சாதிய - வகுப்புவாத பழக்கவழக்கங்களை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற வங்காள இந்துக்களின் வேட்கையும், அதனை சாதிப்பதற்காகத் துவக்கப்பட்ட இயக்கமும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சி இயக்கத்துக்கு இணையான இந்திய நிகழ்வுகளாகும். இந்த இயக்கத்துக்குத் தலைமையேற்று நடத்தியவர்களில் புகழ்பெற்றவரான ராஜா ராம் மோகன்ராய் ஒரு சமூக சீர்திருத்தக்காரர் மட்டுமல்ல; முதலாளித்துவ தேசிய சித்தாந்தத்தின் மிகச்சிறந்த பிரதி நிதியுமாவார்.
எனினும் இந்தியா மற்றும் உலகத்தின் அரசியல் உருமாற்றத்தை விட வேறு ஒன்றுக்கு ராம் மோகன்ராய் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். சாதி அடிப்படையில் அமைந்த இந்துக்களின் பழக்க வழக்கங்களும் அதனால் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்கள் தொடர்பான பிரச்சனைகளுமே உடனடியான முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற உறுதியான கருத்துக் கொண்டவராக ராம்மோகன் இருந்து வந்தார். இதன் பொருள் இந்திய நாட்டின் விடுதலை குறைவான முக்கியத்துவம் கொண்ட ஒன்று என்பதல்ல. ஆனால் அதனை எதிர்கொள்வதற்கு, இந்திய சமுதாயத்தை அதன் சாதி அடிப்படையிலான பழக்கவழக்கங்கள் என்ற விலங்குகளிலிருந்து விடுவிக்க வேண்டியது இன்றியமையாதது என்று அவர் கருதினார். இந்தக் குறிக்கோளை அடைவதற்காக எடுக்கப்பட வேண்டிய தேசிய முயற்சிகளில் பிரிட்டிஷாரின் உதவியையும் ஒத்துழைப்பையும் அவர் எதிர்நோக்கினார்.
ராம்மோகனுக்கும் பூலேக்குமிடையே இருந்த வேறுபாடுகள், அவர்கள் துவக்கிய இயக்கங்களின் தன்மையிலும் பிரதிபலித்தன. ராம்மோகன் துவக்கிய பிரம்ம சமாஜம் சாதி இந்துக்கள் மத்தியிலேயே பெரிய அளவில் செயல்பட்டு வந்தது. அதனால் அந்த இயக்கம் சாதிய அமைப்புக்கு எதிராகப் பொதுவாகச் செயல்படும் இயக்கமாகவும், ஆண் -பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் அமைப்பாகவும் இருந்து வந்தது. ஆனால் பூலே துவக்கிய இயக்கம் தாழ்ந்த சாதியினர் மத்தியிலும் அதிலும் குறிப்பாகத் தீண்டத்தகாதவர் மத்தியிலும் ஆழமாக வேர் விட்டிருந்தது. இதன் காரணமாக பிராமணிய எதிர்ப்பே அதன் சித்தாந்தத்தின் உட்கருவாக இருந்தது. அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிராமணர்கள் தங்களின் புத்தகங்களின் உதவியுடன் சாமானிய மக்களைக் கீழான பிறவிகளாக அறிவித்து அவர் களைச் சுரண்டி வந்தனர். அவர்களின் புனிதமான அதிகார அமைப்பின் அடிமைத்தனத்திலிருந்து சாமானிய மக்களை விடுவிப்பதையும் அவர்களுடைய உரிமைகளை உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்குக் கற்றுத் தருவதையும் நோக்கமாகக் கொண்டு சத்ய ஷோதக் சமாஜம் (உண்மை நாடுவோர் சங்கம்) 1873 செப்டம்பர் 24ந் தேதியன்று துவக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ஒரு உறுப்பினரான யார்க் கோமகனைச் சந்திக்கச் சென்றபோது இடுப்பில் கட்டப்படும் அரைத் துணியை மட்டும் பூலே அணிந்து கொண்டிருந்தார். சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையை உலகறியச் செய்வதற்காகவே அவர் இவ்வாறு சென்றார். வறுமை நிலையிலிருந்த இந்திய விவசாயியின் உண்மையான பிரதிநிதியாக அவர் இவ்வாறு சென்றது, அவர் கொண்டிருந்த சமூகப்பார்வைக்குப் போதுமான உதாரணமாக இருந்தது.
மனம் உடைந்தது ஏன்?
1947 ஆகஸ்டு 15ம் தேதியன்று தில்லி செங்கோட்டையிலிருந்து யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு அதன் இடத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றுக் கொண்டார். தங்களுடைய நீண்டகாலக் கனவு ஈடேறி விட்டதாகக் கோடிக்கணக்கான மக்கள் கருதினர். நாட்டு விடுதலையை மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் வரவேற்றனர்.
விடுதலை நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் மகாத்மா காந்தி விலகியிருந்தார். அப்போது வகுப்புக் கலவரங்களின் மையமாக இருந்த கல்கத்தாவில் அமைதியை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். அவர் பங்கேற்காத ஒரு விடுதலை நாள் கொண்டாட்டத்தை இந்தியாவில் உள்ள எவராலும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மனநிலையில் அவர் இல்லை. இந்திய மக்களுக்கு விடுதலை நாள் செய்தியைக் கேட்டு அவரை அணுகிய செய்தியாளர் ஒருவரிடம், எனது இதயம் வறண்டு போய்விட்டது என்று அவர் பதிலளித்தார். நாட்டின் இரண்டு பிரிவுகளிலும் ஆகஸ்டு 15ம் தேதிக்கு முன்னர் நடைபெற்ற படுகொலைகள் காந்திக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய பின்னணியில் கிடைத்த விடுதலை உண்மையான விடுதலையல்ல என்ற உறுதியான எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலைக்கு இட்டுச் சென்ற மிருகத்தனமான உணர்வுகளிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் மக்களை விடுவிப்பதற்குத் தனது எஞ்சிய ஆயுட்காலத்தை அர்ப்பணிப்பதற்கு அவர் தீர்மானித்திருந்தார். உண்ணா நோன்பு, பிரார்த்தனை, கீதையின் வாசகங்களைப் பாராயணம் செய்தல் போன்றவற்றின் மூலம் அவர் விடுதலை நாளைக் கொண்டாடினார். காங்கிரஸ் தலைவர் கிருபளானி பின்வருமாறு கூறியிருந்தார்: ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருந்தனர். தப்பிப் பிழைத்த மக்களின் மறு வாழ்வுக்காகப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட முடியவில்லை. 1947 ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதியன்று நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் - இது இந்தியாவுக்கு சோகத்தையும் அழிவையும் ஏற்படுத்திய நாள் என்று கூறியிருந்தேன்.
ஆனால் வகுப்புக் கலவரங்களும் அவற்றால் ஏற்பட்ட பேரழிவுகள் மட்டுமே காந்தி மற்றும் கிருபளானி போன்ற தலைவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியதாகக் கூற முடியாது. கிருபளானியின் சொற்களில் கூறினால், ஜவஹர்லால் நேருவுக்கும் சர்தார் பட்டேலுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் வளர்ந்து வந்தன. சர்தார் மற்றும் மவுலானா ஆசாதினால் ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போக முடியவில்லை. இந்த வேதனைகளை அதிகரிக்கும் விதத்தில் உணவு நெருக்கடியும் நாட்டைத் துன்புறுத்தி வந்தது. யுத்தம் முடிவடைந்த பிறகும் நீடித்த உணவு விநியோகக் கட்டுப்பாடு திருப்திகரமான முறையில் இயங்கவில்லை. மேலும் காங்கிரஸ்காரர்களின் மத்தியில் பதவிகளைப் பெறுவதற்கான போட்டியும் நிர்வாகத்தில் ஊழலும் தாண்டவமாடி வந்ததைக் குறிப்பிடும் செய்திகளும் அக்காலத்தில் வந்து கொண்டிருந்தன. காந்திஜியின் அறிவுரைகளை காங்கிரஸ் தலைவர்கள் மதித்து நடக்கவில்லை. நாட்டுப்பிரிவினையானது நாட்டுக்கு அமைதி யைக் கொண்டு வரவில்லை.
கப்பற்படை எழுச்சி
ஐ.என்.ஏ வீரர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிராக மக்கள் நடத்திய எழுச்சிமிக்க போராட்டங்களினால் பிரிட்டிஷ் ராணு வப்படையின் வீரர்களும், இளம் அதிகாரிகளும் எத்தகைய தாக்கத்துக்கும் முழுமையாக ஆட்படவில்லை என்று கூற முடியாது. அதன் தாக்கத்தின் உயரிய வடிவமாக 1946ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய கலகம் அமைந்திருந்தது. பிரிட்டி ஷார் கடைப்பிடித்து வந்த இனப்பாகுப்பாட்டுக் கொள்கைக்கு எதிராக இந்திய விமானப் படைவீரர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் இனப்பாகுபாட்டுக்கு எதிரான உணர்வு இதே போன்று இருந்து வந்தது. ஆனால் அது கடற்படை வீரர் கள் நடத்திய கலகத்திற்கு ஈடான வடிவத்தை எட்டவில்லை. கடற்படை வீரர்களின் கலகமே யுத்தத்திற்குப் பிந்தைய கால ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியில் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்முறையைப் பற்றி ஒரு விரிவான ஆழமான ஆய்வு எதுவும் நடத்துவதற்கு எத்தகைய குறிப்பிடத்தக்க முயற்சியும் இதுவரை செய் யப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதே. 1857 ம் ஆண்டின் மக்கள் எழுச்சியைப் பற்றிய வரலாற்று உண்மைகளை சேகரித்து வெளியிடுவதற்குச் செய்யப்பட்டதைப் போன்ற முயற்சிகள் கடற்படை வீரர்களின் கலகம் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்து இதுவரை செய்யப்படவில்லை.
டிசம்பர் 17ம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட கப்பற்படை தினத்தன்று ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு கவனத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. அதனுடன்தான் தல்வார் கப்பல் நிகழ்வுகள் தொடங்கியிருந்தன. வெள்ளையனே வெளியேறு, ஏகாதிபத்தியம் ஒழிக போன்ற முழக்கங்கள் தல்வார் கப்பலில் பொறிக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் அந்த முழக்க வாசகங்களை அழிப்பதற்கு எற்பாடு செய்தனர் என்றபோதிலும் அதன் பின்னால் இருந்து இயக்கிய ஒரு முகப்படுத்தப்பட்ட சக்தியைக் கண்டு பிடித்து ஒழித்துக் கட்டுவதற்குத் தவறிவிட்டனர். அந்த சக்தி படிப்படியாக முன்னேறி இறுதியில் பம்பாயில் நிறுத்தப்பட்ட அனைத்துக் கடற்படை கப்பல்களிலும் பணியாற்றி வந்த 20000 கடற்படை மாலுமிகளின் கலக மாக முடிவடைந்தது. துறைமுக நகரங்களான விசாகப்பட்டினம், கல் கத்தா மற்றும் கராச்சிக்கும் கலகம் விரைவில் பரவியது. பம்பாய் நகரில் கலகக்காரர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அர்த்தாலில் பங்கேற்றனர். இதனையடுத்து பிப்ரவரி 22 ம் தேதியன்று பம்பாய் நகரத் தெருக்களில் தொழிலாளர் களுக்கும், காவல்துறை மற்றும் ராணுவப்படை வீரர்களுக்குமிடையே நடைபெற்ற மோதல்கள் அனைவராலும் அறியப்பட்டவையே. யுத்தத் திற்குப் பிந்தைய காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய வடிவிலான புரட்சி கர எழுச்சியாக இது இருந்தது.
புத்துயிர்ப்பு - துன்பவியல்
இந்திய தேசிய காங்கிரஸ் உருவானதன் மூலம் முதலாளித்துவ தேசியம் முழுமையான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஆனால் இந்து சமய புத்துயிர்ப்பு வேட்கை அதன் உள்ளார்ந்த பலவீனமாக இருந்தது என்று குறிப்பிடலாம். படித்த மேல்தட்டுப் பிரிவினர் என்ற குறுகிய வட்டத்துக்கு அப்பாலும் இந்த இயக்கம் பரவவேண்டுமானால் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான இந்துக்களின் மத உணர்வுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்த மொழியிலும் முறையிலும் பிரச்சார இயக்கங்களை நடத்த வேண்டியிருந்தது. அந்த நோக்கத்துக்கேற்ற அடையாளங்களையும் வீரகாவியங்களையும் உருவாக்க வேண்டியிருந்தது. அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை உசுப்பிவிடும் கிளர்ச்சி நட வடிக்கைகளை ஒருபுறம் நடத்த வேண்டியிருந்தது. இதற்கு உதாரணமாகத் திலகரது முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட விநாயகர்சதுர்த்தி, சிவாஜி உற்சவம் போன்றவைகளைக் குறிப்பிடலாம். மறுபுறத்தில் மக்களின் இதர பிரிவினரான முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கைகளையும் அரங்கேற்ற வேண்டியிருந்தது.
இந்த நாணயத்துக்கு மற்றொரு பக்கமும் உண்டு. தேசிய உணர்வின் பகுதியாக இந்து புத்துயிர்ப்பு இயக்கம் ஒன்று நடத்தப்படும்போது அதற்கு எதிரான இஸ்லாமிய புத்துயிர்ப்பு இயக்கம் உருவாவதும் இயற்கைதானே. இந்த இரண்டு புத்துயிர்ப்பு- இயக்கங்களும் மோதும் போது இந்து சமூகத்தின் மேல் சாதியினருக்கும் கீழ்சாதியினருக்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படும் அல்லவா? அப்போது இந்து சமூகத்தின் கீழ்த்தட்டு சாதியினரும் மதச் சிறுபான்மையினரான சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட்டு தங்களின் தனித்தன்மைக்கேற்ற புத்துயிர்ப்பு இயக்கங்களை ஏற்படுத்துவார்கள் அல்லவா? தேசிய இயக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கங்கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், மக்களின் பல்வேறு பிரிவினருக்கிடையே காணப்படும் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் முயல்வார்கள் என்பதும் இயற்கையானதே.
இதுதான் உண்மையில் நிகழ்ந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட துன்பவியல் நாடகத்தின் இறுதிக் காட்சியாக 1947 ஆகஸ்டு 15ந் தேதி அமைந்தது என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை.
இரண்டு அணுகுமுறை
இடதுசாரி காங்கிரசார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளைக் கொண்டு இந்தியாவில் உருவாகி வந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் ஒரு அமைப்பு என்ற முறையில் இந்திய தேசிய காங்கிரசுக்கு உள்ள பங்கு அற்பமானது அல்ல. ஆனால் அந்த முன்னணியில் காங்கிரசின் துல்லியமான இடத்தை மதிப்பீடு செய்வதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் இரண்டு தெளிவான வேறுபட்ட அணுகுமுறைகள் காணப்பட்டன. இதில் ஒரு அணுகுமுறையின் மிக முக்கியப் பிரதிநிதியாக இருந்த அமைப்பு கம்யூனிஸ்டுக் கட்சியாகும். மற்றொரு அணுகுமுறையை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி கொண்டிருந்தது.
மீரட்டும் - லாகூரும்
புரட்சிக்காரர்களின் பொதுவான கண்ணோட்டத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான முதல் அடையாளமாக கம்யூனிஸ்டு இயக்கத்தின் வளர்ச்சி இருந்தது. தொழிலாளர்-விவசாயிகள் கட்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு மற்றும் கம்யூனிஸ்டு அல்லாத செயல் வீரர்கள் பிரச்சாரம் செய்து வந்த கருத்துகள் இப்பிரிவினர் மத்தியில் பரவ ஆரம்பித்தன. பஞ்சாபில் பகத்சிங்கின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அமைப்பின் தோற்றம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டதற்கான தெளிவான ஆதாரமாகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் பரவியது. தூக்கிலேற்றப்படுவதற்கு முன்னர் சிறையிலிருந்து பகத்சிங் எழுதிய கடிதம் ஒன்றில், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களை அணிதிரட்டுவதன் மூலம்தான் விடுதலைக்கான உண்மையான போராட்டத்தை நடத்த முடியும். வெடிகுண்டுகள் இந்த நோக்கத்துக்குப் பயன்படாது என்பது எனது தீர்மானமான கருத்தாகும். இது இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அமைப்பின் வரலாற்றின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. பாடுபடும் மக்களைத் திரட்டுவதே நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.
1929 ஏப்ரல் 8ம் தேதியன்று எதிர்ப்புகளைப் புறந்தள்ளி விட்டுத் தொழில் தகராறு சட்டம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. அன்றுதான் சட்டமன்ற அரங்குக்குள் வரலாற்றுப் புகழ்மிக்க குண்டுவீச்சு நடைபெற்றது. குண்டுகளை வீசிய பகத்சிங்கும் தத்தும் தப்பியோடுவதற்கு முயலவில்லை. தாங்கள் கொண்டு வந்த பிரசுரங்களைச் சட்டமன்ற அரங்கத்துக்குள் வீசிவிட்டுப் புரட்சி ஓங்குக என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர். கைது செய்யப்படுவதற்குத் தயாராக உறுதியாக நின்றனர்.
இந்நூலாசிரியர் உள்ளிட்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நெஞ்சங்களையும் இந்த நிகழ்வு கவர்ந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். வெடிகுண்டு அரசியலிலிருந்து வெகு மக்களின் போராட்ட அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் அரசியல் அணுகு முறையில் காணப்பட்ட முரண்பாடுகளின் அடையாளமாகவும் இது இருந்தது. அகிம்சா வழியில் நம்பிக்கையற்ற புரட்சிக்காரர்களைப் போல அவர்கள் வெடிகுண்டுகளை வீசினர். அதே நேரத்தில் முழக்கங்களை எழுப்புவது; தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என்பதை அறிந்த போதிலும் தப்பியோடாமல் இருந்தது; கைது செய்யப்பட அனுமதிப்பது ஆகியவை காந்திய அறவழிப் போராட்டக்காரர்களின் அணுகுமுறையைப் போல இருந்தது. வெகுமக்கள் போராட்டங்களை வலியுறுத்திப் பிரசுரங்களை விநியோகித்தது கம்யூனிஸ்டுகளின் செயல்களைப் போல இருந்தது. ஆக இந்த அனைத்து வடிவங்களும் ஒரு நடவடிக்கையில் இணைந்திருந்ததானது இந்தியாவின் எதிர்காலப் புரட்சி அரசியல் எவ்வாறு இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு முன்னோடியாக இருந்தது.
இதனையடுத்து லாகூர் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப் பட்டிருந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதே சமயத்தில் மீரட் சதி வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடை பெற்று வந்தது.
மீரட் சதிவழக்கின் பின்னணி பின்வரும் வகையில் அமைந்திருந்தது. 1920 களின் பிற்பகுதியில் பம்பாய், வங்காளம், உத்தரப்பிரதேசம் போன்ற மாகாணங்களில் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டிருந்தன. இவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் பின்னர் பரவின. தொழிலாளர்-விவசாயிகள் கட்சியின் தேசிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான அகில இந்திய மாநாடு 1928 டிசம்பரில் மீரட்டில் நடத்தப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பல்வேறு மாகாணங்களில் செயல்பட்டு வந்த இக்கட்சிகளுக்கான குறைந்தபட்ச பொதுத்திட்டம் ஒன்று இம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் டொமினியன் அந்தஸ்தைவிடக் கீழான ஒரு திட்டத்துடன் திருப்தியடைந்திருந்த மோதிலால் நேரு குழு அறிக்கைக்கு மாநாடு கண்டனம் தெரிவித்தது. முழுச் சுதந்திரக் கோரிக்கைக்காக நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதை பலமாக வலியுறுத்தும் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட தொழிலாளர்-விவசாயிகள் கட்சியின் 30க்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் மீரட் சதி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் புகழ்பெற்ற கம்யூனிஸ்டு தலைவர்களான பி.சி. ஜோஷி, டாக்டர் ஜி. அதிகாரி, எஸ்.ஏ. டாங்கே, முசாஃபர் அகமது மற்றும் எஸ்.வி. காட்டே ஆகியோர் அடங்கியிருந்தனர். இவர்களைத் தவிர பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம், மற்றும் சோஷலிச கம்யூனிச இயக்கங்களைச் சார்ந்த மூன்று ஆங்கி லேயர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இருவரான பிலிப் ஸ்பிராட்டும், லெஸ்டர் ஹட்சின்சனும் பின்னர் அரசியலிலிருந்து விலகிவிட்டனர். பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான பென் பிராட்லி குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது ஆங்கிலேயர் ஆவார். இவர் தமது இறுதி நாட்கள் வரை ஓய்வின்றி உழைத்தார். இந்தியா தொடர்பான பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தினார்.
கம்யூனிசத்தையும் சோவியத் யூனியனையும் அம்பலப்படுத்துவதற்காக சதி வழக்கை அரசாங்கம் பயன்படுத்தியது. அதேசமயம் வரலாற்றுப் புகழ்மிக்க கொலோன் வழக்கின்போது கார்ல் மார்க்ஸ் ஏற்படுத்திய மரபை இந்திய கம்யூனிஸ்டுகள் பின்பற்றினர். நிகழ்கால சமூக மற்றும் அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்துவதற்கும் ஒரு சமூகப்புரட்சி தவிர்க்க முடியாதது என்பதை நிரூபிக்கவுமான ஒரு மேடையாக அந்த வழக்கை அவர்கள் பயன்படுத்தினர்.
மீரட் சதிவழக்கும் லாகூர் சதிவழக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தன என்ற உண்மை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பான உண்மைகளும் வாதங்களும் செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்தன. திரளான மக்கள் பங்கேற்ற புரட்சிகரப் பாதையா அல்லது தனிநபர் சாகசங்களின் அடிப்படையில் அமைந்த வெடிகுண்டு அரசியல் பாதையா - இவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்வதற்கு நாட்டிலுள்ள கோடிக்கணக் கான இளைஞர்களுக்கு இந்தச் செய்தி அறிக்கைகள் உதவி செய்தன.
- தீக்கதிர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக