சனி, 4 செப்டம்பர், 2010

மங்கையர் மத்தியில் சேலையின் மதிப்பு

பெண்களின் அழகை நல்ல முறையில் வெளிக்காட்டும் ஆடைகளில் சேலை முதலிடம் பிடிக்கிறது. அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் சேலை தருகிறது. பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். இந்தியாவில் மற்றும் இலங்கையில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சேலையின் அழகு பெண்ணின் அழகுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும் அவளின் அழகின் அம்சங்களைக் கலந்தே நெசவாளி சேலை நெய்கிறான் என்றும் கூறுகிறது.

சேலைகள் வாங்கித் தரும்படி தொந்தரவு செய்யும் மனைவியரை அல்லது அளவு கணக்கின்றிச் சேலைகளை வாங்கி அடுக்கும் மனைவியரைக் கண்ட கணவன்மார் 'சேலையை விரும்பாத பெண்ணும் இந்தத் தரணியில் உண்டா? ' என்று வியப்படைவது அல்லது சலிப்படைவது வழக்கம். பெண்களைக் கேட்டால் 'சேலையை விரும்பாத பெண்ணும் ஒரு பெண்ணா? ' என்பார்கள். கருத்துக்கள் எப்படி மாறுபடினும் சேலை என்பது ஓர் அழகான ஆடை என்பதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. அதன் அழகிய வண்ணமும் வேலைப்பாடும் இன வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவை. உலகில் சேலையைப் போல நீண்ட வரலாறு கொண்ட ஆடை எதுவும் இல்லை.

சேலை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும் இலங்கைப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள் மாறுபட்ட போதும் இலங்கைத் தமிழ், சிங்களப் பெண்களும் பொதுவாகச் சேலையே அணிந்து வருகின்றனர். பணக்காரராயினும், ஏழையாயினும் சேலை என்பது அணிபவர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவத்தை அளிக்கிறது. இந்திய இலங்கைப் பெண்கள் உலகம் பூராவும் பரந்து வாழ்வதால் இன்று உலகம் முழுவதும் சேலை அணியும் பெண்களைக் காண முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பெண்கள் தினமும் சேலையையே வீட்டிலும் வெளியிலும் அணிந்து வந்தனர். இந்தியாவிலும் அப்படியே. கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையிலும் ஏன் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திருமணத்திற்கு பெண்கள் சேலை அணிவதே பொது நடைமுறையாக உள்ளது. வெளிநாடுகளில் வளர்ந்து வரும் இளம் இலங்கை, இந்தியப் பெண்களைக் கவரும் வகையில் மிகுந்த அழகு வாய்ந்ததும், பாரம் குறைந்து அணிவதற்கு மென்மையானதுமான சேலை வகைகள் இந்தியாவில் நெய்யப்பட்டு வருகின்றன. இதனால் நவீன மேற்கு நாட்டு ஆடைகளுடன் போட்டியிடும் அளவிற்கு சேலையின் உருவமைப்பும் தரமும் உயர்ந்து வருவதைக் காணலாம்.

சேலை மேல் உள்ள விருப்பத்தால் பல மேலை நாட்டவர் சேலை அணிந்து பார்க்க விரும்பியுள்ளனர். அத்துடன் தமிழரை மணம் முடித்த ஆங்கில அல்லது பிற இனப் பெண்கள் திருமணத்திற்குச் சேலையே அணிந்துள்ளனர். சேலை ஆத்மிக உணர்வைப் பிரதிபலிக்கும் ஓர் ஆடையாகவும் கருதப்படுவதால் தியான நிலையத்தில் பெண்கள் சேலை அணிந்தே தியானம் செய்ய வேண்டும் என்பது மிகவும் கட்டுப்படான விதிமுறையாக உள்ளது.

பெண்கள் அணியும் சேலைகளின் நிறம் மரபினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள், பச்சை, சிவப்பு நிறங்கள் மங்களகரமானவை என்றும், அவை விசேட தினங்களில் அணிவதற்குரியன என்றும், சிகப்பு நிறம் காதலைத் தூண்டவல்லது என்றும் கருதப்படுகிறது. கர்ப்பம் தொடர்பான சில கிரியைகளுக்கும் சிவப்பு நிறச் சேலையே தெரிவு செய்யப்படுகிறது. நீலம் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் வாழ்வளிக்கும் சக்தியைத் தூண்ட வல்லது என்றும் கருதப்படுகிறது. வெள்ளை நிறச் சேலை வாழ்வைத் துறந்தவர்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்குமென்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.

சேலை காலத்துக்கு ஏற்பவும், இளம் வயதினரைக் கவரும் வகையிலும் தன்னைக் காலத்திற்குக் காலம் புதுப்பித்து வந்துள்ளது. சித்திரங்களற்ற சேலைகளுக்கு, முற்றாகப் பூ வேலை செய்யப்பட்ட சேலைகளை இணைப்பது முதல் முந்தானைப் பகுதியை, கரையை புதிய வகையில் அமைப்பது என்று பல்வேறு வகைகளில் சேலையை மாற்றியமைத்து வருகின்றனர். சேலை அணிய விரும்பும் இளம் பெண்களiன் வசதிக்காக அதிக பிரச்சினை தரும் மடிப்புப் (pleats) பகுதியில் இணைப்பு (zip) இணைக்கப்பட்டுள்ளது என்றால் மாற்றம் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்று புரிந்து கொள்ளலாம். மேற்கத்தைய நாடுகளில் வளர்ந்து வரும் இளம் தமிழ்ப்பெண்களுக்கு இவ்வாறு புதிய பல அம்சங்கள் இணைக்கப்பட்ட போதும் இந்தியச் சேலை நெசவாளர்கள் மரபு ரீதியான விஷயங்களைச் சேலைகளில் பிரதிபலிப்பதற்குக் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். சேலையில் முந்தானை அல்லது கரையில் இராமாயண மகாபாரதக் காட்சிகள் நெய்யப்படுகின்றன. அது மட்டுமல்ல வங்காளத்தில் உள்ள கிராமியக் காட்சிகள், தாஜ்மகாலில் உள்ள சில முக்கிய சுலோகங்கள், என பல மரபு பூர்வமான விஷயங்கள் சேலைகளiல் இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா என்றதும் அங்கு நெய்யப்படும் அழகான பருத்தி, பட்டுச் சேலைகளே பலருக்கு நினைவு வரும். இந்திய மாநிலங்கள் பலவற்றில் சேலை நெய்தலே முக்கிய தொழிலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான சேலைக்குப் பெயர் போனதாக உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் சேலை வகைகளுக்கு அளவு கிடையாது. ஆயினும் எல்லமே அழகான சேலைகள் என்று சொல்லமுடியாது. அதிகம் விற்பனையாகும் சேலை வகைகள் சிலவே.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரச்சேலைகள் உலக ரீதியில் பிரசித்தி பெற்றவை. இது மிக அழகும் சிறப்பும் வாய்ந்த பருத்தி, பட்டுச் சேலைகளுக்குப் பெயர் போனது. கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அங்கு பட்டுச் சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. இறுக்கமாகச் சுற்றப்பட்ட மூன்று நூல்களைக் கொண்டு நெய்யப்படும் பாரமான பட்டுச் சேலைகளுக்கு காஞ்சிபுரம் பேர் போனது. பட்டுச் சேலை நெய்வது அவர்களது முக்கிய பணியான போதும் பருத்தி, பட்டு-பொலியஸ்ரர் சேலைகளும் அங்கு நெய்யப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் தற்போது மிகப் பிரபலியமாக விழங்கும் நெசவாளர்கள் 1970 களில் கலாஷேத்திரத்தின் பண்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள். பயிற்சியின் பின் துணியின் நிறையிலும் பாணியிலும் காத்திரமானவையும் அகலமான கரைகள் கொண்டவையுமான சேலைகளை நெய்தனர். மரபார்ந்த வடிவங்களான மாங்காய், மயில், டயமண்ட வடிவம், தாமரை, குடம், பூங்கொடி, பூ, கிளி, கோழி ஆகியவற்றுடன் பல பண்டைய கதைகளின் காட்சிகள் என்பன கரைகளில் நெய்யப்படுகின்றன. பருத்திச் சேலைகளும் நூலால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தற்போது கணணி மூலம் அமைக்கப்பட்ட சித்திரங்கள் கொண்ட கரைகள் காஞ்சிபுரம் சேலைகளுக்கு இணைக்கப்படுகின்றன. நெய்யும் முறைகளும் துணியும் சந்தையின் தேவைக்கேற்ப மாறிய போதும் இன்றும் காஞ்சிபுரம் சேலைகள் மரபார்ந்த பல விஷயங்களைக் கொண்டுள்ளன. அவை பாரமுள்ளனவாகவும் மிக அழகாகவும் இருப்பதனால் இன்றும் திருமணச் சேலைகளாக, கூறைகளாக பலரால் வாங்கப்படுகிறது.

மரபு ரீதியான ஆடைகள் செளகரிகமானவை, ஆத்மிக உணர்வைத் தருவன என்னும் உண்மையை உணர்ந்ததனால் போலும் இந்திய இலங்கைப் பெண்கள் இன்றும் தமது பண்பாட்டுக்குரிய சேலையை விடாது அணிந்து வருகின்றனர். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடு விட்டு நாடு போய் வாழ நேரிடுவது இன்று பொதுவிதியாக உள்ளது. அப்படி வாழ நேரும் இல்லாமியர் தவிர்ந்த பல இனத்தவரும் தத்தமது பண்பாட்டுக்குரிய ஆடையை விட்டு மேற்கத்தைய ஆடை வகைகளை அணிந்த போதும் இவ்வாறாக வெளிநாடுகளில் வாழும் இந்திய இலங்கைப் பெண்கள் குறைந்தது விசேட தினங்களுக்கும் ஆலய வழிபாட்டின் போதுமாவதும் தமது மரபார்ந்த ஆடையான சேலையை அணிந்து வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் போது நாம் அணியும் ஆடை என்பது நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் பறைசாற்றி நிற்கும். இவ்வாறு இந்திய இலங்கைப் பெண்களால் காப்பாற்றப்பட்டு உலகம் முழுவதையும் தனது அழகால் கவர வைத்த சேலையானது 21ம் நூற்றாண்டிலும் நாகரிக ஆடையாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

தக்ஷாலினி விக்னேஸ்வரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல