்லாமல் அரசியலமைப்பு ரீதியான அவரின் வாக்குறுதிகளை பார்ப்போம். அவை வருமாறு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னர் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் ஜனவரி 29 ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக அமைச்சரவையின் ஊடாக பாராளுமன்றம் மற்றும் சம்மந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் உட்பட்ட அரசியலமைப்பு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் தேர்தல் முறை மாற்றப்படும் 18 ஆவது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படும்.

சமூக நீதிக்கான அமைப்பின் யோசனைகள் அதுரலிய ரத்ன தேரரின் 19 ஆவது திருத்தச் சட்ட யோசனை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் யோசனைகள் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நான் 100 நாட்களில் மாற்றியமைப்பேன்.

ஆனால் தற்போதைய அரசியல் அமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மட்டும் மாற்றப்படக் கூடிய அரசியல்யாப்பு பிரிவுகளில் இதன் போது நான் கைவைக்கமாட்டேன். அதேபோன்று நாட்டின் ஸ்திரம் பாதுகாப்பு இறைமை ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படும் வகையிலான எந்தவிதமான அரசியலமைப்பு திருத்தத்துக்கும் செல்லமாட்டேன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.

மேலும், விஞ்ஞான அடிப்படையில் அமைச்சரவை எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டு விருப்பு வாக்குமுறைமை இரத்து செய்யப்படும் நல்லாட்சியை செயற்பாட்டை கண்காணிக்க கட்டமைப்பொன்று உருவாக்கப்படும்

18 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் சமூர்த்தி கொடுப்பனவு இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவின் மாற்றம் குறித்த எண்ணக்கருவின் மீது நாட்டு மக்கள் பெரும்பாலாக பாரிய நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர். நாட்டில் 10 வருடகாலத்துக்குப் பின்னர் மக்கள் பாரிய மாற்றம் ஒன்றுக்காக வாக்களித்துள்ளனர். குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவும் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். மிக நீண்டகாலமாக நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்காமல் இருந்துவருகின்ற நிலையில் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மைத்திரிபால சிறிசேன புதிய பிரவேசம் ஒன்றை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விசேடமாக எந்த விடயமும் குறிப்பிட்டுக்கூறப்படாவிடினும் அவர் இந்த விடயத்தில் ஒரு புதிய அரசியல் பிரவேசத்தை எடுப்பார் என்றும் நம்பப்படுகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகூடிய வாக்குகளை பெற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளமையின் காரணமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமையும் பொறுப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என்றே வலியுறுத்தப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது. ஒருமாதகால பாரிய நடவடிக்கைக்கு முடிவு கிடைத்துள்ளது. எனவே அடுத்து வெற்றிபெற்றுள்ள வேட்பாளர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும். இந்த விடயத்தில் மக்களும் அவதானத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகும். மைத்திரிபால சிறிசேன பாரிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்தே வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் அவர் எதிர்காலத்தில் தமது கொள்கைத் திட்டங்களை முன்னெடுக்கும்போது பல சவால்களுக்கு முகம்கொடுக்கலாம். பல்வேறு அரசியல் கட்சிகளையும் அரசியல் கருத்துக்களையும் அரவணைத்துச் செல்வது என்பது இலகுவான விடயமல்ல. எனவே மைத்திபால சிறிசேன மிகவும் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் கூட்டணிகளை அரவணைத்துக்கொண்டு தனது பயணத்தைக் கொண்டு செல்லவேண்டியது அவசியமாகும். .

–ரொபட் அன்டனி–
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல