காற்பந்தாட்ட உலகின் சாம்ராஜ்யம். அதில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த மனிதர். என்னைப் பார், எனக்கு வயதானாலும் நான் சிங்கம் தான் என்றார். எனது அரசாங்கம் கறைபடிந்திருக்கிறது என்று எவரேனும் சொன்னால், அதனை சரியான திசையில் செலுத்தும் ஆற்றல் எனக்கு இருக்கிறது என்று அவர் வெற்றிப் பெருமிதத்துடன் சொன்னார்.
அதே சக்கரவர்த்தி நான்கு நாட்கள் கழித்துப் பேசினார். தான் அரியாசனத்தில் இருந்து இறங்குகிறேன் என்றார். மந்திரிகள் சபை விரைவில் கூடி, அடுத்த அரசரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று பணிவானதொரு கோரிக்கையை விடுத்தார். அடுத்த அரசர் தெரிவு செய்யப்படும் வரையில், காற்பந்தாட்ட சாம்ராஜ்யத்தை வழிநடத்தும் பொறுப்பை நிறைவேற்றப் போவதாக அவர் உறுதியளித்தார்.
செப் பிளெற்றரின் அறிவித்தல் அதிர்ச்சியைத் தந்ததெனில், அதற்குக் காரணம் இருந்தது. சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கு (பீபா) எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதனை மையப்படுத்தி அமெரிக்கத் தரப்பு முன்னெடுத்த அரசியல் காய் நகர்த்தல்களும் செப் பிளெற்றரின் மனோதிடத்தை சோதித்துக் கொண்டிருந்ததை பலரும் அறிந்திருந்தார்கள். தம்மை ஓரங்கட்டும் முயற்சிகளுக்கு அடிபணிந்து அவர் பதவி விலகி விடுவார் என்று அமெரிக்கா எதிர்பார்த்தபோதிலும், அவரது இராஜினாமா இத்தனை சீக்கிரமாக நிகழும் என்பதை எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
தலைமைப் பதவிக்குரிய வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் பீபா வின் அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில், பீபா மாநாட்டுக்காக சுவிட்ஸர்லாந்து சென்றிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள். செப் பிளெற்றரின் ஆட்சிகாலத்தில் பீபா வில் ஊழலும் மோசடிகளும் தலைவிரித்தாடியதாகக் கூறி, அதனை முற்றுமுழுதாக கறைபடிந்த அமைப்பாக சித்தரிப்பதற்கு அமெரிக்க சார்பு ஊடகங்கள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.
இந்தத் தீவிர பிரசாரம், பீபா வில் செப் பிளெற்றருக்குள்ள செல்வாக்கைக் குறைத்து விடவில்லை. அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்ற சமயம், செப் பிளெற்றர் 133 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக ஐரோப்பிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவுடன் களமிறங்கிய ஜோர்தான் இளவரசர் அலி பின் அல்-ஹூசைனுக்கு 73 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன.
தேர்தலில் வெற்றி பெற்ற சமயத்தில் செப் பிளெற்றரின் குரலில் தொனித்த பெருமிதம், இராஜினாமா பற்றி அறிவித்த சமயத்தில் முற்றுமுழுதாக மறைந்திருந்தது. பீபா வில் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் தம்மை அடுத்த தலைவராகத் தெரிவு செய்திருந்தாலும், காற்பந்தாட்ட உலகின் ஆணை தமக்கு இருப்பதாகக் கருதவில்லையென பிளெற்றர் குறிப்பிட்டார்.
சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தை ஊழல் அற்ற அமைப்பாக மாற்ற வேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில், பீபா அதிகாரிகளைக் களையெடுப்பதாக அமெரிக்கா கூறிக் கொள்கிறது. அடுத்த காற்பந்தாட்ட சுற்றுத்தொடரை நடத்தும் வாய்ப்பு ரஷ்யாவிற்கு கிடைத்ததில் எழுந்த காழ்ப்புணர்ச்சியாலும் 2022ஆம் ஆண்டுக்குரிய சுற்றுத்தொடரை நடத்தும் வாய்ப்பு தம்மிடம் இருந்து கட்டாருக்கு சென்றதால் தலைதூக்கிய பழிவாங்கும் உணர்ச்சியாலும், அமெரிக்கா செப் பிளெற்றரை ஓரங்கட்ட முனைகிறது என்பது வெளிப்படையாகத் தெரியும் உண்மையாகும்.
பீபா வைக் களையெடுப்பதில் அமெரிக்காவிற்கு உள்ள அதிகாரம் என்ன? அந்த நடைமுறை சர்வதேச ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்புடையதா? என்ற ரீதியில் பல கேள்விகள் எழுகின்றன. பீபா வைக் களையெடுப்பதன் மூலம், இதனை விட சிறப்பானதொரு அமைப்பை உருவாக்கி விட முடியுமா என்பதும் முக்கியமான கேள்வியாகும்.
முதலில், பீபாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எடுத்துக் கொள்வோம். இவை இலஞ்சம் தொடர்பானவை. உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் என்ற விடயத்தை எடுத்துக் கொள்வோம். இத்தகைய சுற்றுத்தொடரை ஏற்று நடத்த பல நாடுகள் போட்டி போடுவது வழக்கம். பீபா அதிகாரிகள் சில நாடுகளிடம் இலஞ்சம் வாங்கி சுற்றுத்தொடரை நடத்தும் வாய்ப்பை ஒப்படைத்தார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு.
இந்த விவகாரம் இலஞ்சம் சார்ந்ததாக இருக்கையில், பீபா அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் எவ்.பீ.ஐ. நிறுவனம் தாக்கல் செய்த எந்தவொரு குற்றச்சாட்டும் இலஞ்சம் தொடர்பான சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இல்லை என்பது கவனிக்க வேண்டிய விடயம். அமெரிக்காவின் இலஞ்ச ஒழிப்பு சட்டங்கள் மூலம் கறைபடிந்த அரச உத்தியோகத்தர்களை சட்டத்தின் முன் நிறுத்தலாமே ஒழிய, பீபா போன்ற சர்வதேச அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.
பீபாவைக் களையெடுக்கும் முயற்சியில் செப் பிளெற்றரை ஓரங்கட்டுவது அமெரிக்காவின் நோக்கம். அதற்காக அமெரிக்காவின் தரப்பில் முன்வைக்கப்படும் காரணம், பீபாவின் தலைமைப் பதவியை வகிப்பதற்கு அவர் அருகதை அற்றவர் என்பது தான். செப் பிளெற்றரின் ஆட்சி காலத்தில் பீபா கறைபடிந்ததாக மாறியிருந்ததாகக் கூறும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அவருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை.
செப் பிளெற்றரின் கீழ் பீபா கறைபடிந்ததாக மாறியது என்று அமெரிக்காவும், ஐரோப்பாவும் கூறுகின்றன. எனினும், அவரது ஆட்சி காலத்தில் தான் காற்பந்தாட்ட விளையாட்டில் ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கூடுதலான வாய்ப்புக்கள் கிடைத்தன என்பதை மறந்து விட முடியாது. செப் பிளெற்றர் வளர்முக நாடுகளுக்கு வாய்ப்பளித்து காற்பந்தாட்ட விளையாட்டை சர்வதேசமயப்படுத்திய விதம் பற்றி கடந்த வாரம் இதே பத்தியில் விரிவாக ஆராயந்தோம்.
இன்று செப் பிளற்றர் பற்றி மாத்திரமன்றி, அவரது முன்னோடியான ஜோவோ ஹெவ்லாங்கே என்ற பிரேசிலியர் பற்றியும் ஆராய வேண்டியிருக்கிறது. பீபாவின் தலைமைப் பதவி ஸ்ரான்லி ரூஸ் என்ற ஆங்கிலேயரின் வசம் இருந்த சமயம், ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு போதிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அந்நாடுகளின் அதிருப்தியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹெவ்லாங்கே, பீபா தலைமைத்துவ தேர்தலில் ரூஸ்சை தோற்கடித்தார். ஹெவ்லாங்கேயின் ஆட்சிகாலத்தில் அவருக்கு உறுதுணையாகத் திகழ்ந்த செப் பிளெற்றர், அவரைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு தொடக்கம் பீபாவை மறுசீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
1974ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளை ஏற்று நடத்துவதற்காக வி;ண்ணப்பித்த 16 நாடுகள் மத்தியில், ஆசிய மற்றும் ஆபிரிக்க காற்பந்தாட்ட அமைப்புக்களைச் சேர்ந்த மூன்று நாடுகள் மாத்திரமே இருந்தன. 2014ஆம் ஆண்டில், மொத்தமாக 32 நாடுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவற்றில் 13 நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க காற்பந்தாட்ட அமைப்புக்களை சேர்ந்தவை. செப் பிளெற்றரின் ஆட்சி காலத்திலே முதற்தடவையாக ஆபிரிக்க நாடொன்றில் உலகக் காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் இடம்பெற்றது.
தாம் கடமையில் இருந்த சமயத்தில் வளர்முக நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகளை பிளெற்றர் 70 சதவீதத்தால் அதிகரித்தார். பீபா வழங்கிய உதவிகள் காரணமாக பல நாடுகளில் தேசிய மட்டத்திலான மைதானங்கள் அமைக்கப்பட்டன.
வளர்முக நாடுகளில் காற்பந்தாட்ட விளையாட்டை விஸ்தரிக்கும் நடைமுறையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாவிட்டாலும், இதன் மூலம் பீபா நிறுவனம் இலாபமீட்டியதை மறுக்க முடியாது. முன்னைய காலத்தை விடவும் மிகவும் சிறப்பான முறையில் காற்பந்தாட்ட விளையாட்டு உலகம் முழுவதும் பரவியதை மறைக்கவும் முடியாது.
இதேவேளை சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரித்து, பீபாவை தூய்மையாக்கும் முயற்சிகள் காலத்தின் கட்டாயம் என்பதை எவரும் மறுக்க முடியாது. எனினும், ஊழலைத் தடுக்கும் முயற்சிகள் என்ற போர்வையில் மேற்குலகின் அராஜகத்தை நியாயப்படுத்திக் கொண்டு, காற்பந்தாட்ட விளையாட்டின் உலகளாவிய வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை
அதே சக்கரவர்த்தி நான்கு நாட்கள் கழித்துப் பேசினார். தான் அரியாசனத்தில் இருந்து இறங்குகிறேன் என்றார். மந்திரிகள் சபை விரைவில் கூடி, அடுத்த அரசரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று பணிவானதொரு கோரிக்கையை விடுத்தார். அடுத்த அரசர் தெரிவு செய்யப்படும் வரையில், காற்பந்தாட்ட சாம்ராஜ்யத்தை வழிநடத்தும் பொறுப்பை நிறைவேற்றப் போவதாக அவர் உறுதியளித்தார்.
செப் பிளெற்றரின் அறிவித்தல் அதிர்ச்சியைத் தந்ததெனில், அதற்குக் காரணம் இருந்தது. சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கு (பீபா) எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதனை மையப்படுத்தி அமெரிக்கத் தரப்பு முன்னெடுத்த அரசியல் காய் நகர்த்தல்களும் செப் பிளெற்றரின் மனோதிடத்தை சோதித்துக் கொண்டிருந்ததை பலரும் அறிந்திருந்தார்கள். தம்மை ஓரங்கட்டும் முயற்சிகளுக்கு அடிபணிந்து அவர் பதவி விலகி விடுவார் என்று அமெரிக்கா எதிர்பார்த்தபோதிலும், அவரது இராஜினாமா இத்தனை சீக்கிரமாக நிகழும் என்பதை எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
தலைமைப் பதவிக்குரிய வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் பீபா வின் அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில், பீபா மாநாட்டுக்காக சுவிட்ஸர்லாந்து சென்றிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள். செப் பிளெற்றரின் ஆட்சிகாலத்தில் பீபா வில் ஊழலும் மோசடிகளும் தலைவிரித்தாடியதாகக் கூறி, அதனை முற்றுமுழுதாக கறைபடிந்த அமைப்பாக சித்தரிப்பதற்கு அமெரிக்க சார்பு ஊடகங்கள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.
இந்தத் தீவிர பிரசாரம், பீபா வில் செப் பிளெற்றருக்குள்ள செல்வாக்கைக் குறைத்து விடவில்லை. அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்ற சமயம், செப் பிளெற்றர் 133 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக ஐரோப்பிய காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவுடன் களமிறங்கிய ஜோர்தான் இளவரசர் அலி பின் அல்-ஹூசைனுக்கு 73 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன.
தேர்தலில் வெற்றி பெற்ற சமயத்தில் செப் பிளெற்றரின் குரலில் தொனித்த பெருமிதம், இராஜினாமா பற்றி அறிவித்த சமயத்தில் முற்றுமுழுதாக மறைந்திருந்தது. பீபா வில் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் தம்மை அடுத்த தலைவராகத் தெரிவு செய்திருந்தாலும், காற்பந்தாட்ட உலகின் ஆணை தமக்கு இருப்பதாகக் கருதவில்லையென பிளெற்றர் குறிப்பிட்டார்.
சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தை ஊழல் அற்ற அமைப்பாக மாற்ற வேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில், பீபா அதிகாரிகளைக் களையெடுப்பதாக அமெரிக்கா கூறிக் கொள்கிறது. அடுத்த காற்பந்தாட்ட சுற்றுத்தொடரை நடத்தும் வாய்ப்பு ரஷ்யாவிற்கு கிடைத்ததில் எழுந்த காழ்ப்புணர்ச்சியாலும் 2022ஆம் ஆண்டுக்குரிய சுற்றுத்தொடரை நடத்தும் வாய்ப்பு தம்மிடம் இருந்து கட்டாருக்கு சென்றதால் தலைதூக்கிய பழிவாங்கும் உணர்ச்சியாலும், அமெரிக்கா செப் பிளெற்றரை ஓரங்கட்ட முனைகிறது என்பது வெளிப்படையாகத் தெரியும் உண்மையாகும்.
பீபா வைக் களையெடுப்பதில் அமெரிக்காவிற்கு உள்ள அதிகாரம் என்ன? அந்த நடைமுறை சர்வதேச ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்புடையதா? என்ற ரீதியில் பல கேள்விகள் எழுகின்றன. பீபா வைக் களையெடுப்பதன் மூலம், இதனை விட சிறப்பானதொரு அமைப்பை உருவாக்கி விட முடியுமா என்பதும் முக்கியமான கேள்வியாகும்.
முதலில், பீபாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எடுத்துக் கொள்வோம். இவை இலஞ்சம் தொடர்பானவை. உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் என்ற விடயத்தை எடுத்துக் கொள்வோம். இத்தகைய சுற்றுத்தொடரை ஏற்று நடத்த பல நாடுகள் போட்டி போடுவது வழக்கம். பீபா அதிகாரிகள் சில நாடுகளிடம் இலஞ்சம் வாங்கி சுற்றுத்தொடரை நடத்தும் வாய்ப்பை ஒப்படைத்தார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு.
இந்த விவகாரம் இலஞ்சம் சார்ந்ததாக இருக்கையில், பீபா அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் எவ்.பீ.ஐ. நிறுவனம் தாக்கல் செய்த எந்தவொரு குற்றச்சாட்டும் இலஞ்சம் தொடர்பான சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இல்லை என்பது கவனிக்க வேண்டிய விடயம். அமெரிக்காவின் இலஞ்ச ஒழிப்பு சட்டங்கள் மூலம் கறைபடிந்த அரச உத்தியோகத்தர்களை சட்டத்தின் முன் நிறுத்தலாமே ஒழிய, பீபா போன்ற சர்வதேச அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.
பீபாவைக் களையெடுக்கும் முயற்சியில் செப் பிளெற்றரை ஓரங்கட்டுவது அமெரிக்காவின் நோக்கம். அதற்காக அமெரிக்காவின் தரப்பில் முன்வைக்கப்படும் காரணம், பீபாவின் தலைமைப் பதவியை வகிப்பதற்கு அவர் அருகதை அற்றவர் என்பது தான். செப் பிளெற்றரின் ஆட்சி காலத்தில் பீபா கறைபடிந்ததாக மாறியிருந்ததாகக் கூறும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அவருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை.
செப் பிளெற்றரின் கீழ் பீபா கறைபடிந்ததாக மாறியது என்று அமெரிக்காவும், ஐரோப்பாவும் கூறுகின்றன. எனினும், அவரது ஆட்சி காலத்தில் தான் காற்பந்தாட்ட விளையாட்டில் ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கூடுதலான வாய்ப்புக்கள் கிடைத்தன என்பதை மறந்து விட முடியாது. செப் பிளெற்றர் வளர்முக நாடுகளுக்கு வாய்ப்பளித்து காற்பந்தாட்ட விளையாட்டை சர்வதேசமயப்படுத்திய விதம் பற்றி கடந்த வாரம் இதே பத்தியில் விரிவாக ஆராயந்தோம்.
இன்று செப் பிளற்றர் பற்றி மாத்திரமன்றி, அவரது முன்னோடியான ஜோவோ ஹெவ்லாங்கே என்ற பிரேசிலியர் பற்றியும் ஆராய வேண்டியிருக்கிறது. பீபாவின் தலைமைப் பதவி ஸ்ரான்லி ரூஸ் என்ற ஆங்கிலேயரின் வசம் இருந்த சமயம், ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு போதிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அந்நாடுகளின் அதிருப்தியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹெவ்லாங்கே, பீபா தலைமைத்துவ தேர்தலில் ரூஸ்சை தோற்கடித்தார். ஹெவ்லாங்கேயின் ஆட்சிகாலத்தில் அவருக்கு உறுதுணையாகத் திகழ்ந்த செப் பிளெற்றர், அவரைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு தொடக்கம் பீபாவை மறுசீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
1974ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளை ஏற்று நடத்துவதற்காக வி;ண்ணப்பித்த 16 நாடுகள் மத்தியில், ஆசிய மற்றும் ஆபிரிக்க காற்பந்தாட்ட அமைப்புக்களைச் சேர்ந்த மூன்று நாடுகள் மாத்திரமே இருந்தன. 2014ஆம் ஆண்டில், மொத்தமாக 32 நாடுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவற்றில் 13 நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க காற்பந்தாட்ட அமைப்புக்களை சேர்ந்தவை. செப் பிளெற்றரின் ஆட்சி காலத்திலே முதற்தடவையாக ஆபிரிக்க நாடொன்றில் உலகக் காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் இடம்பெற்றது.
தாம் கடமையில் இருந்த சமயத்தில் வளர்முக நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகளை பிளெற்றர் 70 சதவீதத்தால் அதிகரித்தார். பீபா வழங்கிய உதவிகள் காரணமாக பல நாடுகளில் தேசிய மட்டத்திலான மைதானங்கள் அமைக்கப்பட்டன.
வளர்முக நாடுகளில் காற்பந்தாட்ட விளையாட்டை விஸ்தரிக்கும் நடைமுறையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாவிட்டாலும், இதன் மூலம் பீபா நிறுவனம் இலாபமீட்டியதை மறுக்க முடியாது. முன்னைய காலத்தை விடவும் மிகவும் சிறப்பான முறையில் காற்பந்தாட்ட விளையாட்டு உலகம் முழுவதும் பரவியதை மறைக்கவும் முடியாது.
இதேவேளை சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் மோசடிகளை விசாரித்து, பீபாவை தூய்மையாக்கும் முயற்சிகள் காலத்தின் கட்டாயம் என்பதை எவரும் மறுக்க முடியாது. எனினும், ஊழலைத் தடுக்கும் முயற்சிகள் என்ற போர்வையில் மேற்குலகின் அராஜகத்தை நியாயப்படுத்திக் கொண்டு, காற்பந்தாட்ட விளையாட்டின் உலகளாவிய வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக